சுதையாலான பிரம்மாண்ட திருமேனி. ஆகூய் வரதராக பெருமாள் கருவறையில் வீற்றிருக்கிறார். ஆகூய் வரதர் என்றால் இடக்கையால் வா என்று அழைத்து வலக்கையால் அருள்பாலிப்பவர் என்று பொருள். இடதுகை விரல்களை வளைத்து, அருகில் நம்மை அழைத்து, வலக்கையால் அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேல் இருகைகளும் சங்கு, சக்கரத்தைத் தாங்கி நிற்கின்றன.
திருமகள் பெருமாளின் மார்பில் குடி கொண்டிருக்கிறாள். பூமிதேவியும், நீளாதேவியும் இருபுறத்திலும் உடன் காட்சி தருகின்றனர். திருமாலுக்குரிய 108 திவ்யதேசங்களில் வைகுண்டத்தை இப்பூவுலகில் காணமுடியாது. ஆனால், வேம்பத்தூர் சுந்தரராஜப் பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலத்திற்கு விண்ணகரம் என்றும் பெயருண்டு.
கல்வெட்டுகளில் இத்தலம் புறவரி விண்ணகரம், ராஜேந்திர விண்ணகரம், ஸ்ரீவிஜய மாணிக்க விண்ணகரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். சரஸ்வதிதேவியின் குருவான இவரை வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். |