|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : நாக்குத் தூய்மை - 7 |
||||||||
நாக்குத் தூய்மை பல் துலக்கிய பின் செய்ய வேண்டிய முக்கியக் கடமை நாவினைத் தூய்மை செய்தல். நாக்கின் சொரசொரப்பான மேலடுக்கிலும் பக்கவாட்டிலும் நுண்ணிய படிவங்கள் தங்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. உணவுப் பொருட்கள் மற்றும் பருகும் பானங்களில் உள்ள நுண்துகள்கள் நாக்கில் மாவு போன்று தங்கிவிடுவது முக்கியக் காரணமாக உள்ளது. நுண்கிருமிகள் (Bacteria, Fungi – Candida) அந்த உணவுத் துகள்களின் மேல் தங்கும். உயிருள்ள நுண்கிருமிகள், இறந்த நுண்கிருமிகளின் செல்கள் நாவில் படிவமாகத் தங்கிவிடும். மேலும் உணவுப்பாதைக் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் போன்ற உடல் பாதிப்புகளும் நாக்கில் மாப்படிவினை ஏற்படுத்தும். நாக்கின் மேலடுக்கு பல்வேறு நுண்கிருமிகள் பல்கிப்பெருக ஏற்ற தளமாக உள்ளது. ஏறத்தாழ 500 விதமான நுண்கிருமிகள் நாக்கில் தங்கி பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாக்கின் படிவத்தில் தங்கும் பல நுண்கிருமிகள் உமிழ்நீர், உணவு, பானங்களுடன் கலந்து பல், ஈறு பகுதிகளில் அரிப்பினை ஏற்படுத்துகின்றன. அவை வயிற்றுக்குள் செல்வதால் பல உள் உறுப்புகளுக்குக் கேட்டினை விளைவிக்கின்றன. நாட்படிவு வாய் துர்நாற்றத்திற்கு முக்கியக் காரணமாகின்றது. உள் நாக்குப் பகுதியில் உள்ள மாப்படிவில் தங்கும் சிலவகையான நுண்கிருமிகள் கந்தகப் பொருட்களையும் (Hydrogen Sulfide, Mercaptans) சில கொழுப்பு அமிலங்களையும் உண்டாக்குவதால் மோசமான வாய் நாற்றம் ஏற்படுகின்றது. எதனைக் கொண்டு தூய்மைப்படுத்துவது?
1. வெள்ளி போன்ற உமிழ்நீருடன் வினைபுரியாத உலோகம், தந்தம், மரத்தாலான நாக்குத் தூய்மைப்படுத்தும் கருவியினை பயன்படுத்தலாம் (Tongue Cleaner)
2. பருத்தி, பட்டினாலான கட்டியான நூல்களைப் பயன்படுத்தலாம்.
3. சிறிய, விளிம்பு மழுங்கலாக உள்ள தேக்கரண்டியினை நாக்குத் தூய்மைப்படுத்த பயன்படுத்தலாம்.
4. நெகிழி (Plastic) மற்றும் வேதிப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பயன்கள்
1. நாக்கு தூய்மையாவதால் வாய் முழுவதுமான தூய்மை பாதுகாக்கப்படுகின்றது. வாய் நாற்றம் நீங்குகின்றது. கேடு விளைவிக்கும் நுண்கிருமிகள் நீங்குகின்றது.
2. நாக்கின் மேலடுக்குத் தூய்மையாவதால் உணவின் நுட்பமான சுவையினை முழுமையாக உணர முடியும். உணவின் சுவை முழுமையாக உணரப்பட்டால்தான் நுண் ஊட்டச் சத்துகள் முழுமையாக உறிஞ்சப்படும். சீரணம் சீராக நிகழும்.
3. நாக்கினைத் தூய்மைப்படுத்தும்போது வாந்தி உணர்வு ஏற்படும். சிலவேளை பித்த நீரும் (புளிப்பு அல்லது கசப்பு சுவையுடைய நீர்) கோழையம் (சளியும்) வாந்தியாக வெளியேறும். இதனால் தவறில்லை. உணவுப்பாதையும் மூச்சுப்பாதையும் சீராகி புத்துணர்வு ஏற்படும்.
4. நாவின் நுண் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு புத்தி தெளிவு உண்டாகும்.
