இத்தல வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது. எழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் அமைந்துள்ள இந்த ஊற்றில் நீராடி வேலப்பரை மனமுருக வேண்டிக்கொள்ள தீராத பிணிகளும், மனக்குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தலம் அமைந்துள்ள தெப்பம்பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இத்தெப்பத்திற்கும், இத்தலத்திற்கும் சுரங்கத்தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் எனும் முதுமொழிக்கேற்ப இம்மலைக்குன்றில், வேலப்பராக முருகன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். குகைகள் நிறைந்துள்ள இம்மலையில் பல சித்தர்கள், தவயோகிகள் இன்றும் தவம் புரிவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
வேலப்பர் அருள்பாலிக்கும் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்தமாதாக்கள், அடிவாரத்தில் சக்தி கருப்பணசாமிஆகியோர் அமைந்திருந்தும் பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். |