|
||||||||
தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்! |
||||||||
தமிழகத்தில் கிராமத்துச் சூழல் நிறைந்த மாளிகை வீடுகளைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? இங்கே பல ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் இன்னும் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய நகரம் தான் காரைக்குடி. செட்டிநாடு பகுதி என்று பரவலாக அறியப்படும் காரைக்குடியில் காரை வீடுகளும், செட்டிநாட்டு உணவும் மிகவும் பிரபலமானவை. என நாம் அறிந்ததே. அங்கு இருக்கும் ஒவ்வொரு செட்டிநாட்டு வீடுகளும் கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்றவையாகப் பெயர் பெற்றுள்ளன. காரைக்குடிக்கும் விசிட் அடித்தீர்கள் என்றால் அங்கு இருக்கும் மாளிகை வீடுகளைப் பார்க்கத் தவறாதீர்கள்.
சிவகங்கையில் காரைக்குடி, ஆத்தங்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி செட்டிநாட்டு பகுதி என அழைக்கப்படுகிறது. இங்கு மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட செட்டிநாட்டு பங்களாக்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்தப் பங்களா வீடுகள் பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
விசாலமான இடவசதி, எண்ணற்ற ஜன்னல்கள், பர்மா தேக்கினால் ஆன கதவுகள், வீட்டின் முற்றம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, காற்றோட்டமான வராந்தா உள்ளிட்டவை வியப்பில் ஆழ்த்துகின்றன.
கானாடுகாத்தான் அரண்மனை
காரைக்குடி அருகே ஆத்தங்குடி மற்றும் கானாடுகாத்தான் பகுதியில் காணப்படும் பிரமாண்ட வீடுகள் மற்றும் காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடுகள் புகழ்பெற்றதாகத் திகழ்கின்றன. இந்த வீடுகளில் மின்விசிறி இல்லாமலேயே குளுமை இருக்கும். அதேசமயத்தில் குளிர் காலத்திலும் குளிரின் தாக்கம் இருக்காது.
காரைக்குடி அருகே செட்டிநாடு பாரம்பரியக் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள கானாடுகாத்தான் அரண்மனை உலகப் புகழ்பெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய ராஜா சர் அண்ணாமலை செட்டியர் 1912 ஆம் ஆண்டு இதனைக் கட்டினார்.
நூற்றாண்டு கடந்த பழைமையான இக்கட்டடத்தின் பொலிவு இன்றளவும் கொடிகட்டிப் பறக்கிறது. தற்போது இந்த அரண்மனைக்கு செல்லப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
அதே சமயம் காரைக்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூா், ஆத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஆண்டுகள் கடந்தும், இன்றும் பொலிவுடன் காட்சி அளிக்கும் பல செட்டிநாடு பங்களாவினுள் செல்ல அனுமதி உள்ளது. இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வீடுகள் உயர்ரக மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அரண்மனை போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன.
செட்டிநாடு வீடுகளின் தனித்துவத்தால் பல தென்னிந்தியத் திரைப்படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டாக காரைக்குடி இருக்கிறது. திரைப்படத்துறையினரின் விருப்பமான படப்பிடிப்புத் தலமாக காரைக்குடி உள்ளது. ஏராளமான தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன. கட்டிடக்கலை எவ்வளவு பிரபலமனோதோ அதேபோல செட்டிநாடு உணவு வகைகளும் பிரபலமானதாக அறியப்படுகிறது. செட்டிநாடு மசாலாவுக்கு என்று தனிப் பக்குவமே உள்ளது.
குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், திருமயம் பெருமாள் கோவில், செட்டிநாடு அருங்காட்சியகம் ஆகியவை காரைக்குடி சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள். |
||||||||
by Kumar on 21 Mar 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|