LOGO

ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார், மேலப்புதுக்குடி,தூத்துக்குடி மாவட்டம்

  கோயில்   ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார், மேலப்புதுக்குடி,தூத்துக்குடி மாவட்டம்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   அய்யனார்
  பழமை   700 ஆண்டுகள்
  முகவரி
  ஊர்   மேலப்புதுக்குடியில்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

முன்னுரை

            குலதெய்வ வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வரும் மிகவும்  பழமையான வழக்கம். நம் மூதாதையர்கள் வழிபட்டு வந்த குலதெய்வத்தை  நாமும் தொடர்ந்து வழிபட்டு வர நமக்கு வரும் துயரங்கள் மறைந்தும் விடும். நமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தாலும் ஆண்டிற்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று பொங்கல் இட்டு வழிபாடு செய்து வந்தால் நம் குலதெய்வம் நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் துணை நின்று நம்மை நல்வழிப்படுத்திச் செல்லும் என்ற சான்றோர் கருத்தின் அடிப்படையில் இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

             

வழிபாட்டின் அவசியம்

            சிலருக்குத் தங்கள் குலதெய்வம் எது எனத் தெரியாது என்பர். அவர்கள் ஒரு நிறை செம்பில் தூய தண்ணீர் நிரப்பி பூஜையறையில் வைத்து குலதெய்வத்தை நினைத்து விளக்கேற்றித் தொடரந்து பதினைந்து நாட்கள் பூஜை செய்துவர அவரகளது குலதெய்வம் நான் இங்கிருக்கிறேன் எனத் தெரிவிக்கும் என்பர். குலதெய்வ வழிபாடு என்பது எதற்காக ஏற்பட்டது? தொழில் நிமித்தமாக மக்கள் தங்கள் பூர்வீக ஊரைவிட்டு வெளியூர்களுக்குச் சென்று (புலம் பெயர்ந்து) குடியேறி  விடுகிறார்கள். அதனால் அங்குள்ள  கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்து வருகின்றனர். 

  • >>குழந்தைகளுக்கு முதல் முடிகாணிக்கை (மொட்டை போடுவது) கொடுப்பது
  • >>தாய் மாமன் மடியில் வைத்து அக்குழந்தைக்குக் காது குத்தி காதணி அணிவிப்பது
  • >>வீட்டில் நடக்கும் திருமணம்
  • >>புதுமனைப் புகுவிழா போன்ற விழாக்களின் முதல் பத்திரிகையை குலதெய்வம் கோவிலில் வைத்துப் பிரார்த்தனை செய்வது

என்பது பெரியோர்களால் ஏற்படுத்தி தொடர்ந்து வருகின்றன. இப்படி செய்வதால் குலதெய்வம் தம்முடன் இருந்து நம் குடும்பத்தைக் காத்து நம் சந்ததியை விருத்தி செய்யும் என்பது நம்பிக்கை. குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் செல்லவேண்டும் என பெரியோர்கள் ஏற்படுத்திய நடைமுறை குடும்ப உறுப்பினர்களுடைய ஒற்றுமை மேம்படவும், அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையவும் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக விரதம் இருந்து செல்பவர்கள் உண்டு. குலதெய்வக் கோவில்களில் ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு வழிபாடு நடக்கும். அய்யனார் வழிபாடு ஆண்டு தோறும் பங்குனி மாதம் வரும் பங்குனி உத்திரத் திருநாளில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

அமைவிடம்

            எனது குலதெய்வம் ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர் அம்மன்புரம். அம்மன்புரத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள மேலப்புதுக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை மேலப்புதுக்குடி எட்டுப் பங்கு இந்து நாடார் உறவின் முறையினர் நிர்வகித்து வருகின்றனர். மேலப்புதுக்குடியில் இருந்து பேருந்து வசதி திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற இடங்களுக்கு உள்ளது.  அருகில் அமைந்துள்ள கற்குவேல் அய்யனார் ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனாரின் சகோதரராகக் குறிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டு தோறும் திருவிழா

            ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி மாதம் உத்திரத்தையொட்டி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் குலதெய்வத்தினை வழிபட மக்கள் திரளாகப் பங்குனி உத்திரத்தன்று செல்வதுண்டு. பழங்காலத்தில் திருச்செந்தூரில் ஒலிக்கும் கோவில்மணியும், ஒளி விளக்கும் இங்கு தெரியும் என அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.  மூலதெய்வமான அய்யனாருக்குப் படையல் பொங்கல் பங்குனி உத்திரத்தன்று இடப்படும்.

