தமிழகத்தில் வாழும் கம்பளத்து நாயக்கர் என்ற இனத்தாரால் ஆடப்பட்டுவரும் ஆட்டம் தேவராட்டம் ஆகும். தேவலோகத்தில் உள்ள தேவர்கள் மகிழ்ந்து ஆடிய ஆட்டம் என்பதால் தேவராட்டம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கம்பளத்து நாயக்கர்களுடைய வழிபாடு, திருமணம் போன்ற நிகழ்வுகளில் தேவராட்டம் தவறாமல் ஆடப்படுகிறது. தேவராட்டம் ஆடுவதற்கென்று தனித்த கலைஞர்கள் இல்லை. கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நூறுபேர்கள் கூடச் சேர்ந்து தேவராட்டம் ஆடுகின்றனர். வில், அம்பு பிடித்து தேவராட்டம் ஆடும் வழக்கமும் உண்டு.தேவதந்துமி என்னும் தோலிசைக்கருவியின் இசைப்பு முறைக்கேற்பத தேவராட்டம் ஆடப்படுகிறது. பாடல்கள் இடம் பெறுவதில்லை. மெதுவாகத் தொடங்கும் ஆட்டம் வேகமாகி உச்சகட்டத்தில் முடிவடையும். நேர்வரிசையில் ஆடப்படும் இவ்ஆட்டத்தில் சுழன்றாடுதல், குதித்தல், திரும்புதல், முன்னோக்கிப் பாய்தல் போன்ற ஆட்டமுறைகள் இடம்பெறும். இன்றைய நிலையில் கம்பளத்து நாயக்கர்கள் மட்டுமல்லாது பலரும், பயின்று தேவராட்டம் ஆடிவருகின்றனர்.
|