LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள்-சாமிகள் Print Friendly and PDF
- சாமிகள்

ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன்

ஐயனாரைத் தேடி...5
 
ஐயனார் அத்தனை எளிதாகப் பிடி கொடுக்கிறவராக இல்லை, தமிழர்களின் பழங்கால வழிபாட்டு முறைகள் (கி.மு. 500க்கு முந்தைய காலம்) "மெகாலித்திக்" எனப்படும் பெரிய கற்காலத்தில் இருந்து பிரம்மாண்டமாக விரிகிறது.
 
இது கற்காலம், செப்புக்காலம், இரும்புக் காலம் போன்றதொரு காலம் அல்ல, உலகெங்கும் பல்வேறு காலகட்டங்களில் ஒரே மாதிரியான கல் கட்டுமான மரபு பரவிய ஒரு பண்பாட்டு நிகழ்வு.
 
பெருங்கற்காலம் கி.மு 3000த்தில் துவங்கி கி.மு 300 வரை உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட அகழாய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் வழியாக நிறுவப்பட்டிருக்கும் காலம்.
 
இந்தியா, ஐரோப்பா, இந்தோனேஷியா, ஆப்ரிக்கா, கொரியா மற்றும் பரவலாக உலகெங்கும் பெருங்கற்காலக் கட்டுமானங்கள் காணக்கிடைக்கிறது.
"டோல்மென்" எனப்படும் மேசை வடிவக் கல்லறைகள், "மென்ஹிர்" எனப்படும் நிற்கும் கல் தூண்கள், கல் வண்ணங்களால் குறிக்கப்பட்ட நினைவிடங்கள், கற்பெட்டி அடக்கம் (சிஸ்ட்), கல்லுறை அடக்கம், மற்றும் தாழி அடக்கம் போன்றவை இந்தக் காலத்தின் மிக முக்கியமான அடையாளங்கள்.
 
பெரும்பாலும் இந்த கற்கால அடையாளங்கள் மூன்று முக்கியமான பொருளடக்கம் கொண்டது. முதலில் இறந்தோருக்கான கல்லறைகள், முன்னோர் வழிபாடு, எல்லைக் குறியீடுகள் மற்றும் வானிலையைக் கணிக்கும் இடங்கள்.
தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 1000த்துக்கும் மேற்பட்ட செழுமையான மெகாலித்திக் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் உலக அளவில் பேசுபொருளாக மாறிய இடங்கள் ஆதிச்சநல்லூர், பொருந்தல், கொடுமணல், கீழடி ஆகியவை.
ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்), காலம் கி.மு. 1500–1000 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : இரும்புப் பொருட்கள், கல்லுறை அடக்கம் (தாழிகள்), தங்க மகுடம்.
 
கீழடி (சிவகங்கை மாவட்டம்) காலம் கி.மு. 600–300 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : கல்லுறை, பாண்டங்களில் கீறல் குறியீடுகள், உலகளாவிய நகர்ப்புற வணிகத் தொடர்புக்கான சான்றுகள், தங்க அணிகலன்கள்.|
கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) காலம் கி.மு. 300 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : இரும்பு உருக்காலை, மாணிக்க மணிகள், ரோமானியத் தொடர்பு.
 
பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்), காலம் கி.மு. 500 வரை, கிடைத்த தொல்லியல் சான்றுகள் : கண்ணாடி மணிகள், நெல் புதைகலன்கள்.
தெற்காசியாவின் முதல் இரும்புப் பயன்பாடு கி.மு 1200 வரையிலான மெகாலித்திக் ஆய்விடங்களில் கிடைத்திருக்கிறது. இது வட இந்தியாவின் வண்ணம் பூசப்பட்ட மட்பாண்டக் (Painted Grey Ware - PGW) காலத்திற்கும் முந்தையது.
தமிழகத்தில் நீர்நிலைகள் (ஆறு, குளம், கடல்) அருகே காவல் தெய்வங்கள் பரவலாக உண்டு, தமிழர் நாட்டார் வழிபாட்டு அடையாளங்களான இவை தமிழ் நிலமெங்கும் வழிபாட்டு முறைகளில் ஒரே மாதிரியானவை.
 
கிராம எல்லையில் அமைந்த கோயில்கள், கண்மாய்களுக்கு அருகில் இருக்கும் டெரகோட்டா மண் குதிரைகள், அடர் மரங்கள், அலைகள் (அம்மன், கருப்பு சாமி, பேச்சி, சுடலைமாடன்). இவை பெரும்பாலும் மழை, விளைச்சல், நோய் மற்றும் காட்டு விலங்குகள் தடுப்புக்கு பாதுகாவலர்கள்.
நம்முடைய ஐயனாரிடம் பிற நாட்டார் தெய்வங்களிடமும் இரும்பாலும், பிற உலோகங்களாலும் ஆன அரிவாள், வேல், செண்டு போன்ற ஆயுதங்கள் கி.மு 1500 முதலே காணக் கிடைக்கிறது.
 