            திருவிழா நடக்கும் பத்து நாட்களும் உற்சவர் அய்யனார் தங்கச்சப்பரத்தில்  இரவு 10 மணிக்கு மேல் மேலப்புதுக்குடி ஊருக்குள் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பத்து நாட்களும் நாதஸ்வரக் கச்சேரி, பட்டிமன்றம், இன்னிசைக் கச்சேரி என சிறப்பாக விழா எடுக்கின்றனர்.

 

வழிபடும் மக்கள்

            நாடார் சமூகத்தினரில் ஒரு சில பிரிவினர் இக்கோவிலை வழிபட்டு வருகின்றனர். கிராமத்துக் காவல் தெய்வமான ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் நாடார் வழியினரின் பூர்வீகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அய்யனார் அரசராகவோ, படைவீரராகவோ இருந்திருக்கலாம். மற்ற இனத்தைச் சார்ந்த மக்களும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

            இத்திருக்கோவில் தாழைப்புதர்களால் நிறைந்து குளத்திற்கு அருகில் அமைந்திருப்பதால் தாழையடி அய்யனார் திருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. தாழை ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது. மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம், தலபுராணம் ஆகியன பெற்று இச்சுனை அய்யனார் கோவில் பெருமையுடன் விளங்குகிறது.

            பங்குனி உத்திரத்தன்று நேரில் வர இயலாதவர்களின் வசதிக்கேற்ப இக்கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சிவகாசி, அருப்புக்கோட்டை, பூலாவூரணி வேம்பார், இராஜபாளையம் மற்றும் விருதுநகரில் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.  விருதுநகரில் உள்ள அவ்வாறான கோயிலில் தைப்பூசத்தன்று மக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்கின்றனர். விருதுநகர் நாடார் குலமக்களில் தொழிலின் அடிப்படையாலும், குல தெய்வத்தின் பெயராலும், அடையாளக் குறியீட்டுப் பெயராலும் பல பிரிவுகள் உண்டு. ஒரே தெய்வத்தினைக் குலதெய்வமாகக் கும்பிடுபவர்கள் தமக்குள் திருமண உறவுகளை ஏற்படுத்தாமல் வேறு தெய்வத்தினை வழிபாடு செய்பவர்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வர்.

திருக்கோயில் ஸ்தல வரலாறு

            சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் தடாகம் (பொய்கை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர்,  பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம் கொண்டார். “கவனச்சிச்தறலால் கால் இடறி விழுந்த உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அவர் மாண்டுபோவார். இதை நீ வெளியே தெரிவித்தால் மரணம் உன்னைத் தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மரிப்பாய்’’ என்று முனிவர் சாபம் இட்டார்.  “அறியாது செய்த பிழைக்கு மாபெரும் தண்டனையா?” என்று மங்கை வினவ, ‘‘பெண்ணே, நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்குப் பிறகு நீ சொர்க்கம் போவாய்’’ என்று உரைத்தார்.

