|
||||||||
நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ - வித்யாசாகர்! |
||||||||
1 எத்தனை விளக்குகள் எரியுமிந்த வீட்டில் நீ மட்டுமில்லை; வீடு இருண்டே கிடக்கிறது.. ----------------------------------- 2 தண்ணீர் தா என்கிறேன் துண்டெங்கே எனக் கத்துகிறேன் தூளியில் குழந்தை அழுகிறது பாரென்கிறேன் நிசத்தில் ஒன்றுமே நடக்கவில்லை, ஆம் - நீயில்லாத வீட்டில் எனக்கென ஒன்றுமே நடப்பதில்லை.. ----------------------------------- 3 தனிமை சுகம் தியானம் பெரிது உடற்பயிற்சி நன்று விளையாட்டு அலாதி எனைவிட்டுப் போ என்றெல்லாம்' வக்கனையாக பேசமுடிகிறது நீ என்னோடிருக்கையில் மட்டும்!! ----------------------------------- 4 போனால் திரும்பி வராது உயிர் என்பார்கள் அர்த்தம் புரிந்ததேயில்லை; நீ ஊருக்கு போய் நாளொரு நாள்தான் ஆகிறது உயிர் போனதாகவே உணர்கிறேன்!! ----------------------------------- 5 உள்ளே வரும்போதே குழந்தையெங்கே என்பேன் வாசலில் நீ நிற்பாய்; உள்ளே வரும்போதே அம்மா சாப்பிட்டாங்களா என்பேன், சாப்பிடாமல் நீயிருப்பாய், உள்ளே வரும்போதே அசதியா என்பாய், அமைதியாய் இரு போதுமென்பேன்; இன்று உள்ளே வரும்போதே நீயிருக்கிறாயா என்றுப் பார்க்கிறேன் ஒரேயொருமுறை - நீ நலமா என்றுக் கேட்டுவைக்க... -- வித்யாசாகர் |
||||||||
by Swathi on 22 Jul 2016 1 Comments | ||||||||
Tags: Nee நீ வித்யாசாகர் Vidhyasagar | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|