LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் சிறப்புகள்-பெருமைகள்

தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சம்

தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சம்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த திருக்குறளானது. தமிழர் வாழ்வியல் விழுமியத்தை உலக அரங்கில் எடுத்தியம்புகின்ற நூலாகத் திகழ்கிறது. ஒவ்வொரு தமிழரும் ஒரு சில குறட்பாக்களையாவது அறிந்தவராகவும், அவற்றைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்துக்காட்டிக் கூறக்கூடியவராகவும் இருப்பார். ஒவ்வொரு தமிழரின் அடி மனதிலும் திருக்குறளின் பெருமையும், அது கொடுக்கின்ற புளகாங்கிதமும் நிறைந்திருப்பதை மறுக்கமுடியாது. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், தமிழர்களின் மிகச்சிறந்த சிந்தனையாளராகப் போற்றப்படுகின்றார்.
திருவள்ளுவரின் திருக்குறளானது தனிமனித, சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் கடமைகளை எடுத்துரைக்கின்றது. திருக்குறளானது கொன்பூசியசின் விழுமியங்கள் (Confucius' Analects), செனெக்காவின் அறமுறைத் திருமுகம் (Seneca's Epistulae Morales) என்பவற்றுக்கு ஒப்பான நூலாகப் போற்றப்படுகின்றது. திருவள்ளுவர் தனது சமூகச் சூழலில் இருந்து மானுட நடத்தைப் பண்புகள் பற்றிய தமது சிந்தனையை விதைத்துள்ளார். இது அன்றைய தமிழ்ச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வு வெளிப்பாடாக விளங்குகின்றது. அன்று கூறப்பட்டது என்றாலும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகவும் உள்ளது. அவ்வகையில், அது இன்றும் தமிழ் இலக்கியங்களிலும், தமிழர் வாழ்வியலிலும் முதன்மை பெறுகின்றது. இது உலகளாவிய அறிவின் உன்னதப் படைப்பாகப் போற்றப்படுகிறது. அனைத்துத் தமிழர்களின் அற மேம்பாட்டிற்கான அறிவுரைக் கட்டளைகளை அது தொடர்ந்து வழங்கி வருகிறது. இது சமணர். பௌத்தர். சைவர், வைணவர், கிருத்தவர் போன்ற எந்தவொரு மதக்குழுவினரின் கொள்கைகளையும் உரிமைகோரல்களையும் கடந்து உலக மாந்தரிடத்தில் அமைதியான, இணக்கமான வாழ்வை ஊக்குவிக்கும் உலகப் பொது நூலாக விளங்குகின்றது.

சான்றோன்

அறிஞர்கள் திருக்குறளின் இயல்பையும் படிப்பினைகளையும் உலகளாவிய அறச்சிந்தனைகளின் மேம்பட்ட கருத்துகளோடு - குறிப்பாகக் கிரேக்கத் தத்துவங்களோடும். கொன்பூசியசின் விழுமியங்களோடும், புனித நூல்களின் உயர்சிந்தனைகளோடும் ஒப்பிட்டு நோக்குகின்றார்கள். மானுட அறிவின் உன்னத வெளிப்பாடான திருக்குறள் மதசார்பற்ற நூலாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, திருவள்ளுவரிடத்து வேறொரு வகையான சார்பைக் காணமுடிகின்றது. சான்றோன் என்ற பெயரால் அறவொழுக்கத்தால் சிறந்த, முன்மாதிரி மானிடனைப் பற்றிக்கூறச் சில அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இதனால், இன, மொழி, மதம் மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து. உலகப் பொதுநூலாக விளங்குகின்ற தகுதியும், பெருமையும் திருக்குறளுக்கு உரித்தாகின்றது.

அமைப்பு மற்றும் இலக்கிய வடிவம்

இத்தமிழ்ச் செவ்விலக்கியம் 1330 குறட்பாக்களை; ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்துப் பத்துக் குறள்களாக 133 அதிகாரங்களில் உள்ளடக்கியுள்ளது. இவ்வகையில் ஒவ்வொரு தலைப்பும் பத்துக் குறள்களால் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலின் மூன்று தொகுதிகளில் அறத்துப்பால் 380 குறள்களையும், பொருட்பால் 700 குறள்களையும், காமத்துப்பால் 250 குறள்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் குறட்பா என்னும் தமிழ் இலக்கிய யாப்பிலக்கணத்தின் படியான வெண்பா வகையில் கட்டுக்கோப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சங்கப் பாடல்களின் பாடுபொருள்களாக அகம், புறம் ஆகிய திணை மரபுகள் அமைந்துள்ளன. இவ்வாறான பாடல் மரபுகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கின்றோம். குறிப்பாக, திருக்குறளின் முதற்பகுதியான அறத்துப்பாலானது. இல்லறம் பற்றியும் துறவறம் பற்றியும் பேசுகின்றது. இரண்டாவது பகுதியான, பொருட்பாலானது மாந்தரின் நிறைவான வாழ்க்கைக்கு வேண்டிய வளங்களைப் பற்றிக் கூறுகின்றது. இவை புறம் சார்ந்தன. அடுத்து, காமத்துப்பாலானது. திருமணத்துக்கு முன்னான காதல் வாழ்க்கை பற்றியும் மற்றும் திருமணத்துக்குப் பின்னதான கற்பு வாழ்க்கை பற்றியும் பேசுகின்றது. இது அகம் சார்ந்தது.