            இந்நிலையில் மன்னன் சிங்கராஜன் தினமும் உண்டு வந்த கனி மரம் தினமும் ஒரு கனி தான் காய்க்கும். அக்கனியை தான் மன்னன் உண்டு வந்தான். மரத்திலிருந்து விழும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் கிடக்கும். அதை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மன்னனின் காவலாட்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து வந்தனர்.  வழக்கம் போல் தடாகத்தில் தண்ணீர் எடுத்து வந்த கனகமணியின் குடத்திற்குள் அந்த கனி விழுந்து விட்டது. இதை காவலாட்களும் கவனிக்காமல் போகவே, கன்னி கனகமணியும் குடத்து நீருடன் அவள் இல்லம் சென்றாள். வரும் வழியில் இருபத்தோரு தேவதைகள் எதிரில் வந்தன. அவைகள் தாகத்தோடு இருக்கிறோம்... பெண்ணே! தண்ணீர் கொடு என்று கனகமணியிடம் கேட்க, திடுக்கிட்டாள் அவள். காரணம் முனிவர் இட்ட சாபம் நினைவுக்கு வந்தது. சாபத்தை எண்ணித் தண்ணீர் கொடுக்க மறுத்தாள். அப்போது தாகத்தால் நாங்கள் மரணித்துத் போய் விடுவோம் போல் உள்ளதே என்று கெஞ்சின. மனதைக் கல்லாக்கிய மங்கை கனகமணி தண்ணீர் கொடுக்க மறுத்து சினத்துடன் வழியை விட்டு விலகிச் செல்லுங்கள். நான் அனுதினமும் வழிபடும் அரிஹர புத்திரன் மீது ஆணை என்றுரைக்க, தேவதைகள் வழிவிட்டன.

            கானகத்தில் பசியோடு சிறந்த கனி தேடி மரத்தடி வந்தான் மன்னவன். கனியை உண்டது உங்களில் யார் என்று வினவ, காவலர்கள், தாங்கள் யாரும் இல்லை என மன்னனிடம் விளக்கி கனி மறைந்த கதையையே மீண்டும் மீண்டும் சொல்ல, மன்னனோ “கனியோடு வாருங்கள். இல்லையேல் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது’’ என்று எச்சரித்தார். மன்னன் கட்டளையை ஏற்று காவலர்கள் ஊருக்குள் சென்று எல்லா வீடுகளிலும் தேடினர். கடைசியில் கனகமணி வீட்டில் தேடும் போது குடத்திற்குள் கனி இருக்கக் கண்டனர். கனி எடுத்த காவலர்கள் கனகமணியை மன்னன் முன் நிறுத்தினர். அப்போது அவ்விடம் வந்த தேவதைகள் குடத்து நீரில் கனியை இவள் களவாடிச் சென்றிருக்கவேண்டும். அதனால்தான் குரல்வளை காய்ந்து குடிக்க நீரை மன்றாடி கேட்டும், குமரி இவள் மறுத்துப் போனதன் மர்மம் இப்போது புரிகிறது’’ என்றனர். 

            அப்போது அங்கு முதுமையடைந்த பெண்ணாய் வந்து பேச்சியம்மன், ‘‘மன்னா, இவள் களவாடவில்லை. கனி தானாக விழுந்தது’’ என்றுரைத்தும் மன்னன் கேளாமல் இவளுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள் கன்னி கனகமணிக்கு மரணதண்டனையை நிறைவேற்றினர். இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ‘‘கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்’’ என்றார். இப்பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும் தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுனையை யாரும் அபகரிக்காமலும், மற்றவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேலியிட்டுத் தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்’’ என்றார். ‘அருமையான சுனையாக மாறும் உன்னைக் காத்தருள்வேன் என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, இவ்விடம் ‘ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார்’ என்று அழைக்கப்பட்டார்.

            மன்னன் மதி மயங்கி தவறு இழைத்து விட்டேன் என எண்ணி, தனது உயிரை மாய்த்துக் கொண்டான். இருபத்தோரு தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோரின. அதன் பின்னர் அவர்களுக்குத் தனது இருப்பிடத்தில் இடம் கொடுத்துத் தனது கண்காணிப்பில் வைத்துக் கொண்டார்.

சிறு தெய்வங்கள்

            மூலவர் பூர்ணர், புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய்மாடன், வன்னியராஜன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் அருள்பாலிக்கின்றனர்.

