|
||||||||
உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் : திட்ட அறிக்கை |
||||||||
![]() தமிழ்நாட்டில் திருக்குறளின் இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும் அமைந்துள்ள நிலையில், தமிழ்நாடு வரைபடத்தில் சரியாக இந்த இரண்டு திருக்குறள் அடையாளங்களுக்கும் இடையில் இருக்கும் மயிலாடுதுறையில் திருக்குறளின் மூன்றாவது அடையாளமாக, அறிவுத்தளமாக, ஆய்வுத்தளமாக உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் அமையவேண்டும் என்பது பெருங்கனவு. உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் மயிலாடுதுறையில் அமையவேண்டிய தேவை என்ன? 1. மகாகவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்றவர் புலவர்களைப் பற்றி குறிப்பிடும்போது : "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை , உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று பாடினார். மேலே குறிப்பிட்டுள்ள முப்பெரும் படைப்பாளிகளுக்கும் மயிலாடுதுறைக்கு நெருங்கிய தொடர்புண்டு : 1.1. கம்பன் பிறந்த இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேரிழந்தூர். 1.2. வள்ளுவருக்கு வடிவம் கொடுக்க வரைந்த படங்களுள் தமிழ்நாட்டரசு ஏற்றுக்கொண்ட படம் வரையப்பட்ட இடம் மயிலாடுதுறை. மயிலாடுதுறையில் இருந்த மதினா தங்கும் விடுதியில் தங்கியிருந்த திரு.கே. ஆர். வேணுகோபால் சர்மா, பாவேந்தர் பாரதிதாசனின் அறிவுறுத்தலின், ஆலோசனையில் இதை செய்துமுடித்தார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் இளங்கோ நூலக உரியமையாளரும் அண்மையில் 95 வயதில் காலமான பதி என்கிற வெங்கடாசலபதி ஆவார். 1.3. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் சிலம்பின் தலைமை மாந்தர்கள் பூம்புகாரைச் சேர்ந்தவர்கள். தொன்மை வாய்ந்த பூம்புகார் நகரம் அமைந்துள்ளது மயிலாடுதுறை மாவட்டமாகும். 2. தொன்றுதொட்டு தமிழ் வளர்த்த தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம் உள்ளிட்ட மடங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. 3. தமிழ்ப் புதின வரலாற்றில் முதல் புதினத்தை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. 4. தருமபுரம் ஆதீனத்தின் பேராளுமை ச.தண்டபாணி தேசிகர் "திருக்குறள் உரைவளம்" ஒன்றை 1950,51,52களில் மூன்று பகுதிகளாக வெளியிட்டது திருக்குறளில் முக்கியப் பங்களிப்பாகும். 5. திருவாவடுதுறை ஆதீனம், பழந்தமிழ் நூல்களைப் பாதுகாப்பதிலும், குறிப்பாக திருக்குறள் போன்ற நூல்களைப் பதிப்பிப்பதிலும், அதன் விளக்க உரைகளை அளிப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. 1812-ஆம் ஆண்டு, திருவாவடுதுறை ஆதீனத்து அம்பலவாணத்தம்பிரான் திருக்குறள் நூலை அச்சில் பதிப்பித்தார். 6. உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாவட்டம் மயிலாடுதுறையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுமாகும். வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம், கும்பகோணம், திருக்கடையூர் என்று அதிக இந்துக்கள் பயணிக்கும் இடமாகவும், வேளாங்கண்ணி மாதா கோயில் அதிகக் கிறித்தவர்களைக் கவரும் இடமாகவும், இஸ்லாமியர்கள் பெரிதும் போற்றும் நாகூர் தர்காவும் இம்மாவட்டத்திற்கு அருகில் உள்ளன. இயல்பாக பிச்சாவரம் சதுப்புநிலக்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல சுற்றுலாத் தளங்களைச் சூழ்ந்து அமையப்பெற்றது இம்மாவட்டம். 7. தமிழறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ. வே.சா வின் ஆசிரியர் ஆவார். இவர் மயிலாடுதுறையில் தமிழ் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் , மேலும் பல மாணவர்களுக்கு தமிழ் இலக்கியக் கலையில் பயிற்சி அளித்தார். இவர்கள் இருவரையும் அரவணைத்து தமிழ் வளர்த்ததில் மயிலாடுதுறை ஆதீனங்களுக்கு பெரும்பங்கு உண்டு. 8. தமிழ்நாட்டில் ஓர் எல்லையில் கன்னியாகுமரியும், மற்றொரு எல்லையில் சென்னையும் இருக்கும் நிலையில் திருக்குறள் சார்ந்த ஒரு பெரும் அடையாளம் இரண்டுக்கும் இடையில் தமிழ்நாட்டின் மூன்றாவது திருக்குறள் அடையாளமாக மயிலாடுதுறையில் அமைவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிநாட்டுப் பயணிகளுக்கும் குறளின் கருத்துகளை எளிதாகக் கொண்டுசேர்க்கப் பேருதவியாக இருக்கும். 9. இந்தியாவின் முதல் அச்சு இயந்திரம் மூலம் விவிலியம் அச்சிடப்பட்டது தரங்கம்பாடியிலாகும். இதனை ஜெர்மனியைச் சேர்ந்த சீகன்பால்க் பாதிரியார் 1712 முதல் அச்சகம் அமைத்து தொடங்கினார். 10. தமிழிசை மூவர் பிறந்த மாவட்டம் , சைவத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த மாவட்டம், வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதரித்த மாவட்டம் , திருக்குறளுக்கு பெருந்தொண்டாற்றி உலகத் திருக்குறள் பேரவைகளை தமிழ்நாடெங்கும் உருவாக்கிய குன்றக்குடி அடிகளார் பிறந்த மாவட்டம், நாட்டியத் துறையில் தனி பாணியை உருவாக்கிய இராமையாப்பிள்ளை, இசை சக்கரவர்த்தி திருவாடுதுறை இராஜரத்தினம் பிள்ளை, எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.கல்கி , திரு.சாண்டில்யன்,தில்லையாடி வள்ளியம்மை, சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி என பலரும் இம்மாவட்டத்தை சார்ந்தவர்கள். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவு கூடும் வகையிலும், மாவட்டத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெருகும் வகையிலும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் இம்மாவட்டத்தில் அமைவது மிகவும் பொருத்தமானதாக உறுதிசெய்யப்பட்டது.
