|
||||||||
சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages |
||||||||
MASTERS ACADEMY OF SPEECH AND TRAINING (MAST) Singapore அமைப்பு சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஆதரவோடு நேர்த்தியாக ஏற்பாடு செய்த "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீட்டு விழா தேசிய நூலகத்தில் ( National Library Board ) மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு முதல் நூலை தமிழாளுமை முனைவர் செல்லகிருஷ்ணன் அவர்கள் வெளியிட தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தினர் நிறுவுனரும் எழுத்தாளருமான திரு.யூசுப் ரஜித் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் முனைவர் செல்லகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய நூல் குறித்தான திருக்குறள் உரை மிக நேர்த்தியாக அமைந்தது. பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளுடன் இந்நூலின் முக்கியத்துவத்தை வலியுருத்திப் பேசினார். மேலும், இதுபோன்ற பன்னாட்டு ஆய்வுப்பணிகளை நேர்த்தியாக செய்வது என்பது ஒரு அரசாங்கங்கள் , பல்கலைக்கழகங்கள் போதிய நிதி ஒதுக்கி , பல்வேறு குழுக்களை , ஆளுமைகளை ஒருங்கிணைத்து செய்யவேண்டிய செயல். இதை எவ்வித பெரிய நிதி ஆதாரமும் இல்லாமல் பொதுநலனுக்காக,தமிழுக்காக செய்துமுடித்துள்ள இக்குழு பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் 1595 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு முதல் 2022ல் வெளிவந்த நரிக்குறவர் இன மொழியான வாக்கிரி பூலி மொழிவரை திருக்குறளை ஒட்டிய மொழிபெயர்ப்புகளைப் பற்றிய விவரப்பெட்டகமாக இந்நூல் உள்ளது என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் 212 பக்கங்களை கொண்டுள்ளது. திருக்குறளை ஆராய முற்படுவோருக்கு இந்நூல் முக்கிய ஆவணமாகத் திகழும் என்று சிறப்புரையில் குறிப்பிட்டார் முனைவர் செல்லகிருஷ்ணன்.
எந்தப் பகுதிகள் மூலநூல், எவை இடைச்செருகல் என இத்தகைய பகுப்பாய்வுகள் அடையாளப்படுத்த உதவுகின்றன எனக் குறிப்பிட்டார். திருக்குறள் போற்றப்பட்டாலும் அதற்குரிய போதிய உலக அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் இனி யுனெசுக்கோவில் பொது மரபு உடைய நூலக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற இலக்கையும் இந்நூல் குறிப்பிடுவதை வெகுவாகப் பாராட்டினார்.
முதல் நூலை முனைவர் செல்ல கிருட்டிணன் வெளியிட அதை தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் நிறுவுனரும் எழுத்தாளருமான திரு.யூசுப் ரஜித் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியை திரு.பாண்டிதுரை நேர்த்தியாக ஆவணப்படுத்தினார். இந்நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஞர் எழுத்தாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ,உலகத்த தமிழாசிரியர் பேரவைத் தலைவர் திரு.சாமிக்கண்ணு, தமிழ் கல்வித்துறையில் பணியாற்றும் முனைவர்.சந்தன் ராஜ், முனைவர். அன்பழகன் , முனைவர்.ஜெகதீசன், கவிஞர் இறை.மதியழகன் என்று வலைத்தமிழ் , சமூக வலைதள நண்பர்கள் , இலக்கிய ஆளுமைகள் , ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டது நிகழ்ச்சியை மெருகேற்றியது. ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு முக்கியமான மாதம். தமிழ்மாத திருவிழாவாக 140 விழாக்களை ஒருங்கிணைக்கும் 40 அமைப்புகளில் அனைவரும் தன்னை இணைத்துக்கொண்டு பம்பரமாக சுழண்டுகொண்டிருப்பார்கள். இருப்பினும் என் தனிப்பட்ட பயணம் ஏப்ரல் மாதத்தில் அமைந்ததால் ஒரு நிகழ்ச்சியை நேர்த்தியாக ஒருங்கிணைப்பதில் சவால் உள்ளது என்பதை உணர்ந்தேன். அனைத்து ஆளுமைகளும், அமைப்புகளும் அவரவர்களது அமைப்பின் தாய்மொழிமாத விழாவில் ஓடிக்கொண்டிருக்க, நேரில் பார்த்திராத , சமூக வலைத்தளங்கள், தொலைபேசி வழியே மட்டுமே நட்பில் இருக்கும் முனைவர்.ராஜி ஸ்ரீநிவாசன் அவர்கள் தான் சார்ந்த தமிழ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது ஒருபுறம் , அதே வாரத்தில் வரும் தனது 60ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் பல நாடுகளிலிருந்து வருபவர்களை கவனிப்பது ஒருபுறம், தனது அலுவலகப் பணிகளில் ஓடிக்கொண்டிருப்பது ஒருபுறம் என்று பல திசைகளில் கவனம் செலுத்தினாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் பார்த்தா, சிறப்பாக செய்வோம் என்று இந்த நூல் வெளியீட்டையும் அவர் முன்னெடுத்து நேர்த்தியாக செய்து முடித்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. டாக்டர்.உதயமூர்த்தி அவர்கள் எழுதும்போது "வேலை இருப்பவர்களிடம் வேலைகொடு" என்று. பல வேலைகளை நேர்த்தியாகத் திட்டமிட்டு தொடர்ந்து செய்பவர்களிடம் புதிய இன்னொரு வேலையைக் கொடுத்தால் அவர்கள் அதையும் எப்படி சமாளிப்பது என்று உத்தி அறிந்து அதையும் சேர்த்து நேரநிர்வாகம் செய்து முடித்துவிடுவார்கள். என்று கூறுவார். அப்படி பல பணிகளை ஒருங்கே செய்யும் ஆற்றலும் , வேகமும், ஆர்வமும் , பேரன்பும் கொண்ட அன்பிற்குரிய முனைவர்.ராஜி ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திமுடித்தார். சிங்கப்பூரில் நூல் தேவைப்படுவோர் முனைவர்.ராஜி அவர்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது https://estore.valaitamil.com/ இணையத்தில் தொடர்புகொள்ளவும். வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
||||||||
by Swathi on 28 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|