|
||||||||
திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன் |
||||||||
![]() 1.0. நுழைவாயில்
எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.
2.0. பொருளின் இன்றியமையாமை
நீர்இன்றி அமையாது உலகு [0120] என்பது போலப், பொருள்இன்றி அமையாது உலகு. பொருள் இல்லார்க்கு இவ்உலகு இல் [0247] என்பதும் திருவள்ளுவரின் பெருவாக்கு. பொருளின் இன்றியமையாமையைத் தொலைநோக்கால் நனிஉணர்ந்த திருவள்ளுவர் பொருள் செயல் வகை [076] என்னும் அதிகாரத்தைப் பொருள்பொதிய வரைந்தார்.
3.0. பொருள் உள்ள வாழ்க்கை
உழவுத் தொழில், நெசவுத் தொழில், வணிகத் தொழில், முதலான பல்வேறு தொழில்கள், பதவி, வேலை, கூலி வேலை முதலான எண்ணரிய வழிகளில் பொருளைத் திரட்டலாம்.
பொருள் உள்ள வாழ்க்கை வணிகத்திலும் இருத்தல் வேண்டும். பொருளுக்காக வணிகம் செய்யலாம்; பொருளுக்காவே வணிகம் செய்தால், அதில் பொருள் இருக்காது. இதைச் சிந்தித்த பொருள்வள்ளல் திருவள்ளுவர் உலகப் பொதுமையை உள்ளடக்கிய வகையில், வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகளைத் தொகுத்தும் பகுத்தும் வகுத்தும் வழங்கியுள்ளார்.
4.0. வணிகம் – ஒரு விளக்கம்
மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய(இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ் வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS] எனப்படும்.
5.0. எத் தொழிலும் எவ் வணிகமும் சிறப்பினதே
பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்[பு]ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். [0972]
6.0. முதற்கட்ட வணிகவியல் ஆய்வு மேலாண்மை
வினை [வணிகம்] செயல் வகை
பொருள்கருவி காலம் வினைஇடனொ[டு] ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். [0675]
இத் திருக்குறட்பா பொதுமைக் கருத்தாக்கத்தைக் கொண்டது.. அனைத்து வகைத் தொழில்களுக்கும் பொருந்தும் திருக்குறட் பா.
இதில் ஒரு வணிகத்தைத் தொடங்கும்முன் எவற்றையெல்லாம் அடிப்படை ஆய்வுகளாகச் செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஆழமாக ஆராய்ந்து வரிசைப்படுத்தியிருக்கிறார்.
6.1. வினை: என்ன வணிகம் செய்தால் தமக்குப் பொருந்தும் என்பதை ஆராய்ந்து, அதைத் தெளிந்து தேர்வு செய்தல் வேண்டும்.
தெரியாத வணிகத்தை தொட்டவனும் கெட்டான்.
ஒல்வ[து] அறிவ[து] அறிந்[து]அதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத[து] இல். [0472]
எது முடியுமோ அது பற்றி அறிய வேண்டியன அறிந்து, அதிலேயே உறுதியாக நின்று நடத்திச் செல்வார்க்கு எல்லாம் வெற்றியாகும்.
6.2. பொருள்: தம்மால் எவ்வளவு தொகையை முதலீடாகப் போட முடியும் என்பதை நீள நினைந்து ஆழ ஆராய வேண்டும்.
அள[வு]அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்ஆகித் தோன்றாக் கெடும் [0479]
தம் பொருள் அளவை நன்கு ஆராய்ந்த பின்னரே, முதலீடு பற்றிச் சிந்திக்க வேண்டும்;
6.3. காலம்: கோடைக் காலம், மழைக் காலம், ஐப்பசி அடைமழைக் காலம் முதலான கால நேரங்களை ஆராய்ந்து அவ்அவ் காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற வணிகத்தைத் தொடங்க வேண்டும்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு [0482]
காலத்தோடு பொருந்தும் வணிகம் செய்க. அதுவே பொருள் செய்யும்.
6.4. கருவி: வணிகத்தோடு தொடர்புடைய கருவிகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவை கிடைக்கும் இடம், அவற்றின் விலை, உழைக்கும் காலம் செயல்திறன் முதலானவற்றை ஆய்வு செய்தல் வேண்டும்.
அறி[வு]அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண். [0421]
அறிவு எனும் கருவிக்கு அழிவைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. பகைவராலும் / போட்டி வணிகராலும் அழிக்க முடியாத உள்பாதுகாப்புக் கருவியாகும் அறிவு.
அறிவோடு சிந்தித்து அறச் செறிவோடு வணிகம் செய்வார் வெல்வர்.
6.5. இடம்: இடத் தேர்வு மிகவும் இன்றியமையாதது. மக்கள் எளிதில் வந்து செல்லும் இடமாக இருக்க வேண்டும்.
காலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின். [0484]
எக் காலத்தில் எவ் வணிகத்தைச் செய்ய வேண்டும் என ஆராய்ந்து, அதை இடத்தொடு பொருந்தச் செய்வார்க்கு உலகமே கிடைக்கும்.
