உலக சுற்றுலா நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா.
2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன"
|