2019 -ம் ஆண்டு 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுத விரும்புவோர் குறிப்பிட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
2019 -ம் ஆண்டு தனித்தேர்வர்களாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர் நவம்பர் 26ம் தேதி முதல், டிசம்பர் 5ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு எழுத 1.1.2019 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் 125, ஆன்லைன் பதிவு கட்டணம் 50 சேர்த்து 175 ஐ சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்/ பதிவுத்தாள் நகல்/ பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
8- ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஏற்கனவே எழுதிய தேர்வு சான்றிதழ்/ சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
|