7.0. வணிகவியல் மேலாண்மை நடவடிக்கைகள்
7.1. வினைத் திட்பம்
7.2. தெரிந்து செயல் வகை
8.0. வணிக முதலீடு
எவ் வணிகமானாலும் முதலீட்டைப் போட வேண்டும். முதலீடு இல்லாத வணிகத்தால் ஊதியமும் / வருவாயும் இல்லை. இத் தொடரில் முதலீட்டின் இன்றியமையாமையை முப்பாலார் செப்புகிறார்.
8.1. பாதுகாப்பான முதலீடு
குன்[று]ஏறி யானைப்போர் கண்[டு]அற்றால், கைத்[து]ஒன்[று]
உண்டாகச் செய்வான் வினை. [0758]
9.0. ஊக்க மேலாண்மை
ஆதாயமும்(இலாபமும்) இழப்பும் வணிகத்தில் இயல்பானவை. ஒரு வேளை இழப்பு ஏற்பட்டாலும், அது கண்டு கலங்காது ஊக்கமுடன் செயல்பட்டால் இழந்தவற்றை மீண்டும் பெறுவர். ஊக்க மேலாண்மையர் மீண்டும் ஆக்கம் பெறுவர். அவ் ஆக்கமே மேன்மேலும் ஊக்கத்தை ஊட்டும்.
ஒருவந்தம் கைத்[து]உடை யார். [0593]
பெருமை முயற்சி தரும். [0611] கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். [0668]
ஆய்வு செய்து தேர்ந்து எடுத்த செயலில் / வணிகத்தில் குழப்பம், காலத் தாழ்வு இல்லாமல், செய்தல் வேண்டும். முடியாது என முடங்காது; முடியும் என முயல வேண்டும்.
திண்ணியர் ஆகப் பெறின் [0666]
அருமை உடைய செயல். [0975]
எச் சூழலிலும் கலங்காது, உள்ள உறுதியோடு, முடியும் எனும் நம்பிக்கையோடு, மனத் திண்மையோடு, காலம் தாழ்த்தாது செய்தால் எதிலும் எங்கும் எப்போதும் வெற்றிதான்.. வணிகத்திலும் வெற்றிதான். இவ்வளவு ஆழமாகத் திருவள்ளுவர் ஆங்காங்கே ஊக்க மேலாண்மையை விதைத்துள்ளதை வணிகர் மேற்கொள்ளல் வேண்டும்.
10.0. விளம்பரமும் வணிக முதலீடே
விளம்பரங்களை நேர்முக விளம்பரங்கள், மறைமுக விளம்பரங்கள் இரு வகைப்படுத்தலாம்.
10.1. நேர்முக விளம்பரங்கள்
பலகைகள், செய்தித்தாள்கள், அனைத்துவகை இதழ்கள், தொலைக்காட்சிகள், பதாகைகள், கையடக்கத் தாளில் அச்சடித்து வழங்கல் முதலானவற்றின்வழி செய்யப்படும் விளம்பரங்களைச் செயற்கை விளம்பரங்கள் எனலாம்..
10.2. மறைமுக விளம்பரங்கள்
நேர்மை, பொருள்களின் தரம், குறைந்த விலை, இனிய பேச்சு, நல்ல அணுகுமுறை முதலான வணிகவியல் நடவடிக்கைகளை வணிகர் மேற்கொண்டால், அவை நுகர்வோரை ஈர்க்கும். மகிழ்ச்சியைச் சேர்க்கும். அவர், தம் மகிழ்ச்சியைப் பலரிடம் பகிர்வார். இப்படியே சங்கிலித் தொடர்போல் தகவல்கள் பரவும். இவைதான் செலவில்லா மறைமுக விளம்பரங்கள். இவைதான் இயற்கை விளம்பரங்கள். இவற்றைத் திருவள்ளுவர் சிந்தித்துள்ளாரா….?
தாம்இன்[பு] உறுவ[து], உல[கு]இன் [பு]உறக்கண்டு
காம்உறுவர் கற்[று]அறிந் தார். [0399]
இத் திருக்குறட்பா அதிகாரப் புறநிலைப் பொருள்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இத் திருக்குறளில் அமைந்துள்ள ‘தாம் இன்பு உறுவது உலகு இன்பு உறக் காணல்’ எனும் தொடரில், தமக்கு எது இன்பத்தை /மகிழ்ச்சியைக் கொடுத்ததோ, அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர். அப்போது மற்றவர்கள் மகிழ்வது கண்டு தாமும் மகிழ்வர். இது அதிகார அகநிலைப் பொருள்கோள் உரை.
அதையே, விளம்பரத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம். ஒருவர் ஒரு கடையில் பொருள்களை வாங்குகிறார். அதில் அவர் முழுமன நிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறார். உடனே அவற்றைத் தம் நண்பர்களுடன் பகிர்கிறார். அவர் அக் கடையின் வாடிக்கையாளர் ஆகிறார். அவர் அக் கடையின் வாடிக்கையாளர் ஆகி மகிழ்வது கண்டு இவர் மகிழ்கிறார். இப்படியே அது சங்கிலித் தொடர்நிகழ்வு ஆகிறது. அக் கடைக்கு வாடிக்கையாளர்கள் பெருகுகிறார்கள். வணிகம் பெருகுகிறது.
