|
||||||||
மதுரையில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம் |
||||||||
மதுரையில் பழங்காலந்தொட்டு இருந்து வரும் மீனாட்சி அம்மன் கோவில் அதிசயங்களையெல்லாம் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு மாபெரும் அதிசயமாகும். அவற்றில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம். ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் இருந்தாலும் கூட இதில் இருப்பது 985 தூண்கள் மட்டுமே! இந்த மண்டபத்தின் தூண்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அதிசயம்.
1983ஆம் ஆண்டு மதுரையின் பிரபல இ.என்.டி (தொண்டை காது மூக்கு மருத்துவ நிபுணர்) மருத்துவ நிபுணரான காமேஸ்வரன் ஒரு பெரும் குழுவுடன் இந்த மண்டபத்தை நவீன கருவிகளுடன் ஆராய்ந்தார்.
இந்த மண்டபத்தில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அற்புத கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை தன் ஆய்வின் முடிவில் அவர் கண்டு பிடித்தார். முழுக் கோவிலுமே மிகுந்த ஜன சந்தடியுட்ன இருந்தாலும் கூட எப்போதாவது ஒரு முறை தான் 80 டெசிபல் என்ற அளவை எட்டுகிறது என்பது அவரது ஆய்வின் முடிவு.
சாலையின் அருகே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட சக்தி மண்டபத்திலேயே 40 டெசிபல் தான் ஒலியின் அளவு இருக்கிறது!
இந்த குறைந்த அளவு ஒலி சிற்பிகளால் கோவிலுள் வருபவர்கள் அமைதியாக வழிபாடு ந்டத்தவும் தியானம் செய்யவும் வசதியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஒரு நாளைக்கு சுமார் 5000 முதல் 6000 பேர்கள் வரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இதில் உச்ச கட்ட அளவாக ஒலியின் அளவு 70 முதல் 80 டெசிபலே இருக்கிறது.
இது எதைச் சுட்டிக்காட்டுகிறது என்றால் சிற்பிகள் ஒலி இயலில் மிகவும் தேர்ந்த நிபுணர்கள் என்பதைக் காட்டுகிறது. இங்குள்ள பாலிஷ் செய்யப்படாத தூண்கள், ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் சாளரக் க்ட்டமைப்புகள், காற்று துவாரங்கள், மணடபத்தைச் சுற்றி திறம்பட அமைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளிகள் இவை யனைத்தும் ஒலியைக் கட்டுக்குள் வைப்பதற்கான அதிச்ய உத்திகளாகும். இந்த அமைப்புகளை நேர்த்தியான வடிவமைப்பின் அம்சமாக ஆக்கி அழகுடன் விஞ்ஞானத்தையும் இணைத்த சிற்பிகளின் அறிவு ஆச்சரியகரமான ஒன்று.
இப்போது நவீன் கட்டிடங்களில் ஒலியைக் கட்டுப்படுத்த செய்யப்படும் ஏற்பாடுகள் கட்டிடத்தின் அழகைக் குலைத்து கூரையிலிருந்து ஆங்காங்கே கீழே தொங்க விடப்படும் பல் அமைப்புகளைக் கொண்டுள்ளன.
ஆனால் ஆயிரங்கால் மண்டபத்திலோ அழகுடன அறிவியல் இணைகிறது. ஒவ்வொரு தூணும் சுமார் 12 அடி உயரம் உள்ளது. ஒவ்வொரு தூணும் ஒரு வித வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒன்றில் சதுர அமைப்பு, ஒன்றில் ஒரு தேவதை, இன்னொன்றில் யாளி, இன்னொன்றில் ஆலயத்திற்கு சேவை செய்த குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சிறபம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த உத்தியாகும்.
ஒரே அளவுள்ள தூண்கள் கணிதவியலின் அளவுப்படி சரியான் இடங்களில் துல்லியமாக நிறுவப்பட்டுள்ளன. இந்த அத்தனை அம்சங்களும் சேர்ந்தே இதை ஒலியியல் அதிசயத்தின் உச்சகட்ட மண்டபமாக ஆக்கியுள்ளது.
இந்த மண்டபத்தின் மையத்தில் வீற்றிருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காது என்பது பெரிய அதிசயம். வெவ்வேறு அகலம் மற்றும் நீளமுடைய 16 பகுதிகள் இந்தத் தூண்களைக் கொண்டு நேர்த்தியுடன் அமைக்கப்பட்டவையாக இருப்பதால் மண்டபமே உலகின் தலை சிறந்த அதிசய மண்டபமாக ஆகும் பெருமையைப் பெறுகிறது.
இந்த மண்டபத்தை ஆராய்ந்த தெரஸ் மேரி என்ற கிறிஸ்தவ கன்யா ஸ்தீரி தனது ஆய்வுக் கட்டுரையை பிரான்ஸிலுள்ள சார்ன்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
அவரை இந்தக் கட்டுரையாசிரியர் 38 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி கதிர் இதழுக்காகப் பேட்டி கண்ட போது இதன் அதிச்யங்களை ஒன்றன் பின் ஒன்றாக விவரித்து இது போன்ற ஒரு அதிசயத்தைத் தான் கண்டதில்லை என்றும் அதனாலேயே ஈர்க்கப்பட்டு இந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். |
||||||||
by Swathi on 14 May 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|