இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐப்பசி முதல் பங்குனி வரையில் சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும்.
இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும். குறிஞ்சி நிலத்தில் அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர். இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார்.
எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என்கிறார்கள். மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது. கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யும்போது, சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் என்னும் எட்டு வகையான மூலிகை மருந்துகளை வைப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவதில்லை. இவர் முதலும், முடிவும் இல்லாதவராக இருப்பதால், அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள். |