ருக்மிணி மற்றும் சத்தியபாமாவுடன், நான்கு திருக்கரங்களோடு அழகுற ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் தருவது சிறப்பு.பல்லவ தேசத்தின் வனப்பகுதி அது. அந்த வனத்தில் வேட்டையாடுவதற்காக மன்னன் அடிக்கடி வருவது வழக்கம். ஒரு நாள், நாளை விடிந்ததும், வேட்டைக்குச் செல்ல வேண்டும்; அனைவரும் தயாராக இருங்கள் என்று படையினருக்குத் தெரிவித்த மன்னன், உறங்கச் சென்றான்.
அன்றிரவு, மன்னனின் கனவில் வந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நீ வேட்டைக்குச் செல்லும் வனத்தில், எனக்கொரு ஆலயம் எழுப்பி, என்னை வழிபடு ! உன்னுடைய தேசத்தை செழிக்கச் செய்கிறேன். உனது குடிமக்களை எந்த நோய் நொடியும் அண்டாமல் பார்த்துக் கொள்கிறேன் என அருளினார்.
இதைக் கேட்டுச் சிலிர்த்து எழுந்த மன்னன், விடிந்தும் விடியாததுமாக வனத்துக்குச் சென்றான். அங்கே அருமை யானதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீகிருஷ்ணருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். பிறகு, அந்த தேசம் செழித்துச் சிறந்தது என்கிறது ஸ்தல வரலாறு. |