இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவிளையாடல் புராணத்தில் 36 வது திருவிளையாடல் ரசவாதம் செய்த படலம். புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் இங்கு எழுந்தருளியுள்ள சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று. ஐந்து நிலை கோபுரத்துடன் சுவாமி சன்னதி நுழைவு வாயில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதியில் சுயம்புலிங்கமாய் ருத்ராட்ச மேனியாய் சிவபெருமான் காட்சியளிக்கிறார்.
இங்குள்ள சுயம்புலிங்கத்தில் திரிசூல முத்திரையும் உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இதில் மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தீர்த்தத்திலே ஸ்நானம் செய்தபடியால் அகஸ்திய முனிவர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றதாகவும், நளன், பிரம்மா, விஷ்ணு, கவுதம் மகமுனி, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன. |