அப்படியானால் இரும்பு மற்றும் உலோகப் பயன்பாட்டில் நாம் முன்னோடிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கான முழுமையான தரவுகள் நம்மிடம் உண்டு.
 
நெருப்பு எப்படி ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து நவீன மனிதர்களை உருவாக்கியதோ அதே போல் நவீனப் பழங்குடி மனிதர்களின் வாழ்வில் உலோகப் பயன்பாடு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது.
 
இரும்பு உலகெங்கும் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்திற்கு வந்துவிட்டது. இன்றைய துருக்கியான, அன்றைய ‘ஹிட்டைட் பேரரசில்’ (The Hittiite Dynasty), கி.மு.1400 முதல் கி.மு.1200 வரையான காலங்களில், இரும்பு முதன்முதலாக அறிமுகமாகியது என்று வரலாற்றுக் குறிப்புகள் தரவுகளோடு சொல்கின்றன.
அதாவது கி.மு 1200 இல் ஆதி மனிதர்களின் இரும்புக் காலம் துவங்குகிறது. பனியுகம், கற்காலம் இவற்றைக் கடந்து இரும்பு யுகம் கி.மு 1500 வாக்கில் துவங்கியதாக ஆய்வாளர்கள் சொல்லி வந்தார்கள்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ முதன்முதலாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட இரும்பை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கண்டு பிடித்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதல்ல செய்தி.
இயல்பாகத் தனிமங்களின் கண்டுபிடிப்பு என்பது மனித வரலாற்றில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் நிகழ்ந்தே வந்திருக்கிறது.
பிற உலோகங்களைப் போல, மனிதனால் இரும்பை அத்தனை எளிதாகக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை. தனி மனிதர்களால் கண்டறியப்படாத வகையில் அது கொஞ்சம் சிக்கலான தனிமம்.
 
பிற மதிப்புமிக்க உலோகங்களாக மாறிய தங்கம், தாமிரம், துத்தநாகம், அலுமினியம், காரீயம் போன்றவை பாறைப்படிவுகளில் அல்லது தாதுமணலில் கலந்திருக்கும். இவற்றைப் பிரித்து எடுப்பதற்கு மானுடக் கூட்டுழைப்பு மட்டுமே தேவை.
ஆனால், இயற்கையாகத் தாதுமணலில் தூய இரும்பு கிடைப்பதில்லை. கலப்படமற்ற தூய இரும்பு (Fe), மிக எளிதாக வளிமண்டல ஆக்சிஜனுடன் (Oxygen) வேதிவினை கொண்டு, இரும்பு ஆக்சைடாக (Ferric oxide) மாறி விடும்.
இரும்பு ஆக்சைட் மட்டுமே இயற்கைத் தாது மணலில் (Iron Ore) கலந்திருக்கும்.
இரும்பு ஆக்சைடு மூன்று வகைகளில் கிடைக்கும்.
 
முதல் வகை இரும்பு ஆக்சைடு (FeO) நிலையாக இருப்பதில்லை. இது ஆக்ஸிஜனுடன் (O2) சுலபமாக வினைபுரிந்து, ‘Fe2O3’ என்னும் அடுத்தவகை இரும்பு ஆக்சைடாக மாறிவிடுகிறது.
ஆகவே, முதல் வகை மிகவும் அரிதானது. ஆனால், பிற இரண்டு ஆக்சைடு வகைகள் தாதுமணலாக் கிடைக்கின்றன. சிவப்பு, பழுப்பு, கருப்பு வண்ணத்தில் மண் அல்லது பாறைகளோடு காணப்படும்.
இவற்றை வேதியியலில் ஹெமடைட் (Hemetite), மக்னடைட் ( Magnatide) என்பார்கள்.இந்த இரண்டு தாதுமணற் கலவையில் இருந்து தான் தூய இரும்பு வார்க்கப்பட வேண்டும்.
 
ஆனால் இந்த வேதிவார்ப்புச் செயற்பாட்டுக்கு மிகப்பெரிய அறிவியல் துணை வேண்டும். நவீன எந்திரங்களைப் போன்ற பெருவுலைகள் வழியாக நினைத்துப் பார்க்க இயலாத வெப்ப அளவை உருவாக்க வேண்டும்.
இயல்பான நிலமேற்பரப்பு மண் பெரும்பாலும் பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். கரிசல் நிலங்களில் மண் கருப்பு வண்ணத்திலும், வறண்ட நிலங்கள் சிலவற்றில் சிவப்பு கலந்த பழுப்பாகவும் இருக்கும்.ஆனால், இரும்புத் தாது கலந்த மேக்னடைட் அல்லது ஹேமடைட் உள்ளடங்கிய மண்ணின் நிறம் இவற்றில் இருந்து நுட்பமாக வேறுபட்டது.
 
