இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருப்பதியில்குடிகொண்டிருக்கும் வெங்கடேசப்பெருமாள், குளிக்கச்சென்றார். தலைக்கு தேய்க்க அரப்பை தேடிபோது, அங்கு அரப்பு இல்லை. தன் மனைவியிடம் கேட்கலாம் என்று பார்த்தார். அவரும் அங்கில்லை. தாயாரைத்தேடி பல இடங்களுக்கும் சென்ற பெருமாள் அரப்பு மரங்கள் நிறைந்திருந்த இக்குன்றுக்கு வந்தார்.
குன்றின் அழகில் மயங்கிய அவர், அரப்பு எடுத்து குளித்துவிட்டு இங்கேயே தங்கினார் என்று புராணம் கூறுகிறது. பிற்காலத்தில், இக்குன்றில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் புற்று ஒன்றில் தொடர்ந்து பால் சொரிந்தது. வியந்த மக்கள் புற்றுக்கு அடியில் பெருமாள் சுயம்புவாக இருந்ததைக்கண்டு, அவருக்கு கோயில் கட்டினர்.
இத்தலம் "சின்னத்திருப்பதி' எனப்படுகிறது.கருவறையில் சுவாமிக்கு முன்பு ஆதியில் தோன்றிய சுயம்பு உள்ளது. தாயார் அர்த்தமண்டபத்தில் தனியே அருளுகிறார். திருப்பதிக்கு சென்று இறைவனை வணங்கமுடியாதவர்கள் இங்கு வந்து சுவாமியை வணங்கலாம். இங்கு திருமணம் செய்தால் இல்வாழ்வு சிறக்கும் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடக்கிறது. |