சித்த மருத்துவர்களுக்கும், சித்த மருந்து சாப்பிடுபவர்களும் வழிபட வேண்டிய தலம். அகத்தியர் ஒரு முறை திருப்புவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்த பின் கானப்பேர் காளீசரைத் தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது மாலைநேரமாகி விட்டது. எனவே பூஜை செய்வதற்காக தியானித்து ஒரு ஊற்றை தோற்றுவித்தார்.
அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்ய தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராக பெருகியது. இது தான் சித்த வைத்தியத்தில் சிறப்பாக பயன்படுத்தப்படும் "பூநீர்' ஆகும். இதனை சேகரிப்பதற்காகத்தான் சித்தர்களும், சித்த வைத்தியர்களும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் அதிகாலை 6 மணிக்குள் இங்கு வந்து முருகனை தரிசித்து விட்டு பூநீர் சேகரித்து செல்கின்றனர்.
அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து, தனது இஷ்ட தெய்வமும், குரு முதல்வரும் ஆன சுப்பிரமணியரை வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பாண்டிய மன்னனைக்கொண்டு மூல மூர்த்தி பிரதிஷ்டையும், கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார். |