தாது மணலை வெப்பமயப்படுத்தும் போது உலோகங்களைப் பிரிக்கலாம் என்ற அறிவியல் தமிழர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவர்கள் இரும்பையும் அதே வழிமுறைகளில் தனித்தெடுக்க முயற்சி செய்தார்கள்.
வழக்கமாக வேறு சில உலோகங்களைப் பிரிக்கக் கையாளும் வழிமுறையாக மரக்கட்டைப் படுக்கையின் மீது மண்ணைக் கொட்டி உருக்கும் தொழில்நுட்பம் கைகொடுக்கவில்லை.
 
இரும்புத் தாது நேரடியாக உருகாது, முதலில் அதிலுள்ள ஆக்ஸிஜனை நீக்க வேண்டும் (Reduction Process) கார்பன் அனல் உலையில் (Blast Furnace) 1,200–1,500°C வெப்பத்தில் திரவ இரும்பு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
இப்போதுதான் மானுட குலம் நினைத்துப்‌ பார்க்க முடியாத ஒரு ஒப்பற்ற தொழில்நுட்பத்தை தமிழர்கள் கண்டைகிறார்கள். ‘இரும்பிற்கான காற்று அனல் உலை’ (Bloomery Furnace) தமிழர்களால் உருவாக்கப்பட்டது.
 
கி.மு.700 களில் சூடான் நாட்டில் களிமண்ணால் உருவாக்கப்பட்ட அனல் உலைகள் (Bloomery Furnaces) பயன்படுத்திய வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. அனல் உலைகள் அங்குதான் முதன்முதலாக உருவாக்கப் பட்டதாக இதுவரை சொல்லப்பட்டு வந்தது.
இரும்பு தனித்த உலோகமாக மிக மென்மையானது, ஆனால் வண்ணமும் உறுதியும் அற்றது. இரும்புக் குழம்பை உறுதியாக மாற்ற அதனுடன் குறிப்பிட்ட அளவில் அதனுடன் கார்பன் கலக்கப்பட வேண்டும். மிகக்குறைந்த அளவிலான சரி விகிதத்தில் கார்பன் கலக்கப்பட வில்லையெனில் அது உருக்குலைந்து பயன்பாட்டுக்கு உதவாது.
 
நாம் இப்போது ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை நோக்கித் திரும்ப வேண்டும். இங்கெல்லாம் தமிழர்கள் இரும்பை அதாவது கார்பன் கலந்த இரும்பு எஃகுவை உருவாக்கியிருக்கிறார்கள்.
 
எப்படி, எங்கே, ஏன் இரும்பைத் தமிழர்கள் மிக இலகுவாகக் கையாண்டார்கள் என்ற கேள்வியோடு சித்த மருத்துவத்தின் புடம் போடுதல் என்கிற பழங்கால அறிவியல் மருத்துவ முறையையும் நாம் உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.
சித்தர்கள் உருவாக்கிய மருத்துவமுறை தமிழர்களின் சித்த மருத்துவம், சித்த மருத்துவத்தை யார் கண்டுபிடித்தார்கள்? ஆதி சித்தரான சிவன் பார்வதிக்கு அருளியதை, அவர் சிவகணங்களான அவரது உதவியாளர்களுக்கு வழங்க, அதில் ஒருவரான நந்திதேவர், பிறகு அகத்தியருக்கு அருளினார் என்கிறது சித்த மருத்துவ வரலாறு.
 
இரும்பைத் தமிழர்கள் அணுகிய விதமும், அதனோடு தொடர்புடைய சித்த மருத்துவ அறிவியலும் இன்னும் ஊடாக வருகின்ற சிவனுக்கும், ஐயனாருக்கும் ஒருவேளை தொடர்பு இருக்கலாமோ என்று வேறொரு பக்கமாக இழுத்துச் செல்கிறது இந்த ஐயனார் தேடல்...
ஐயனார் குறித்த தேடல் தொடரும்...
 
ஆய்வுக்கு இதுவரை உதவிய நூல்கள் :
1) தமிழர் வரலாறு - கா.கோவிந்தன்
2) ஒத்தைக் காளை வண்டியும், முத்துசாமி ராவும் - அ.கா.பெருமாள்
(நூல் கொடை - ஐயா.ரத்னவேல்)
3) History and Doctrines of the Asivakas (A.L. Basham, 1951)
4) Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom (G. Shanthi)
5) கல் மேல் நடந்த காலம் - சு.தியோடர் பாஸ்கரன்
6) Discovery of Steel (Iron) by Tamils - Article by Rajshivank
by Swathi   on 05 Dec 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன்
திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு
முத்தாரம்மன் MUTHARAMMAN முத்தாரம்மன் MUTHARAMMAN
பத்ரகாளியம்மன்   BADRAKALI AMMAN பத்ரகாளியம்மன்   BADRAKALI AMMAN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.