            சுடலைமாடன், இசக்கிஅம்மன் போன்றவை துணைத் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். வன்னியராஜன் குதிரை மேல் இருப்பதுபோல இங்கு சிலை அமைத்துள்ளனர். இச்சிலை சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சுனையில் முக்தியடைந்த சுருளி மகான்

            1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி செவ்வாய் கிழமை பிற்பகலில் சுருளியிலிருந்து ஒரு மகான் குரும்பூர் இரயில் நிலையத்தில் இறங்கி மாட்டுவண்டி ஒன்றில் சுனையை வந்தடைந்தார். அங்கிருந்த ஒரு அறையில் கோயில் பூசாரி திரு. காளியப்ப ஓதுவார் அவரைத் தங்க வைத்துவிட்டுச் சென்றார்.

            மறுநாள் காலையில் பூசாரி முதலில் அந்தப் பெரியவரைக் காணச் சென்றார். அங்கே அப்பெரியவர் பத்மாசனம் இட்ட நிலையில் தலையைச் சற்றே தாழ்த்தி, கைகளைக் குவித்து நிஷ்டையிலிருப்பது போன்று காணப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பின் தான் அவர் சமாதியடைந்து விட்டார் எனத் தெரியவந்த து. உடன் மேலப்புதுக்குடியைச் சேர்ந்த திரு பி.டி. செல்வநாயகம் என்ற நபர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, காவல்துறையினரின் அனுமதியுடனும் வனத்துறை அதிகாரிகளின் சம்மதத்தின்  பேரிலும் சுனைக்குத் தெற்காகத் தாழைப்புதருக்கருகில் திரு காளியப்ப ஓதுவாரின் துணையுடன் நல்லடக்கம் செய்வித்தார்.

            பெரியவர் தேரிச்சுனையில் சமாதியடைந்த செய்தி காட்டுத்தீயாய் பரவிற்று. அதன்பின் சுனைக்கு மக்கள் போக்குவரத்து அதிகமானது. கீற்றுக் கொட்டகையிலிருந்த அய்யனார்க்குக் கல்மண்டபம் கட்டப்பெற்றது. அதன்பின் திருப்பணியும் நடந்தது.

பண்பாடு -  உணவுப்பழக்கவழக்கங்கள்

            சுனை அய்யனாரும், மானவீரவளநாட்டிலுள்ள பிற அய்யனார்களும் சைவ ஆகம நெறிகளுக்குள் அமைந்த தெய்வங்களாதலால் உயிர்ப்பலியோ, அசைவப்படையலோ அவற்றிற்குக் கொடுப்பதில்லை. அரைப்படி அரிசி பொங்கி அதன் வெண்பொங்கலே பூசையின் போது படையலாகப் படைக்கப்பெறும். பூசை முடிந்தபின் அப்பொங்கல் வழிபட வந்த பக்தர்களுக்குக் கொடுக்கப்படும். படையலின்போது தேங்காய் உடைத்து வைப்பர். வாழைப்பழங்கள், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு என்பனவும் படையல் இலையில் அல்லது தாம்பாளத்தில் இடம் பெறும். பக்தர்களுக்குக் திருநீறும், குங்குமமும் அளிக்கப்பெறும்.

            அடுப்புகள் கூட்டிக் கோட்டைப் பொங்கலிடுகின்றனர். பொங்கல் பானையில் உலை பொங்கி வரும் போது குலவைச்சத்தமிட்டு  தங்கள் நன்றியை அய்யனாருக்குச் செலுத்துகின்றனர். பொங்கல் வைக்கும் போது வந்திருக்கும் உறவினரிடமும், பிற பக்தர்களுடனும் பேசிக் கொண்டே பொங்கல் வைக்கின்றனர். இது தவறான செய்கை. அய்யனாரை மனதில் நினைத்து யாருடனும் பேசாமல் காரியமே கண்ணாக பொங்கலிடுவது தான் சிறந்த முறை.

