|
|||||
தக்கோன் எனத் திரி…தகுதி கொள். |
|||||
தக்கோன் எனத் திரி…தகுதி கொள். முனைவர்.சித்ரா மகேஷ்,டெக்சாஸ்,அமெரிக்கா
மனிதனின் வாழும் முறையும், சொல்லும், செயலும், வாழும் காலத்திலும், அதற்குப் பின்னரும் பெருமை சேர்க்கும் ஒன்றாகவும், தன்வழி வருவோர் மதித்துப் பின்பற்றி நடக்கும் படியான தகுதி உடையதாகவும் இருக்க வேண்டும். மனிதனாகப் பிறந்து வாழும் ஒவ்வொருவரும் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அறநெறியுடன் வாழ்தல், தன்னைப்போல் பிறருடைய உணர்வுகளையும் மதித்தல், சமூக அக்கறையுடன் நடத்தல், பொதுவாகச் சொன்னால், தன் உள்ளத்திற்குத் தான் நேர்மையாக இருத்தல் ஆகியவற்றோடு சேர்த்து, ஒரு நாள் முடியும் போது, உள அமைதி நிறைந்து இருப்பின் அதுதான் வாழ்வில் சிறந்த நாள். அப்படியான நாட்களைக் கொண்ட மனிதன் ஒளவை சொன்னது போல் தக்கோனாய்த் திரியலாம். மேலும் தக்கார் இனத்தவானாகி உலகத்தார்க்குத் தக்கோன் எனச் சிறப்படைகிறான். தகுதி, தகுந்த, தக்கவாறு, தக்க நேரத்தில், தகுந்தவரிடம் போன்ற வார்த்தைகள் இயல்பாக அனைவராலும் பயன்படுத்தப்படுபவை. தனி மனித வாழ்வு, பொது வாழ்வு, வேலை பார்க்கும் இடங்கள், தொழில்துறை என எல்லா இடங்களிலும் முன்னேற்றம் காணவும், இருக்கும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஒருவர், தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட இந்த நிலைக்குத் தான்தக்கவன் என்பதை மற்றவர்களுக்கு உறுதிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் போட்டிகள் நிறைந்த உலக வாழ்வில், பிறிதொருவரைவிட நான் தகுதியும், ஆளுமையும் வலிமையும் மிக்கவன் என்பதை உறுதிப்படுத்துவது அன்று முதல் இன்று வரை மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. சங்க காலப் பாடல்களைப் படிக்கும் பொழுது, மருத்துவம், போர், தூது, எனப் பல்வேறு செயல்களைச் செய்தவர்கள் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிந்த பின்னரே முடிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. திருமணம் முடிக்க வேண்டும் என்றால், ஆண் வீரனாக அல்லது செயல் வீரனாகத் தகுதி பெற்றிருக்க வேண்டும். பெண் நற்குணங்களும், ஆளுமைத்திறன் நிறைந்தும்,அறிவுக்கூர்மை பொருந்தியவளாகவும் இருக்க வேண்டும். இப்படி அனைத்துச் செயல்பாட்டிலும் ஒருவர் தன்னைத் தன் தகுதியால் தான் ஆகச்சிறந்த ஒருவன் அல்லது மனிதன் என்பதைச் சொல்லிக் கொண்ட பின்னரே தனக்கான இடத்தை அடைய முடிகிறது. இப்படி, வாழ்வில் எல்லா நேரங்களிலும், இடங்களிலும் வெற்றிகளும், சாதனைகளும் தகுதியின் அளவு கொண்டே அடையப்படுகிறது, அடையாளம் கொள்கிறது. உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வி மிகவும் பழக்கப்பட்டதே. எங்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்குத் தக்கவர், சிறந்தவர் என்று சொல்லப்படுபவர், அந்தத் “;தக்கவர்”; எனும் சொல்லுக்கான முழுப்பொருளும், பொறுப்பும் கொண்டவர் தான் என்பதை உணர்ந்து, தன் திறமையைச் செயலில் காட்ட வேண்டும். தக்கது, தக்கவர், தக்கார், தகவிலார், தக்காள், தக்கோர், தகுதி, தகுதியர், தகுந்தவர், தகுவி போன்ற தமிழ் வார்த்தைகள் குறிக்கப்படும் ஒரு பொருள் - ஒரே பொருள், ஒருவர் குறிப்பிட்ட செயலை, பணியை அல்லது தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தப் பொருத்தமானவரா அல்லது அதற்கான சிறப்புப் பண்பினைப் பெற்றவரா என்பதே ஆகும். வள்ளுவன் செய்த உலகப் பொதுமறை திருக்குறளில் தகுதி என்ற பொருளையொட்டி வரும் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது அவற்றின் சிறப்பைக் காட்டுகிறது. ஒளவையார் தமிழுக்கு அளித்த அரும்பெரும் செல்வம் ஆத்திச்சூடி. குறுகத் தரித்த குறள் போன்றே, ஆத்திச்சூடியையும் மனித வாழ்வில் கற்று உணர வேண்டியது தமிழனின் கடமை. அறம் செய்யச் சொல்லாது, அதைச் செய்ய ஆசைப்படு, நீயே விரும்பிச் செய் என்று அழகாய்ச் சொல்லி ஆரம்பிக்கும் அறிவுரையின் வரிசையில், வாழ்கிறோம் என்பதோடு நிற்காமல், வாழ்வதற்கும் வாழ்வில் தான் அடைய எண்ணும் எந்த நிலைக்கும் தகுதியை உருவாக்கிக் கொண்டு, அல்லது தன்னைத் தகுதி உடையவனாக உருவாக்கிக் கொண்டு ‘தக்கோன் எனத்திரி’ என்கிறார் ஒளவை |
|||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|