அதில் முதன்முதலாய்க் காய்த்த
சின்னஞ்சிறு பசுங்காய்.
முள்ளடியில்
அடர்தழையடியில்
ஒடுங்கி ஒளிந்து கனியத் துடிக்கும்
காப்புணர்வு அதற்கு.
அந்தக் கரட்டில்
ஏறுவோர் இல்லை.
ஏறினும் பாறையடிவரை
பரவுவோர் இல்லை.
காய்கொத்தித் தின்னும்
பறவையோ அணிலோ இல்லை.
உள்ளங்கைக் குழியளவு
புளிப்புச் சாறு திரண்ட
அந்தச் சிறுகாய்க்கே
அத்தனை உள்ளுணர்வு துள்ளும்போது
மக்களே,
நீங்கள் எத்தனை எச்சரிக்கையோடு
இருக்கவேண்டும்... தெரியுமோ ?
- கவிஞர் மகுடேசுவரன்