            அய்யனார்க்கு எதிரில் உள்ள சிறு தெய்வங்களுக்கே உயிர்ப்பலியிடும் முறையுள்ளது. ஆடு, கோழி இவற்றைப் பலியிடுகின்றனர். அல்லது அவற்றை வேறெங்கோ அறுத்து அவற்றின் இறைச்சியைச் சமைத்து அச்சமையலைப் படைக்கின்றனர்.

            வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக பங்குனி உத்திரத்தன்று செம்மண் மேட்டில் சென்னையிலிருந்து வரும் பக்தர்கள் பந்தலிட்டு அன்னதானம் செய்கின்றனர். அதே போல் 10 நாள் திருவிழா நாட்களில் 6ஆம் நாள் கோயில் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அதில் பங்கு பெற்று உணவருந்தி அய்யனார் அருள் பெறுகின்றனர்.

நம்பிக்கைகள்

            முன்னொரு காலத்தில் சோவி போட்டுப் பார்த்து வரும் அன்பர்களுக்கு குறி சொல்லும் முறை அய்யனார் கோவில் வளாகத்தில் நடந்து வந்தது. குறி சொல்லியபடி நடக்கும் என்று மக்கள் நம்பினர்.   இப்போது அது நடப்பதில்லை.  அதே போல் சிலரிடம் அருள் வந்து சாமியாடுவார்கள். அவர்களிடம் நம் மக்கள் அருள் வாக்குக் கேட்பர். அவர்கள் சொல்லியபடி நடப்பதாகவும் சொல்வார்கள்.

பிற ஆய்வுகள்         

            அய்யப்பனும், அய்யனாரும் ஒன்றே என ஆய்வுகள் பல வெளி வந்துள்ளன. அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர். சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் இவரைப் ‘பிரம்மயட்சணர்’ என்றும் அழைத்து வருகின்றார்கள். ‘சாஸ்தா’ என்ற பெயரில் சமணர்கள் அய்யனாரை வழிபட்டு வந்துள்ளனர். அய்யனாரின் மனைவியர்களான பூரணை, புட்கலை சமணர்களின் சிறுதெய்வங்களாக இருந்து வந்துள்ளனர். 

            இந்தியக்கடலுக்குள் செல்லும் 90 டிகிரி மலைப்பகுதிகளில் வைடூரிய மலை இருந்தது. அம்மலைத்தொடரின் தென்பகுதியில் தென்மதுரை இருந்தது என்றும், சிவனுக்கும், மீனாட்சிக்கும் பிறந்த உக்கிரகுமாரபாண்டியன் அந்த மலைத்தொடரைச் செண்டால் அடித்து இரத்தினங்களை எடுத்தான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. செண்டு என்பது தங்கத்தால் ஆன வளைந்த தடியின் முனையில் பந்து போன்ற அமைப்புடையது என ஆய்வுகளின்வழி அறிய இயலுகிறது. இத்தகைய செண்டினைக் கையில் ஏந்தியபடி அய்யனார் பல இடங்களில் அமைந்துள்ளார். அய்யனாரே உக்கிரகுமார பாணடியனா! அல்லது அதைப் போன்றே செண்டினைப் பாண்டியன் பரம்பரையினர் ஏற்று வந்துள்ளனரா என்பது சரிவரப் புலப்படவில்லை.

            வடநாட்டில் புட்கட்லாபுரம் என்ற ஊர் அமையப்பெற்றுள்ளது. இவ்வூர் தென்னன் என்ற பாண்டியனால் ஆளப்பட்டது. புட்கலை இருந்துள்ளமையால் இவ்வூர் அப்பெயரினைப் பெற்றிருக்கலாம். புட்கலை என்பவள் குறித்துத் இருவேறுபட்ட கருத்துகள் ஆய்வுலகில் இடம்பெற்றுள்ளன. சத்யபூரணர் என்ற மகரிஷியின் புதல்விகள் எனப் பூரணை, புட்கலையைக் குறிப்பிடுவர். தெய்வ அம்சம் பொருந்திய ஆணை மணக்க விரும்பிய இப்பெண்கள் இறைவனை நோக்கிக் கடுந்தவம் செய்தமையால் இறைவன் அய்யனாரை மணக்க அருள் புரிந்ததாக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. அய்யனார் வெள்ளை யானையில் இருப்பது போலவும், வெள்ளைக் குதிரையில் இருப்பது போலவும் இருவேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளார்.

