குறுந்தொகையின் தாக்கத்தில் விளைந்த கவிதை. எந்தத் திணையில் வரும் என்று தெரியாது ஆனால் இது காதலில் தோல்வியுற்றோரின் "துன்பத்தினை"
சேரும் என்று நம்புகிறேன். இது "காலா" காலத்துக் காதல் கதை. வாசித்து அனுபவியுங்கள் அந்த காதல் ஜோடியின் சோகத்தை...
எப்படி இருப்பாளோ
வந்தவளும் பார்ப்பாளோ
வந்து அவளும் பார்ப்பாளோ
வருத்தமாய் இருப்பாளோ
வார்த்தையால் வதைப்பாளோ
கேள்விகள் கேட்பாளோ
வாள்விழியால் துளைப்பாளோ
கோபமாய் கொதிப்பாளோ
சோகமாய் இருப்பாளோ...
சாதியின் சவக்கிடங்கில்
சவமான காதல் கதை
வீதியில் வெட்டிச் சரிந்து
ரத்தம் சிந்திய சரித்திரம்
இனமென்னும் ஈனத்திற்கு
பிணமான அன்பின் வரலாறு
இன்றும் பசுமரத்தாணியாய்
தன்னுள் புதைந்து போன
அந்த நாள்...
நிமிர்ந்து நிற்கும் நிலவும்
தலைகுனிந்து நகர்ந்தது
தழுவிச் செல்லும் தென்றலும்
நழுவிச் சாலையோரம் சென்றது
கூவித்திரிந்த குயில்களும்
கூணிக் குறுகி குரலடைத்து நின்றது
ஆடித்திரிந்த மயில்களும்
ஓடி ஓரமாய் ஒதுங்கியது
வானத்து நட்சத்திரங்கள்
வழக்கத்திற்கு மாறாக
வெள்ளியை உமிழ்ந்திட
வள்ளியவள் வந்தாள் வாசலில்
பள்ளி கொண்டாள் இதயத்தில்
துள்ளி விளையாடும் இதழ்கள்
சொல்லி கதை பேசும் விழிகள்
தேவதையாய் தேரில் வந்து
கதவில்லாக் கருவறையில்
நிரந்தமாய் குடிபுகுந்தாள்
|
இரு உயிர் சுமந்தும்
இறகாக உணர்ந்தான்
சிறகடித்துப் பறந்தான்
மடியில் தலை வைத்து
கொடியின் இடை வளைத்து
வடிவை கண் ரசிக்க
முடிவை மனம் நினைக்க
நொடியாய் பறந்தன நாட்கள்
இரவு பகல் மாறாமல்
இடைமறிப்போர் பாராமல்
இன்பமென்னும் பெருங்கடலில்
தினம் முங்கி முத்தெடுத்து
மனம் மகிழ்வில் திழைத்திட
மணம் புரியத் துணிந்து
சம்மதம் வேண்டிட
மதம் கொண்ட ஓநாய்கள்
மதமென்ற போர்வையில்
வதம் செய்ய முயன்றிட
குணம் கெட்ட உறவுகள்
இனம் என்னும் பெயரால்
பிணமாவாயென பயமூட்டி
ரணம் செய்தது காதலை
உளியால் செதுக்கியே
உயர்வாய் நிறுத்திட
உருவான சிற்பமும்
சிதையாய் சிதைந்திட
அசைந்தால் போதுமே
வலியால் செதுக்கியே
நெஞ்சினில் நிறுத்திட
நிறைந்த நினைவுகள்
சதைகள் அழிந்திட
சிதையாய் போயினும்
கதைகள் பேசியே
வதையாய் வதைக்குமே
உண்மைக் காதலை
உலகுக்கு உணர்த்திட
உறவுக்கு இணங்கியே
உயிரற்ற உடல் இரண்டு
ஊர் கூடி வாழ்த்திட
திசைக்கு ஒன்றாய் பிரிந்து
திருமணம் என்ற பெயரில்
வேறு கூடு போய் சேர்ந்தது
ஊரும் மறந்து போனது
காலங்கள் கழிந்தது
இளமையும் தொலைந்தது
முதுமையும் அழைத்தது
முகம் காணா தேசத்தில்
முகமூடி வாழ்க்கையில்
|
முகம் மாறித் திரிகையில்
முகநூலில் முளைத்தது
முள்ளில்லா மலராக
சொல்லில்லா மடலாக
நண்பராக இணைய அழைப்பு
நிரந்தரமாய் பச்சைகுத்தினாலும்
நிறம் மாறிப் போகுமே
நரம்புகளில் பச்சைகுத்தி
நாளங்களில் சுற்றி வரும்
நட்பன்றோ இருவருக்கும்
வலைத்தளத்தில் வந்தாலும்
விலையில்லா அழைப்பன்றோ
பிழையாக இருந்தாலும்
நிலையான நட்பானது
வருடங்கள் பல கடந்து
உருவங்கள் மாறினாலும்
உள்ளத்தில் உறங்குகின்ற
உயிருக்கு வயதேது
சிந்திய கண்ணீரும்
சிந்தித்த எண்ணமும்
மாசு மலையாக குவிந்து
மனதில் புதைந்த சிலையை
தூசு தட்டி எடுத்து
பாழடைந்த கோவிலை
தாழ் திறந்து புதுப்பித்து
அருள்மிகு உருவாகி
கருவறையில் தெய்வமானாள்
பிறந்த மண்ணிற்கு
இறந்த காலம் காண
திறந்த மனதோடு
பிரிந்த உறவுகள் தேடி
திரிந்து அலைகிறான்
தொலைந்த நாட்களை
தொலைத்த உறவுகளை
தொலைத்த இடத்தில்
தேடித் திரிகிறான்
முகவரி தெரிந்தும்
முகம் காண முடியாமல்
மனம் ஏனோ தவிக்க
தினம் செத்துப் பிழைக்க
இனம் என்ற சொல்லை
சினம் கொண்டு சபித்து
பிணமாக நடந்து திரிகிறான்
பார்ப்பாளோ மாட்டாளோ
விடை தெரியாமல்...!!!!
#வாஞ்சிவரிகள்#
|