ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்றும், நேற்று முன் தினமும் நடைபெற்றது. இதில் லோக்சபா தேர்தல் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது; 300 இடங்களில் போட்டியிடப்படும். மக்களிடையே ஆம் ஆத்மி மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக பெருகி உள்ளது; எங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருவதால் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இறங்க இதுதான் சரியான நேரம் என உணர்கிறோம். பிரிட்டிஷ் கால விஐபி கலாச்சாரத்தை ஒழித்து, மக்கள் மீது கவனத்தை செலுத்த ஆம் ஆத்மி முடிவெடுத்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்; இதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்; தேர்தல் பிரசாரத்திற்காகவும் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது; தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்த கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள், இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது; ஜனவரி 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்; ஜனவரி 15 க்கிற்கு பின் விண்ணப்பங்கள் குறித்து 3 பேர் குழு முடிவு செய்யும்; ஜனவரி 15ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படும்; தேர்தல் அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும்; அரியானாவில் 10 லோக்சபா தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும்; ஜனவரி 10ம் தேதி முதல் பிரசாரத்தை துவங்க உள்ளோம் என யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.
|