LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- கட்டுரைகள்

நீர் உடும்பு

நீர் உடும்பு

                                       ஏற்காடு இளங்கோ

                                                  அறிவியல் எழுத்தாளர், yercaudelango@gmail.com  

 

தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் உடும்பு எனப்படும் ஊர்வனத்தைப் பார்த்திருப்போம். ஆனால் நீர் உடும்பைப் பார்த்திருக்க முடியாது. நான் இலங்கையில் முதன் முதலாக நீர் உடும்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். சிங்கள மொழியில் கபராகோயா (Kabaragoya) மற்றும் சபாலா எனப் பெயர். அங்கு வாழும் தமிழர்கள் இதனை கலாவதன் (Kalawathan) என்கின்றனர்.

 

உடும்பு பெரிய ஊர்வனவாகும். இது பல்லி வகையைச் சேர்ந்த பேரினமாகும். நீர் உடும்பானது (Water monitor) தென் மற்றும் தென் கிழக்குப் பகுதியைத் தாயகமாகக்  கொண்டுள்ளது. அதாவது இலங்கை, இந்தோனேசியா தீவுகள் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்றன. மலேய நீர் உடும்பு, சாதாரண நீர் உடும்பு, ஆசிய நீர் உடும்பு, இருபட்டை நீர் உடும்பு, அரிசி பல்லி, மோதிரப் பல்லி, வெற்று பல்லி, குறியீடுகள் இல்லா பல்லி எனப் பல்வேறு பெயர்களால் இதனை அழைக்கின்றனர். இருப்பினும் பொதுவாக வாட்டர் மானிட்டர் அதாவது நீர் உடும்பு என்றே அழைக்கப்படுகிறது.

 

உடலமைப்பு

 

கொமோடா டிராகன் (Komodo dragon) என்கிற பல்லிதான் உலகத்திலேயே மிகப்பெரியது ஆகும். அதற்கு அடுத்தபடியாக நீர் உடும்பே இரண்டாவது பெரிய பல்லியாகும். இது ஒரு குளிர் ரத்தப்பிராணி. இந்த உடும்பு தன் வாழ்நாள் முழுவதும் வளர்கிறது. பெண்ணை விட ஆண் பெரியது. சுமார் 1.5 முதல் 2 மீட்டர் வரை அதாவது 5 – 6.6 அடி நீளம் வரை வளரும். இலங்கையில் 10.5 அடி நீளம் கொண்ட ஒரு நீர் உடும்பை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த உடும்புகள் சுமார் 19 கிலோ எடை வரை வளர்ச்சியடையும்.

 

இந்த நீர் உடும்புகளின் நீளம் மற்றும் எடை நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. இவற்றுக்குக் கூரான தலையும், மெல்லிய கழுத்தும் உண்டு. நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அசைந்து, அசைந்து நடந்து செல்லும். வலுவான தாடையும், கூரிய பற்களும் கொண்டுள்ளன. வாலானது சாட்டை போல் நீண்டுள்ளது. நகத்தையும், வாலையும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. உடலானது அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறமுடையது. உடலின் அடிப்பகுதியில் மஞ்சள் நிற அடையாளங்கள் இருக்கும். நீர் உடும்பு வளர வளர மஞ்சள் நிறம் மறைந்து விடும்.

 

உணவுப் பழக்கம்

இது ஒரு அனைத்துண்ணி. இது நீரில் நன்கு நீந்தும். மிக அதிகளவில் வேட்டையாடி உண்ணும் பழக்கமுடையது. மீன், தவளைகள், பறவைகள், பாம்புகள், நண்டுகள், எலி, கொறித்துண்ணிகள் போன்றவற்றை உண்ணும். மேலும் ஆமை, முதலையின் முட்டைகள், குட்டிகள் ஆகியவற்றையும் உண்கிறது. மேலும் இவை கெளுத்தி மீன்களை (Catfish) விரும்பி உண்கிறது. தனது முன்கால்களால் இறையை நன்கு பிடித்துக் கொண்டு கூரிய பற்களால் மாமிசத்தைத் துண்டுகளாக்கி அதன் பின்னர் விழுங்குகின்றன.

 

நீர் உடும்பு நீரிலும், நிலத்திலும் உள்ள விலங்குகளை வேட்டையாடுகின்றன. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் அதிகம் திரிந்து கொண்டிருக்கும். தனது எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மரத்தில் ஏறுவதும் உண்டு. பிறகு அருகில் உள்ள ஓடை, நீர் நிலைகளில் குதித்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. நீரில் நீந்தும்போது தனது வாலைத் துடுப்பாகப் பயன்படுத்துகிறது.



விஷம்

நீர் உடும்பிற்கு விஷம் இருக்கிறதா என்கிற ஆய்வுகள் நடத்தப்பட்டது இதன் வாயில் விஷச் சுரப்பிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இதன் வாயில் ஒரு வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. மனிதனையோ அல்லது விலங்கையோ கடித்து விட்டால் பாக்டீரியா தொற்றுகளால் பாதிப்பு ஏற்படும். அதனால் உயிரிழப்பு நேரிடலாம். ஒரு விலங்கை இறையாகப் பிடிக்கும் போது இதன் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இதற்கு உதவுகின்றன. பாக்டீரியாக்களின் உதவியால் உணவு எளிதில் செரிக்கப்படுகிறது

 

பாதுகாப்பு

நீர் உடும்பின் விலங்கியல் பெயர் வாரனஸ் சால்வாடர் (Varanus salvator) என்பதாகும். இதில் சில கிளை இனங்களும் உள்ளன. இந்தோனேசியாவில் இதைச் சமைத்து உண்கின்றனர். சில நாடுகளில் இதனை வேட்டையாடி தோல் வர்த்தகம் செய்கின்றனர். வருடத்திற்கு 1.5 மில்லியன் நீர் உடும்புத் தோல்கள் வர்த்தகம் செய்யப்படுகிறது. பெல்ட், காலனிகள், தோள் பை மற்றும் ஃபேஷன் பொருட்களும் இதன் தோலில் தயாரிக்கின்றனர். தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நீர் உடும்பைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையும் மக்களிடம் இல்லை. ஆகவே இதைப் பாதுகாக்க வேண்டும் எனப் பன்னாட்டு இயற்கை அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.