சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.
ஆதிசங்கரரே வந்து வழிபாடு செய்த காரைக்குடி அம்மனுக்கு கொப்புடையாள் என்று பெயர். கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் ஜுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள்.இதில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல் கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.
அம்மன் ஸ்ரீ சக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். பொதுவாக காளி, துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும். ஆனால் இங்கு அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள். |