|
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் |
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – திரு. உதயசங்கர் இளமைப்பருவம்: உதயசங்கர் அவர்களின் இளமைப்பருவம் வாசிப்பு பழக்கம் நிறைந்ததாக இருந்தது. அவர் படித்த காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒரு வகுப்பு இருந்ததாகக் கூறுகிறார். அவ்வகுப்பில் ஆசிரியர்கள் பெரும்பாலும் கதைகளைக் கூறுவார்கள். சில சமயம் பாடல்கள் கூட பாடுவார்கள். அவ்வகுப்பு பல நீதிக் கதைகளைக் கேட்கக் காரணமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் நண்பர்களுடன் நூலகத்தில் சந்திக்கும் வழக்கம் இவருக்கும் இவருடைய நண்பர்களுக்கும் இருந்தது. இதனால் நூலகத்தில் பல நூல்களை மட்டுமில்லாது பல பத்திரிக்கைகளையும் இவரால் படிக்க முடிந்தது. இவைகளே மற்றவர்களுக்குக் கதை சொல்ல ஒரு விதையாக அமைந்ததாகக் கூறுகிறார். சிறுவர் இலக்கியம் எழுதக் காரணம்: திரு. உதயசங்கர் அவர்கள் தனக்குக் குழந்தைகள் பிறந்த பிறகே சிறுவர் இலக்கியம் பக்கம் திசை திரும்பினார். பாடல்கள் தான் இவர் முதலில் எழுதத் தொடங்கியவை. துவக்கத்தில் எப்போதாவது எழுதும் இவர் 2011க்கு பிறகு ‘மாயா பஜார்’ என்ற இணைப்பிதழின் ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொடர்ந்து கதைகளை எழுதியுள்ளார். சிறுவர் இலக்கியத்தில் இடம்பெறாத பெண்கள்: சிறுவர் இலக்கியத்தில் இன்று கூட தமிழகத்தில் குறைந்த எழுத்தாளர்களேக் காணப்படுகின்றனர். அதிலும் குழந்தைகளுடன் 24 மணி நேரமும் இருக்கும் பெண்கள், குழந்தைகளின் உளவியலை அதிகமாகப் புரிந்து கொண்ட பெண்கள் சிறுவர்களுக்காக எழுதுவது குறைவே. எண்ணிக் கூறுகின்ற அளவுக்கே சிறுவர் இலக்கிய பெண் எழுத்தாளர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். சிறுவர் இலக்கியம் எழுதப் பெண்கள் முன்வர வேண்டும். ஏராளமான எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியம் எழுத முன்வர வேண்டும். ஏராளமான வகைகளில் சிறுவர் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். அரசின் பங்கு: கேரளாவில் ஒரு அரசாங்க நிறுவனமே சிறுவர் இலக்கிய எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளை வாங்கி அவற்றை அச்சிட்டு பள்ளிகளுக்குக் கொண்டு போய் சேர்க்கின்றன. குறைந்தபட்சம் 10>000 பிரதிகள் அங்கே அச்சிடப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசு இன்னும் போதுமான கவனத்தைச் சிறுவர் இலக்கியம் பக்கம் திருப்பவில்லை என்றே கூறலாம். மேலும் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான பத்திரிக்கைகளும் மிகக் குறைவாகவேக் காணப்படுகின்றன. இந்தக் காலத்தில் தான் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் வெளியே வர வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் தான் குழந்தைகளுக்கான படைப்புகள் மிகக் குறைவாக வெளிவருகின்றன. பெற்றோர்களின் பங்கு: குழந்தைகள் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது எனப் பெற்றோர்கள் கருதுகின்றனரோ அவற்றை முதலில் பெற்றோர்கள் செய்யக் கூடாது. குழந்தைகள் எவற்றைச் செய்ய வேண்டும் எனப் பெற்றோர்கள் நினைக்கின்றனரோ அவற்றைப் பெற்றோர் முதலில் செய்ய வேண்டும். குழந்தைகள் கண்முன்னே புத்தகங்களை எடுத்துப் பெற்றோர் வாசிக்க வேண்டும். கதைகளைச் சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும். மேலும் அக்கதை எந்த புத்தகத்திலிருந்தது என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டும். வீட்டில் வாசிப்பதற்கான சூழ்நிலையைப் பெற்றோர்களே உருவாக்கித் தர வேண்டும். குழந்தைகளை வளர்க்காமல் அவர்களைத் தானாக வளர விட வேண்டும். அவர்களின் வயதிற்கு அதிகமான முதிர்வுத் தன்மையை அவர்களிடையே திணிக்கக் கூடாது. கல்வி முறை: குழந்தைகள் புத்தகங்களைக் கிழித்தால் பரவாயில்லை. ஆனால் கிழித்து விடுமோ என்கிற பயத்தில் புத்தகங்களைக் குழந்தைகளின் கைகளிலிருந்து வெடுக்கென வாங்கக் கூடாது. இவை புத்தகங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தும். ஏற்கனவே தற்கால கல்வி முறை குழந்தைகளுக்குப் புத்தகங்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. குழந்தைகளின் மனதிற்குத் தேவையான விஷயங்களைப் புத்தகங்களே கற்றுக் கொடுக்க முடியும். குழந்தைகள் மிகச்சிறந்த புனைவியலாளர்கள். அவர்களிடம் எதிர்மறையாகப் பேசாமல் நேர்மறையாகவே பேச வேண்டும். ஆசிரியர்களின் பங்கு: குழந்தைகள் முழுமையாக நம்புவது தன்னுடைய பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மட்டுமே. குழந்தைகள் மொழியை கற்றுக் கொள்ளத் தொடங்கும் போதே அவர்களைப் பள்ளியில் சேர்த்து விடுகிறோம். அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கும் போது ஆசிரியர்கள் அவர்களை ‘பேசாதே’ எனத் தடுக்கின்றனர். அவ்வாறு தடுக்காமல் அவர்களின் கேள்விகளுக்கு அவர்களுக்கு ஏற்ற பதில்களைச் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கதைகளைச் சொல்லித் தன்வசப்படுத்த வேண்டும். எனவே குழந்தைகள் வளர்ப்பில் ஆசிரியர்களின் பங்கும் முக்கியமானதாகும். |
||||||||
by Lakshmi G on 22 Aug 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|