5. எல்லா மருத்துவ முறைகளிலும் நாக்கு சோதனை என்பது நோயினைக் கண்டறிய உதவும் முக்கிய பரிசோதனை முறையாகும். நாக்கினைத் தூய்மையாக வைத்திருப்பதால் மருத்துவர்களுக்கு நோயினைக் கணிப்பதற்கு உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நாக்குத் தூய்மைப்படுத்துவதை பழக்கப்படுத்த வேண்டும். எண்ணெய் கொப்பளித்தல் (Oil Pulling – Swishing oil in the mouth) நல்லெண்ணெய், தேங்காய் நெய், ஒலிவ் எண்ணெய் (Olive Oil) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாய் கொப்பளித்தல் வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் எண்ணெயை வைத்திருந்து எண்ணெய் உமிழ் நீருடன் கலந்தபின் வெண்மையான நுரையுடன் கலந்த நீர்மமாக மாறிவிடும். பின்பு துப்பிவிட வேண்டும். அதன்பின் தூய நீர் கொண்டு வாயைத் தூய்மைப்படுத்தல் அவசியம். எண்ணெய் கொப்பளித்தல் சாதாரணமான நிலையில் வாரம் இரண்டு முறை செய்தால் போதும். வாய் நாற்றம், நாக்கில் மாப்படிதல், பல்ஈறில் இருந்து இரத்தம் வருதல், உதடு வெடிப்பு, வாய் வறட்சி, தொண்டைவறட்சி, வாய்ப்புண், நாவெடிப்பு போன்ற நிலைகளில் தினமும் செய்தல் வேண்டும். நன்மைகள்
1. வாய், பல், நாக்கு, ஈறு இவற்றில் உள்ள நச்சுக் கிருமிகள், மலினங்கள் நீக்கப்பட்டு அப்பகுதிகள் வலுவடைகின்றன.
2. அதிக உமிழ்நீர் சுரக்கப்பட்டு அதன்வழியே நச்சு நீக்கம் நடைபெறுகிறது. உமிழ்நீர் சுரப்பி உடலின் முக்கியமான ஒரு நச்சு நீக்கும் பகுதியாகும்.
3. வாய் வறட்சி, நாவறட்சி நீக்கப்படுவதால் வெடிப்பு, கிருமி தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
4. பல் வெண்மை நிறமடையும்
5. நாக்கில் மாவு படிதல், பல் இடைவெளியில் உப்புப் படிதல் போன்றவை தடுக்கப்படுகின்றது.
6. நாக்குப்புண், வாய்ப்புண், இருமல், இரைப்பு (ஆஸ்துமா), வாந்தி போன்ற நிலைகளில் நாக்குத் தூய்மைப் படுத்தக் கூடாது. அச்சமயங்களில் எண்ணெய் கொப்பளித்தல் செய்யலாம்.
7. எண்ணெய் கொப்பளித்தால் ஏற்படும் நாக்குத்தூய்மை உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கும் சில முக்கிய உயிர் வேதிவினைகளுக்கும் அடிப்படையாகின்றது.
8. வாய்க்கு சிறந்த பயிற்சியாகின்றது. மேலும் எண்ணெய் கொப்பளித்தல் நாக்கு, ஈறு, வாயின் உட்புறச் சவ்வுகளுக்கு மென்மையான தடவு முறையாக (Oil Massage) பயனாகின்றது. எண்ணெய் கொப்பளிப்பதால் மிகப் பெரிய நோய்கள் நீங்குவதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அவற்றிற்குப் போதுமான அறிவியல் ஆய்வு ஆதாரங்கள் இல்லை. ஒரு தலைவலி, மார்புச்சளி, மூட்டுவலி, தோல் நோய்கள், வயிறு-குடல் நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள் போன்ற சில சிக்கலான நோய் நிலைகளில் நோய்க்குறிகுணங்களின் தாக்கம் குறைவதாகச் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நமது அனுபவத்தில் பல், ஈறு, வாய் தூய்மை ஏற்பட்டு நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் கொப்பளித்தலால் உடல் நலம் பேணப்படுகின்றது.
நலப் பயணம் தொடரும்…….. |
||||||||
by Swathi on 28 Oct 2014 3 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam சித்த மருத்துவம் நாக்குத் தூய்மை Tongue Cleaning Benefits Tongue Cleaning Methods Tongue Cleaning Tool எண்ணெய் கொப்பளித்தல் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|