11.0. வல்லுநர் கருத்து அறிதல் [EXPERT OPINION]
ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த – ஆராய்ந்த – பட்டறிந்த – வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்கொள்ளலாம். இதுவும் ஒரு வணிக நடைமுறையே. இதையும் திருவள்ளுவப் பெருந்தகையார் தெளிந்துள்ளார்; தெரிவித்துள்ளார். இதனைச்,
செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை
உள்அறிவான் உள்ளம் கொளல். [0677]
என்னும் திருக்குறள்வழி தெரிந்துகொள்ளலாம்.வல்லுநர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் நுண்ணாய்வு செய்து தெரிவிக்கின்றார். ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறி[வு]உடை யார் [0463]
பின்னர் வரும் இலாபத்தைக் கருத்தில் கொண்டு, முதலையே இழக்கும்படியான எவ் வகைச் செயற்பாட்டையும் அறிவுடையார் ஊக்கப்படுத்தார்.அப்படிப்பட்ட உயர்ந்த – பட்டறிந்த வல்லுநரிடம் அறிவுரைகள் பெற வேண்டும். தீ நோக்கரிடம் சென்றுவிடக் கூடாது. 12.0. வல்லுநரைக் கொண்டு வணிகம் செய்தல்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்[று]ஆய்ந்[து]
அதனை அவன்கண் விடல் [0517]
இச் செயலை இவ் வகையால் – இம் முறையால், இவன் வெற்றிகரமாக முடித்துவிடுவான் என ஆழஆரய்ந்த பின்னர், அச் செயலை அவனிடம் விட்டுவிட வேண்டும். வணிகரே அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செய்ய இயலாது. அதனால், அவ்அவ் செயற்பாடுகளுக்குத் தகுதியும் திறனும் மிக்காரிடம் அவற்றை விட்டுவிட வேண்டும்.
வினையால் வினைஆக்கிக் கோடல் [0678]
ஒரு செயலை வணிகரால் செய்ய முடியாதபோது, அச் செயலில் வல்லுநர் யார் என்பதை ஆராய்ந்து, அவரைக் கொண்டு அச் செயலைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.
மேற்காணும் தொடரில் முதலில் அமைந்துள்ள வினை என்பது தொழிலாகு பெயராகக் கொள்ளப்பட்டுள்ளது. வினை = வினையாளர் = வல்லுநர்.
13.0. பணியாளர் தேர்வு [STAFF SELECTION PROCESS]
வணிகச் செயற்பாட்டிற்கு எத்தகையோரைத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் தெளிவாகவே சிந்தித்திருக்கிறார். வணிகத்தின் வெற்றி, பணியாளர்களைப் பொறுத்தும் அமையும். அதனால் பணியாளர் தேர்வில் ஆழ்ந்த ஆய்வு தேவை. 13.1. அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்[று]அவர்
பற்[று]இலர் நாணார் பழி. [0506]
13.2. காதன்மை கந்[து]ஆ அறி[வு]அறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். [0507]
13.3. தேரான் பிறரைத் தெளிந்தான், வழிமுறை
தீரா இடும்பை தரும். [0508]
13.4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வே[று]ஆகும் மாந்தர் பலர். [0514]
13.5. அறிந்[து]ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால், வினைதான்
சிறந்தான்என்[று] ஏவற்பாற்[று] அன்று. [0516]
இத்தனை கூறுகளையும் கூர்ந்து ஆராய்ந்த பின்னரே பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத் தேர்வே வணிகம் வெற்றி பெற உற்றதுணையாக முற்றும் உதவும்.14.0. தெளிந்து தேர்ந்தாரிடம் பணி ஒப்படைப்பு
வினைக்[கு]உரிமை நாடிய பின்றை அவனை
அதற்[கு]உரியன் ஆகச் செயல் [0518]
நன்கு ஆராய்ந்து எச் செயலுக்கு எப் பொறுப்புக்கு எப் பணிக்கு எவர் தகுதி உடையவர் என வணிகப் பணியாளர்களைத் தேர்ந்து எடுத்தபின், அச் செயலுக்கு அப் பொறுப்புக்கு அப் பணிக்கு அவரை உரியவர் ஆக்கிவிட வேண்டும். 15.0. மனித வள மேலாண்மை [HUMAN RESOURSE MANAGEMENT]
இதனை இதனால் இவன்முடிக்கும் என்[று]ஆய்ந்து
அதனை அவன்கண் விடல் [0517]
என்னும் திருக்குறட் பாவின்படி, அவரவருக்கு ஏற்ற பணிகளை அவரவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் அப் பணிகளை அவர் எதிர்பார்த்தபடி செய்கிறாரா என்பதையும் நாள்தோறும் மேலாண்மை செய்ய வேண்டும். இதனைத் திருவள்ளுவர், நாடோறும் நாடுக மன்னன், வினைசெய்வான்
கோடாமை கோடா[து] உலகு. [0520]
என்னும் திருக்குறட் பாவில் கூறுகிறார். – வெ.அரங்கராசன்
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 10 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|