நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து திக்குநிலை படர்ந்த முகில்பா சடையும் இடையிடை உகளும் மீனாம் மீனும் செம்முகில் பழநுரை வெண்முகில் புதுநுரை எங்கும் சிதறிப் பொங்கியெழு வனப்பும் (5)
பலதலை வைத்து முடியாது பாயும் எங்கும் முகம்வைத்தக் கங்கைக் காலும் கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள் முயல்எனும் வண்டுண அமுதநறவு ஒழுக்கி தேவர் மங்கையர் மலர்முகம் பழித்து (10)
குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த மதித்தா மரையே! மயங்கிய ஒருவேன் நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள மீன்பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி சூல்வயிறு உளைந்து வளைகிடந்து முரலும் (15)
புன்னையம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும் மீன்உணவு உள்ளி இருந்தவெண் குருகெனச் சோறு நறைகான்ற கைதைய மலரும் பலதலை அரக்கர் பேரணி போல மருங்கு கூண்டெழுந்து கருங்காய் நெருங்கி (20)
விளைகள் சுமந்த தலைவிரி பெண்ணையும் இன்னும் காணாக் காட்சிகொண் டிருந்த அன்னத் திரளும் பெருங்கரி யாக சொல்லா இன்பமும் உயிருறத் தந்து நாள்இழைக் திருக்கும் செயிர்கொள் அற்றத்து (25)
மெய்யுறத் தணந்த பொய்யினர் இன்று நெடுமலை பெற்ற ஒருமகள் காண நான்முக விதியே தாளம் தாக்க அந்த நான்முகனை உந்தி பூத்தோன் விசித்து மிறைபாசத்து இடக்கை விசிப்ப (30)
மூன்றுபுரத்து ஒன்றில் அரசுடை வாணன் மேருக் கிளைத்த தோள்ஆ யிரத்தொடும் எழுகடல் கிளர்ந்த திரள்கலி அடங்க முகமவேறு இசைக்கும் குடமுழுவு இரட்ட புட்கால் தும்புரு மணக்கந் திருவர் (35)
நான்மறைப் பயனாம் ஏழிசை அமைத்து சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்றென ஏழு முனிவர்கள் தாழும் மாதவர் அன்பினர் உள்ளமொடு என்புகரைந் துருக விரல்நான்கு அமைத்த அணிகுரல் வீங்காது (40)
நான்மறை துள்ளும் வாய்பிள வாது காட்டியுள் உணர்த்தும் நோக்கம் ஆடாது பிதிர்கணல் மணிசூழ் முடிநடுக் காது வயிறு குழிவாங்கி அழுமுகம் காட்டாது நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை (45)
பேசாக் கீழ்இசை ஒருபுறம் ஒட்டல் நெட்டுயிர்ப்பு எறிதல் எறிந்துநின்றி ரட்டல் ஓசை இழைத்தல் கழிபோக்கு என்னப் பேசறு குற்றம் ஆசொடும் மாற்றி வண்டின் தாரியும் கஞ்ச நாதமும் (50)
சிரல்வான் நிலையும் கழைஇலை வீழ்வதும் அருவி ஓசையும் முழவின் முழக்கமும் வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும் இன்னுமென் றிசைப்பப் பன்னிய விதியொடு மந்தரம் மத்திமம் தாரம் இவைமூன்றில் (55)
துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல் கூடிய கானம் அன்பொடு பரவ பூதம் துள்ள பேய்கை மறிப்ப எங்குள உயிரும் இன்பம் நிறைந்தாட நாடக விதியொடு ஆடிய பெருமான் (60)
மதுரை மாநகர்ப் பூழிய னாகி கதிர்முடி கவித்த இறைவன் மாமணிக் கால்தலைக் கொள்ளாக் கையினர் போல நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும் கண்டது கூறுதி ஆயின் எண்தகப் போற்றிநின் கால்வணங் குதுமே. (66)
|