|
||||||||
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆபத்தானதா? |
||||||||
மக்கள் சக்தியின் தேசியத் தலைவர் டாக்டர்.ஜெயப்ரகாஷ் நாராயணன் மத்திய அரசின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வரவேற்பதுடன் இது நீண்ட நாட்களுக்கு முன்னரே நடைப்பெற்றிருக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மசோதா விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிப்பதுடன் பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் .
டாக்டர்.ஜே.பி தனது அறிக்கையில், "இந்த அன்னிய முதலீடுகள் இந்திய மளிகைக் கடைகளுக்கும், சில்லறை வணிகத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பது தவறான வாதம் , உலகத்தின் மற்ற நாடுகளின் அனுபவங்கள், அந்நிய முதலிடு சில்லறை வணிகத்திற்கு ஆபத்து விளைவிக்காது என்பதையே உணர்த்துகிறது. சில்லறை வர்த்தகம் துவக்கத்தில் பொருளாதாரத்தை விட வேகமாய் வளரும். புதிய வியாபாரங்கள் இந்த அன்னிய முதலீட்டுக்கு செல்லும், மரபுசார் சில்லறை வியாபாரிகளுக்கு தொடர்ந்து அவர்களின் பங்கு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டாக்டர்.ஜே.பி அவர்கள் முன்னொரு காலத்தில் வங்கிகள் கணினிமயமாக்கப்பட்ட போதும், இதனால் பெரும்பாலானோர் வேலை இழப்பார்கள் என்று ஒரு சாரார் எதிர்த்து வந்தார்கள் என்றும் அது பின்னர் பொய்யாக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
மேலும் தற்பொழுதுள்ள நிலைப்படி நுகர்வோர் ஒரு பொருளுக்கு அதிக விலை கொடுத்தாலும், விவசாயி தன்னுடைய உற்பத்திக்கு குறைந்த விலையைதான் பெறுகிறார் என்றும், இது போன்ற பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்களால் இவ்விருவருமே லாபம் அடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
"தற்பொழுது ஒரு கிலோ அரிசிக்கு ரூ.18 மட்டுமே விவசாயி பெற, நுகர்வோர் அதே ஒரு கிலோவிற்கு ரூ.30-35 வரை கொடுக்கிறார்கள். அதே போன்று காய்கறிகள், பழங்களுக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலையில் 35% விலையே விவசாயி பெறுகிறார். பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் இடைத்தரகர்களை நீக்கி, பொருட்களின் மதிப்பை உயர்த்தி, வீணாகும் பொருட்களையும், உணவுப்பற்றாக்குறையையும் அகற்றி, பொருட்களுக்கு நிலையான விலையை உருவாக்கி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உதவும்." எனக் கூறினார். இங்குள்ள ஒட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இந்த உண்மையை சுட்டிக்காட்டி உண்மையிலேயே நீங்கள் மாற்று அரசியலை கொடுக்கும் கட்சி என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.அந்நிய முதலீடு பல்வேறு வழிகளில் நமக்கு பலன் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்நிய முதலீட்டால் சந்தை இடைத்தரகர்களை தவிர்த்து உற்பத்தியாளருக்கு உரிய விலை கிடைக்கும்.பொருட்கள் வீணாகாமல் பாதுகாத்து பல்வேறு பதப்படுத்தும் முறைகள் கடைபிடிக்கப்படும். நம்முடைய அரசாங்கம் இதைப் பற்றி பேசிவந்தாலும், உற்பத்திப் பொருட்களை முறையாக பாதுகாத்து சேமிக்க வசதிகளை செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியாகும் பொருட்கள் பல்வேறு வழிகளிலும் வீணாகிறது. மேலும் அவை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு சென்றுசேருவதற்கு சரியான வசதி இல்லை.இன்று நம் சில்லறை வணிகத்தில் தரம் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. தரம் குறைந்த, காலவதியான (EXPIRY DATE) பொருட்களை கட்டுப்படுத்த எந்த முறையான அமைப்பும் சரியாக இயங்கவில்லை . இது ஏழை மக்களை மிகவும் பாதிக்கிறது.
