|
||||||||
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு |
||||||||
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு சுப்பிரமணிய சுவாமி அறுபடை வீட்டினை கொண்ட முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகும். இந்த கோவிலில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடை பெறாமல், முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடப்பது மற்றொரு சிறப்பு. இந்த திருத்தலத்தில் முருகர் திருமண கோலத்தில் காட்சி தருகின்றார். அது மட்டுமல்லாமல் மற்ற ஐந்து தலங்களில் நின்ற படியாக காட்சி தரும் முருகன் இந்த திருப்பரங்குன்றத்தில் மட்டும் தெய்வானையுடன் மணக் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். முருகர் தெய்வானையுடன், நாரதர், இந்திரன், பிரம்மா, இவர்களும் வீணை ஏந்தாத சரஸ்வதி தேவியும், சாவித்திரி தேவியும், மேல் பகுதியில் சூரிய சந்திரரும் காட்சி தருகின்றனர். சுப்பிரமணியருக்கு வாகனமாக யானையும், ஆடும் இத்தலத்தில் உள்ளது. முருகன் குடைவரையில் வீற்றிருப்பதால் இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இந்த கோவிலில் மட்டும் தான் நடக்கின்றது. சூரனை வதம் செய்த முருகப்பெருமான் வெற்றிவேல் உடன் வந்து இந்த கோவிலில் அமர்ந்ததால் இந்த கோவிலில் வேலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பின்புறம் தென்பரங்குன்றம் குடைவரை கோவில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்கள். ஆனால் அந்த கோவில் சரியாக பராமரிக்காமல் இருந்ததால் சிதிலமடைந்தது. இதன்மூலம் கோவிலை வேறு ஒரு பக்கத்திற்கு மாற்றி வடக்கு திசை நோக்கி புதியதாக அமைத்தனர். முருகனை வடக்கு திசை நோக்கி திருப்பி அமர வைத்ததால் ‘திருப்பிய பரங்குன்றம்’ என்ற பெயர் திருப்பரங்குன்றம் என்று மாறியது. தல வரலாறு தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தும் அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கி, அந்த தீப்பொறியில் இருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் பூமியில் அவதாரம் எடுத்தார். பூமியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த சூரர்களை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் கையிலேயே வைத்துக் கொண்டார். இந்தப் போரானது திருச்செந்தூரில் நடந்தது. போரில் வெற்றி கண்ட முருகப்பெருமான் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். அசுரர்களை அழித்து வெற்றி கொண்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை மணம் செய்து தந்தது இந்த திருப்பரங்குன்றத்தில் தான். திருமணத்திற்கு அனைத்து தெய்வங்களும், தேவர்களும், மகரிஷிகளும் முப்பெரும் தேவியரும் வந்து ஆசி வழங்கினர். அந்த நாரத முனியின் முன்னணியில் தான் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இதே திருமண கோலத்தில்தான் அந்த முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் இன்றளவும் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பலன்கள் திருமணத்தில் தடை உள்ளவர்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து அந்த முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை. ராகுகாலத்தில் இந்த கோவிலில் இருக்கும் துர்கை அம்மனை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. |
||||||||
by Swathi on 14 May 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|