சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெனும் ஒருகால் சுமந்த விண்படர் பந்தரின் மூடிய நால்திசை முகில்துகில் விரித்து பொற்சிலை வளைத்து வாயில் போக்கி சுருப்பணி நிரைத்த கடுக்கைஅம் பொலந்தார் (5)
நிரை நிரை நாற்றி நெடுங்காய் மயிர் அமைத்து ஊதையில் அலகிட்டு உறைபுயல் தெளித்து போற்றுறு திருவம் நால்திசைப் பொலிய மரகதத் தண்டின் தோன்றி விளக்கெடுப்ப குடத்தியர் இழுக்கிய அளைசித றியபோல் (10)
கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப பிடவலர் பரப்பிப் பூவை பூஇட உயர்வான் அண்டர் கிளைவியப் பெய்த உறவுஇணை நட்பு கிளைவியப் பெய்த முகில்முழவு அதிர ஏழிசைமுகக்கும் (15)
முல்லை யாழொடு சுருதிவண்டு அலம்ப களவலர் சூடி புறவுபாட் டெடுப்ப பசுந்தழை பரப்பிக் கணமயில் ஆல முல்லையம் திருமகள் கோபம்வாய் மலர்ந்து நல்மணம் எடுத்து நாளமைத்து அழைக்க (20)
வரிவளை முன்கை வரவர இறப்பப் போனநம் தனிநமர் புள்இயல் மான்தேர் கடுவிசை துரந்த கான்யாற் றொலியின் எள்ளினர் உட்க வள்இனம் மடக்கிமுன் தோன்றினர் ஆதலின் நீயே மடமகள்! (25)
முன்ஒரு காலத்து அடுகொலைக்கு அணைந்த முகிலுருப் பெறும்ஓர் கொடுமரக் கிராதன் அறுமறைத் தாபதன் அமைத்திரு செம்மலை செருப்புடைத் தாளால் விருப்புடன் தள்ளி வாயெனும் குடத்தில் வரம்பற எடுத்த (30)
அழுதுகடல் தள்ளும் மணிநீர் ஆட்டி பின்னல்விட் டமைத்த தன்தலை மயிரணை திருமலர் விண்புக மணிமுடி நிறைத்து வெள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி வைத்தமை யாமுன் மகிழ்ந்தமுது உண்டவன் (35)
மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான் கூடல்நின் றேத்தினர் குலக்கிளை போலத் துணர்பெறு கோதையும் ஆரமும் புனைக புதையிருள் துரக்கும் வெயில் மணித் திருவும் தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக (35)
இறைஇருந்து உதவா நிறைவளைக் குலனும் பெருஞ்சூ டகமும் ஒருங்குபெற் றணிக நட்டுப் பகையினர் உட்குடி போல உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும் கொலையினர் நெஞ்சம் கூண்டவல் இருளெனும் (40)
ஐம்பால் குழலையும் அணிநிலை கூட்டுக விருந்துகொண் டுண்ணும் பெருந்தவர் போல நீங்காத் திருவுடை நலனும் பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே! (44)
|