ஈன்றஎன் உளமும் தோன்றும் மொழிபயின்ற வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும் பூவையும் கோங்கின் பொன்மலர் சூட்டிய பாவையும் மானும் தெருள்பவர் ஊரும் நெடுந்திசை நடக்கும் பொருள்நிறை கலத்தினைப் (5)
பெருவளி மலக்கச் செயல்மறு மறந்தாங்கு சேர மறுக முதுக்குறை உறுத்தி எரிதெறும் கொடுஞ்சுரத்து இறந்தன ளாக நதிமதம் தறுகண் புகர்கொலை மறுத்த (10)
கல்இபம் அதனைக் கரும்புகொள வைத்த ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன் மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத் துலக்குமலை ஒருநாள் கலக்குவ போல உழுவை உகிர்உழக்கும் ஏந்து கோட்டு உம்பல் உரிவை மூடி ஒளியினை மறைத்து (15)
தரைபடு மறுக்கம் தடைந்தன போல விண்ணுற விரித்த கருமுகிற் படாம்கொடு மண்ணகம் உருகக் கனற்றுமழல் மேனியை எடுத்து மூடி எறிதிரைப் பழனத்துப் பனிச்சிறுமை கொள்ளா முள்அரை முளரி (20)
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி மலர்தலை உலகத்து இருள்எறி விளக்கும் மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும் மறைஉகு நீர்க்குக் கருவும் கரியும் (25)
வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும் சேண்குளம் மலர்ந்த செந்தா மரையும் சோற்றுக் கடன்கழிக்கப் போற்றுயிர் அழிக்கும் ஆசைச் செருநர்க்கு அடைந்துசெல் வழியும் அருளும் பொருளும் ஆகித் திருவுலகு அளிக்கும் பருதிவா னவனே! (31)
|