பன்னாட்டு கம்பெனிகள் வரும்பொழுது அவர்கள் பெயருக்கு(Brand) பயந்தாவது இவற்றை சரி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.நாகப்பட்டினத்தில் 2 ரூபாய்க்கு உற்பதிகும் இளநீர், 5 மணி பயண தூரத்தில் உள்ள சென்னையில் 20-25 ரூபாய்க்கு விற்கிறதே, இதை இன்று போராடுபவர்கள் ஏன் என்று நினைத்ததுன்டா?வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வரும்பொழுது அவை பல்வேறு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவக்கமுடியும். இவை இன்று இருக்கும் சில்லறை வணிக வேலைவாய்ப்புகளை விட, பாதுகாப்பானதும், நிரந்தரமானதும் இருக்கும் என்று நம்பலாம். இதனால் அதிகம் பாதிக்கபோவது , பொருட்களுக்கு கொள்ளை லாபம் வைத்து விற்கும் வணிகர்களும், இடைத்தரகர்களும் மட்டும்தான். உற்ப்பத்தியளரோ, பொதுமக்களோ இல்லை. பொதுமக்களை பொருத்தவரை, எங்கு நல்ல தரமான, மலிவான பொருள் கிடைக்கிறதோ அதைத்தான் வாங்குவார்கள். எனவே தரமான அதிக லாபநோக்கமில்லாத வணிகர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களை விட தரமான பொருட்களை அவர்கள் மலிவான விலையில், விற்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை என்றே நம்பலாம்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகள் வந்தால் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினை ஒழியும்.நாட்டில் இருக்கும் முக்கால்வாசி கடைகாரர்கள் அரசுக்கு ஒழுங்கான வரியை செலுத்துவதே கிடையாது. இதை பற்றி அவர்கள் விளக்கம் அளிக்கவே மாட்டார்கள். இந்த நிலை மாறும் மேலும் அரசுக்கு கூடுதல் வரி நேரடியாக கிடைக்கும்.சில்லறை வணிகத்தில்கூட கொஞ்சம் professionalism எதிர்பார்க்கலாம். சாவு கிராக்கி போன்ற வசைமொழிகள் கொஞ்சம் குறையும் உண்ணும் உணவில் உணவில் கலப்படம் செய்தது அமெரிக்கரா அல்லது தெரு முனை கடைகாரரா என்பதை யோசிக்கவேண்டும்.
நம் நாட்டில் CITIBANK, STANDARD CHARTED Bank போன்ற அந்நிய நிறுவனங்கள் வருவதற்கு முன் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அறிய மணிக்கனக்காக வரிசையில் நின்ற நாம், இன்று வெளிநாட்டு வங்கிகளின் வியாபார போட்டிக்கு ஈடுகொடுக்கும் நம் நாட்டு வங்கிகளும் அனைத்து துறைகளிலும் மக்களுக்கு தரமான சேவை செய்யவேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளதை உணர்கிறோம்.. இந்த நிலை சில்லறை வணிகத்தையும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிநாட்டு கம்பெனிகளை உள்ளே விட்டால் நம் நாடு அவர்களின் ஆதிக்கத்தில் சிக்கிவிடாதா? எதிர்காலத்தில் அவர்களை சார்ந்து நாம் வாழும் சுழ்நிலை உருவாகிவிடுமே என்று நாம் கவலைப் படுவது உண்மைதான். ஆனால் இன்றைய உலக தாராளமயமாக்கல் சூழ்நிலையில் இதை தவிர்க்க முடியாது. அல்லது, இன்றைய உள்நாட்டு பதுக்கல் தரகர்களை ஏற்றுக்கொண்ட நமக்கு, அதிலிருந்து விடுபட, அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் அதே வேலை, அவை, நம் நாட்டு மக்களை, சிறு வணிகத்தை, நம் நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்காதவண்ணம், அவர்களை பாதுகாக்கும் சட்டங்களை, வித்திமுறைகளை வகுக்க அழுத்தம் கொடுக்கவேண்டும்.
என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் பாட்டி வைத்தியம் ஆனாலும் வெளிநாட்டுக்காரன் சொன்னால்தான் அதற்க்கு ஒரு மவுசு!! யாராவது வெளியில் இருந்து வந்து புதிய பாக்கெட்டில் அடைத்து நம் ஊர் பொருளை விற்கும்வரை நம் நாட்டுஉற்பத்தியாளர்களுக்கு விமோசனம் இல்லை. மேலும் நம் பாரத தேசத்தின் இடைத்தரகர்களை ஒழிக்க இதைவிட சிறந்த வழி கிடையாது. |
||||||||
by Swathi on 30 Nov 2011 3 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|