உலகளாவிய வரவேற்பு

திருக்குறளின் அனைத்துலகப் பொதுநோக்கு உலக அளவில் பல்வேறு அறிஞர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது. அவ்வகையில், திருக்குறளானது உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யேர்மனிய அறிஞரான சீகன்பால்க் (Ziegenbalg) திருக்குறளின் சுருக்கத்தை 1708ஆம் ஆண்டு யேர்மன் மொழியில் எழுதினார். இத்தாலியரான வண. பெஸ்கி (Constantine Joseph Beschi) 1730ஆம் ஆண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். கனடாவில் பிறந்தவரான ஜி.யூ. போப் (G.U. Pope) திருக்குறள் முழுமையையும் 1886ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகப் புகழ் வாய்ந்த பல அறிஞர்களும் திருக்குறளின் மேன்மையைப் போற்றியுள்ளனர்.

உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பேர்ட் சுவைட்சர் (Albert Schweitzer). "அன்பான வாழ்வையும், உயர்ந்த அறிவையும் புகட்டும் ஒப்பற்ற நூல் திருக்குறள்: இதுபோன்றதொரு நூலை உலக இலக்கியத்தில் எங்குமே காணமுடியாது" என்று புகழாரம் சூட்டுகின்றார். மகாத்மா காந்தி, "யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம், திருக்குறள் மூலத்தையே நேரடியாகப் படித்தல் வேண்டுமென்று என்னுள்ளத்தெழுந்த அவாவேயாகும்" என்று திருக்குறளைப் போற்றியுள்ளார். லியோ டால்ஸ்டோய் (Leo Tolstoy) என்ற உருசிய அறிஞர், காந்தி அடிகளுக்கு எழுதிய கடிதத்தில், "அமைதி வழியை நான் திருக்குறளிடத்திலிருந்துதான் பெற்றுக்கொண்டேன்" என்று எழுதியுள்ளார். திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த பெருமைக்குரிய அறிஞர் மொசியர் ஏரியல் (Monsieur Ariel), திருக்குறளைத் தமிழ் மொழியின் தலைசிறந்த இலக்கியம் என்றும், மனிதனின் மிக உயர்ந்த. தூய்மையான சிந்தனை என்றும் பாராட்டியுள்ளார். மகாகவி பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று திருக்குறளை உவந்தளித்த தமிழ்நாட்டுக்கு மணியாரம் சூட்டியுள்ளார்.

மாநாட்டின் நோக்கங்கள்
நடுநிலையான உலகளாவிய கண்ணோட்டத்தில் திருக்குறளைப் படிக்கவும், இவ்விழுமிய நூலை பன்முக ஆய்வுக்கு உட்படுத்தவும் வேண்டுமென்ற நோக்கோடு உலகளாவிய மாநாடுகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். இம்மாநாட்டில் உலகெங்குமிருந்து அறிஞர் பெருமக்கள் பங்குபற்ற வேண்டும். அவ்வகையில் மாநாட்டில் முன்னின்று உழைப்பதற்கு அயராது உழைக்கின்ற. ஆர்வமிக்க சிறந்த குழுவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

by Swathi   on 18 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வள்ளுவத்தை வாழ்வியலாக்க வள்ளுவத்தை வாழ்வியலாக்க"வழிகாட்டும் வள்ளுவம்" தொடர் பதிப்பு
திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் கொண்டாடப்பட்டது திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் கொண்டாடப்பட்டது
திரு. ஆ. சிவானந்தர், வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, எர்ணாக்குளம், கேரளா திரு. ஆ. சிவானந்தர், வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, எர்ணாக்குளம், கேரளா
கேரளத்தில் திருவள்ளுவர் ஞானமடம்: திருக்குறள் அன்னையின் திருப்பணி நின்றது. கேரளத்தில் திருவள்ளுவர் ஞானமடம்: திருக்குறள் அன்னையின் திருப்பணி நின்றது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணனுடன் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தினர்  சந்திப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணனுடன் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தினர் சந்திப்பு
திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்க ஆவணப்படம்! திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்க ஆவணப்படம்!
தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதுப் பட்டியல் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதுப் பட்டியல்
திருக்குறள் உரையாசிரியர், நூலாரிசிரியர் பேராசிரியர் பா. வளன் அரசு திருக்குறள் உரையாசிரியர், நூலாரிசிரியர் பேராசிரியர் பா. வளன் அரசு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.