திட்டத்திற்கான அடிப்படை தேவைகள்: 1. மயிலாடுதுறை சார்ந்த ஆளுமைகளைக்கொண்ட ஓர் ஒருங்கிணைப்புக்குழு அமைத்தல் 2. ஐந்து ஏக்கர் இடம் தெரிவுசெய்ய வழிமுறைகளைத் திட்டமிடுதல். 3. உலக நாடுகளில் இதுவரை திருக்குறள் குறித்து வெளிவந்துள்ள சுமார் 7000 நூல்களைத் திரட்டுதல், திருக்குறள் உரைகளைத் தொகுத்தல், மொழிபெயர்ப்புகளைத் தொகுத்தல், ஆய்வுகளை-ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்தல். 4. திருக்குறள் சார்ந்த கண்காட்சி அமைக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்குறள், திருவள்ளுவர் குறித்த அடையாளங்களைத் தொகுத்தல். 5. திட்ட ஒருங்கிணைப்புக்குழு, மயிலாடுதுறையிலிருந்து புலம்பெயர்ந்த ஆளுமைகளைக்கொண்ட ஒரு குழு, தமிழ்-திருக்குறள் ஆளுமைகளைக்கொண்ட உலக அளவிலான ஒரு குழு என மூன்று ஒருங்கிணைப்புக் குழுக்களும், பல துணைக்குழுக்களும் அமைத்து திட்டத்தை நிறைவேற்றல். 6.முறையான திட்ட வரைவு செய்ததும், 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு முக்கியக் வரலாற்று அடையாளமாக தமிழ்க் கட்டடக்கலை தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு கட்டிட வடிவமைப்பை, தேவையான நிதியை உறுதிசெய்தல். 7. திட்டக்குழு நேரில் சென்று தமிழ் வளர்க்கும் ஆதீனங்கள் , தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு என்று பலரையும் சந்தித்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க உதவி கோருதல்.
திட்டக்குழு: 1. வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் 2. முனைவர் ஜி.இராமசாமி, மேனாள் முதல்வர், ஏ.வி.சி கல்லூரி , திட்டக்குழு ஒருங்கிணைப்பு 3. முனைவர். சி.சிவச்சந்திரன், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை 4. முனைவர். இரா. செல்வநாயகம், செயலர், தருமபுரம் கலைக்கல்லூரி 5. பேராசிரியர் முனைவர் துரை குணசேகரன், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை 6. ஜெனிஃபர் திரு. பவுல்ராஜ் , மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம் 7. முனைவர். சு தமிழ்வேலு, தமிழ் ஆய்வுத் துறை, ஏ.வி.சி. கல்லூரி 8. திரு. இரா. செல்வகுமார் , மயிலாடுதுறை திருக்குறள் பேரவை 9. திரு. ஆறுபாதி கல்யாணம் , காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு 10. திரு. மு. சுந்தரமூர்த்தி , தலைமையாசிரியர் (ஓய்வு) 11. திருமதி ஆர் ராஜேஸ்வரி பூபாலன், முதுகலை தமிழ் ஆசிரியை (ஓய்வு)
உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவக் கட்டிடத்தில் என்ன இருக்கும்? 1. தரைத்தளம் : வாகன வசதி, 7 அல்லது 13 அடிக்கு திருவள்ளுவர் சிலை அமைத்தல். 2. முதல் தளம் : திருக்குறள் கண்காட்சி 3. இரண்டாம் தளம் : திருக்குறள் நூலகம் 4. மூன்றாம் தளம் : திருக்குறள் மின் நூலகம் (Digital), சிறிய, பெரிய அரங்கங்கள்
இங்கு என்ன வகையான திருக்குறள் வளர்ச்சிப்பணிகள் நடைபெறும்? உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றுடன் திருக்குறள் வாழ்வியல் பயிற்சி, முற்றோதல் பயிற்சி, ஆராய்ச்சி உள்ளிட்ட புரிந்துணர்வு செய்துகொண்டு திருக்குறள் பரவலாக்கல் பணிகளை முன்னெடுக்கப்படும்
உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் - உலகத் திருக்குறள் ஆளுமைகள் குழு குழு விரைவில் அமைக்கப்படும். மயிலாடுதுறை சார்ந்த வெளிநாடுவாழ் ஆளுமைகள் குழு குழு விரைவில் அமைக்கப்படும். பன்னாட்டுத் திருக்குறள் தூதர்கள் குழு:
கூட்டங்கள்: 1. 15-03-2025 : முதல் கூட்டம் நடைபெற்று 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது..
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 21 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|