இத்தலத்தில் முருகன் குகைக்கோயிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு.
முருகன் குடிகொண்டதால் "நெடுவேள்குன்றம்" என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பது ஐதீகமாதலால் அனைவருக்கும் தனிசிலைகள் உள்ளன. ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு, சுருளி வேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடங்குகள் செய்து வைத்தார். எனவே, ஆண் வாரிசு இல்லாதவர்களும், இறுதிக்காலத்தில் ஆறுதல் தேடுபவர்களும் இவரை தங்கள் மகனாக ஏற்று வழிபடுகிறார்கள்.
இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி, குங்குமமும் தருகிறார்கள், சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக்கால பூஜையின்போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தெட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார். |