|
||||||||
ஆறாம் திருமுறை-86 |
||||||||
6.086.திருவாலம்பொழில்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர்.
தேவியார் - ஞானாம்பிகையம்மை.
2937 கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
கமலத்தோன் றலையரிந்த கபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.1
எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும், நுதலிடத்துக் கண் பெற்றவனும், பிரமனது தலையை அரிந்து, அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும், அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும், உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும், மறைக்காட்டிலும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மையுடையவனும் ஆகும், தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை, நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
2938 உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக
வுடையானை யுடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.2
களிற்றின் தோலை உரித்தவனும், அத்தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை உடையாகவும், உடையவனும், சடைமேல் கங்கையைத் தரித்தவனும், அழகிய கையிடத்து உருவத்தழலை ஏந்தியவனும், ஆலகால விடத்தை அமுது செய்தவனும், இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும், பவளப் பெருமலையன்னவனும், ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
2939 உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால்
கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.3
அயன், அரி, அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவம் ஓருரு ஆனவனும், ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும், உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும், இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும், தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக.
2940 பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை
வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று
வாரமதாம் அடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.4
முழுப்பூமியும், விசும்பும், பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும், வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும், அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும், வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும், எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும், வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும், சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2941 வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.5
மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும், மணி போன்றவனும், முத்து அனையானும், அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும், அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளுபவனும், வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும், பூந்துருத்தி வாழ்வானும், புகலூரானும் ஆகும், அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2942 விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.6
படைப்புக் காலத்து விரிந்தவனும், அழிப்புக் காலத்துக் குவிந்தவனும், வேதத்தின் வித்தானவனும், பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும், சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும், ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும், பலவாகிய அசுரர்கள் வாழ்புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2943 பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாருந் தன்னை யிகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.7
குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும், தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ, அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும், தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும், இடைவிடாமல் தன் பொன்னடிகளையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2944 ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.8
ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும், பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும், பராய்த்துறையிலும், வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும், ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும், பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும், துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2945 கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.086.9
கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும், நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும், பூணாக அணிகின்ற நாகமே நாணாகவும், மலையே வில்லாகவும், அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும், வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
திருச்சிற்றம்பலம்
6.086.திருவாலம்பொழில் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர். தேவியார் - ஞானாம்பிகையம்மை.
2937 கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த கபா லியை உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை உணர்வெலா மானானை ஓசை யாகி வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.1
எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும், நுதலிடத்துக் கண் பெற்றவனும், பிரமனது தலையை அரிந்து, அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும், அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும், உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும், மறைக்காட்டிலும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மையுடையவனும் ஆகும், தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை, நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
2938 உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக வுடையானை யுடைபுலியி னதளே யாகத் தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத் தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம் பரித்தானைப் பவளமால் வரையன் னானைப் பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச் சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.2
களிற்றின் தோலை உரித்தவனும், அத்தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை உடையாகவும், உடையவனும், சடைமேல் கங்கையைத் தரித்தவனும், அழகிய கையிடத்து உருவத்தழலை ஏந்தியவனும், ஆலகால விடத்தை அமுது செய்தவனும், இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும், பவளப் பெருமலையன்னவனும், ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
2939 உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால் கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக் காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந் திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.3
அயன், அரி, அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவம் ஓருரு ஆனவனும், ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும், உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும், இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும், தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக.
2940 பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம் பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத் தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று வாரமதாம் அடியார்க்கு வார மாகி வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ் சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.4
முழுப்பூமியும், விசும்பும், பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும், வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும், அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும், வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும், எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும், வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும், சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2941 வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப் பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத் திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.5
மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும், மணி போன்றவனும், முத்து அனையானும், அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும், அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளுபவனும், வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும், பூந்துருத்தி வாழ்வானும், புகலூரானும் ஆகும், அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2942 விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப் பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.6
படைப்புக் காலத்து விரிந்தவனும், அழிப்புக் காலத்துக் குவிந்தவனும், வேதத்தின் வித்தானவனும், பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும், சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும், ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும், பலவாகிய அசுரர்கள் வாழ்புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2943 பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை எல்லாருந் தன்னை யிகழ அந்நாள் இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச் சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.7
குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும், தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ, அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும், தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும், இடைவிடாமல் தன் பொன்னடிகளையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2944 ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப் பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப் பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப் பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப் பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச் சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.8
ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும், பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும், பராய்த்துறையிலும், வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும், ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும், பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும், துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2945 கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங் கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப் பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப் பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக் கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. 6.086.9
கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும், நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும், பூணாக அணிகின்ற நாகமே நாணாகவும், மலையே வில்லாகவும், அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும், வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|