|
||||||||
ஆறாம் திருமுறை-69 |
||||||||
6.069.திருப்பள்ளியின்முக்கூடல்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர்.
தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.
2776 ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.1
தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய், பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய், கொன்றை மாலை அணிந்த சடையனாய், நன்மை தருபவனாய், ஒப்பற்றவனாய், நீராய், தீயாய், காற்றாய், நீண்ட வானமாய், ஆழ்ந்தகடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2777 விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.2
காளை வாகனனாய், தேவர்களால் தியானிக்கப்படுபவனாய், வேதம் ஓதுபவனாய், வெண்பிறைசூடிய சடையனாய், நீலகண்டனாய், மெய்ப் பொருளாய், ஒப்பற்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய், கூரியசூலப் படையை உடையவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2778 பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப்
புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயான் தன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின் முக்கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.3
நீறு அணிந்தவனாய், பொன்மலை போல்வானாய், முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய், வேதியனாய், வெண்காட்டில் உறைவானாய், வெண்மையான காளை வாகனனாய், தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய், திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவனாய், தலைவனாய், மை தீட்டிய கண்களை உடைய பார்வதிபாகனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2779 போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.4
யானையின் தோலைப் போர்த்தவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்புஎய்தவனாய், தூயனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய், அலைகள் கரையை அடைந்து மீண்டு வரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு, தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய், மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத்தோன்ற விழித்தவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2780 அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.5
தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள், துன்பங்கள், நோய்கள், பழைய தீவினைகள், வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய், கார்முகில் போன்ற நீலகண்டனாய், மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய், ஒப்பற்றவனாய், மெய்ப்பொருளாய், உத்தமனாய், தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றியிருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2781 கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.6
சிவந்த சடையின்மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய், தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய், தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய், விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய், தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய், ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது.
2782 நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் தோழனை நீடூ ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.7
கங்கை தங்கிய சடையினனாய், குபேரனுக்குத் தோழனாய், நல்லூர், நள்ளாறு, நல்லம், தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர், மறைக்காடு, ஆக்கூர், நீடூர், நெய்த்தானம், ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.
2783 நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலட் டானம் மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக்
குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.8
பெருந்தவத்தை உடையவனாய், நான்கு வேத வடிவினனாய், பெரியவனாய், பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய், சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய், கொடிய பாம்புகளைப் பூண்டவனாய், தம் தேவையைக் கருதித்தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2784 ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.9
ஊனாய், உடலாய், உயிராய், ஏழுலகமுமாய், தேவர்கள் தலைவனாய், பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய், பிறை சூடியாய், வளவி என்றதலத்தில் உறைபவனாய், பார்வதி காணப் பன்றியின் பின்போன வேடனாய், கயிலாய மலையில் உள்ளவனாய், ஒன்று பட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில், அப்பொழுது கறந்தபால் போல் இனியவனாய், பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2785 தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்
குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.069.10
தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு, தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி, அவன் நரம்பு ஒலியோடு இசைத்தபாடலை மகிழ்வோடு கேட்டு, இராவணன் என்ற பெயரையும், கூரிய வாளையும் கொடுத்தவனாய், கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய், உள்ளபள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.
திருச்சிற்றம்பலம்
6.069.திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர். தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.
2776 ஆராத இன்னமுதை அம்மான் தன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத் தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை நீரானைக் காற்றானைத் தீயா னானை நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.1
தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய், பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய், கொன்றை மாலை அணிந்த சடையனாய், நன்மை தருபவனாய், ஒப்பற்றவனாய், நீராய், தீயாய், காற்றாய், நீண்ட வானமாய், ஆழ்ந்தகடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2777 விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச் சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத் தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப் படையானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.2
காளை வாகனனாய், தேவர்களால் தியானிக்கப்படுபவனாய், வேதம் ஓதுபவனாய், வெண்பிறைசூடிய சடையனாய், நீலகண்டனாய், மெய்ப் பொருளாய், ஒப்பற்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய், கூரியசூலப் படையை உடையவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2778 பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப் புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை வேதியனை வெண்காடு மேயான் தன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம் ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர் பாதியனைப் பள்ளியின் முக்கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.3
நீறு அணிந்தவனாய், பொன்மலை போல்வானாய், முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய், வேதியனாய், வெண்காட்டில் உறைவானாய், வெண்மையான காளை வாகனனாய், தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய், திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவனாய், தலைவனாய், மை தீட்டிய கண்களை உடைய பார்வதிபாகனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2779 போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந் தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச் சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.4
யானையின் தோலைப் போர்த்தவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்புஎய்தவனாய், தூயனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய், அலைகள் கரையை அடைந்து மீண்டு வரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு, தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய், மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத்தோன்ற விழித்தவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2780 அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங் கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.5
தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள், துன்பங்கள், நோய்கள், பழைய தீவினைகள், வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய், கார்முகில் போன்ற நீலகண்டனாய், மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய், ஒப்பற்றவனாய், மெய்ப்பொருளாய், உத்தமனாய், தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றியிருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2781 கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங் கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன் சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத் திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார் வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய் மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப் பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.6
சிவந்த சடையின்மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய், தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய், தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய், விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய், தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய், ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது.
2782 நதியாருஞ் சடையானை நல்லூ ரானை நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை நிதியாளன் தோழனை நீடூ ரானை நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும் பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.7
கங்கை தங்கிய சடையினனாய், குபேரனுக்குத் தோழனாய், நல்லூர், நள்ளாறு, நல்லம், தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர், மறைக்காடு, ஆக்கூர், நீடூர், நெய்த்தானம், ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.
2783 நற்றவனை நான்மறைக ளாயி னானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ் செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந் திருவாரூர்த் திருமூலட் டானம் மேய கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக் குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும் பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.8
பெருந்தவத்தை உடையவனாய், நான்கு வேத வடிவினனாய், பெரியவனாய், பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய், சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய், கொடிய பாம்புகளைப் பூண்டவனாய், தம் தேவையைக் கருதித்தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2784 ஊனவனை உடலவனை உயிரா னானை உலகேழு மானானை உம்பர் கோவை வானவனை மதிசூடும் வளவி யானை மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற கானவனைக் கயிலாய மலையு ளானைக் கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.9
ஊனாய், உடலாய், உயிராய், ஏழுலகமுமாய், தேவர்கள் தலைவனாய், பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய், பிறை சூடியாய், வளவி என்றதலத்தில் உறைபவனாய், பார்வதி காணப் பன்றியின் பின்போன வேடனாய், கயிலாய மலையில் உள்ளவனாய், ஒன்று பட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில், அப்பொழுது கறந்தபால் போல் இனியவனாய், பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2785 தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையி னாலும் எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக் கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக் குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. 6.069.10
தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு, தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி, அவன் நரம்பு ஒலியோடு இசைத்தபாடலை மகிழ்வோடு கேட்டு, இராவணன் என்ற பெயரையும், கூரிய வாளையும் கொடுத்தவனாய், கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய், உள்ளபள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|