            (வஞ்சி)கொச்சியை ஆண்ட பஞ்சகன் - சிந்து மன்னன் மகள் மனோஞை இவர்களது மகள் பூரணை எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. புட்கலையின் பெற்றோர் பளிஞவர்மன்-உஞ்சயினி நாட்டு சாந்தை எனத் தெரியவருகிறது. இவன் சாபமிட்டதால்தான் சாஸ்தா அய்யப்பனாக அவதரித்ததாகக் கதை உண்டு.

            இந்திரன் அய்யனாரை வழிபட்டதாகச் செய்திகள் இருப்பதால் அய்யனார் ரிக்வேத காலத்திற்கு முற்பட்டவராகக் கருத இடமுண்டு. யுகங்கள் நான்கு சத்ய யுகம் – கி.மு 17,476 முதல் கி.மு 11,710 வரை கலியுகம்- (கி.மு 4516 - கி.மு3076) இராமன் வாழ்ந்த காலம் கி.மு 5114 சனவரி பத்து எனக் குறிக்கப் பெற்றுள்ளதால் இதுவே இந்திரன் வாழ்ந்த காலமாகும். ஒரு கல்பத்தில் 14 இந்திரன்கள் வாழ்ந்து வந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று வந்துள்ளான். 

            செம்மண் கலந்த பகுதியாக இருப்பதாலும், மண்மேடிட்ட பகுதியாக இருப்பதாலும் இப்பகுதி ஆய்வுக்குட்பட்டது எனத் தமிழாய்வு குறிப்பிடுகிறது.

            தேரி மணற்குன்றுகள் உருவான கதை குறித்தும் பேசப்பட்டு வருகிறது. நன்னன் மாங்கனி கதை போன்றே அருஞ்சுனைகாத்த அய்யனாருக்கும் கதை இருப்பதை இதன்வழி அறிய இயலுகிறது.

            அக்காலத்தில் செய்த தொழிலின் அடிப்படையிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளமையால் பிரிவுகளும் அவ்வாறே இருந்திருக்கிறது. மக்களுடைய அறியாமையினால் சாதிப்பிரிவுகள் உருவானதால் அவை குலவழிபாடுகளாக உருமாறியுள்ளதைக் காண இயலுகிறது. அய்யனார் 218 பெயரில் உள்ளதாக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

            இங்குள்ள அருஞ்சுனையில் குளித்தால் தீராத பிணிகளும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது வற்றாத சுனை என்ற பெயர் பெற்றிருந்தாலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்களில் சுனையும் வற்றி விடுகிறது.

முடிவுரை

ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பழமையினையும், மக்களின் வழிபாடுகள் முறைமைகளையும் இவ்வாய்வுக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.

கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள்...

1.பி.ஆர்.இலட்சுமி., தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்., பிரதிலிபி.காம்.,2016.

2. முனைவர் தசரதன்., (அருஞ்சுனைகாத்த அய்யனார், தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம்., சென்னை-41., 1995)

3.(http://thamizhselva.blogspot.in/2014/02/), (http://thamizhanthiravidana.blogspot.in/2010/12/17)

யூ டியூப் விடியோ சுட்டிகள் 

  1. 1.      https://www.youtube.com/watch?v=foJj1zCyMEo
  2. 2.      https://www.youtube.com/watch?v=_rZFN8j7nwg
  3. 3.      https://www.youtube.com/watch?v=NmkmLh17Aok
  4. 4.      https://www.youtube.com/watch?v=BBzmm7HyvKE
  5. 5.      https://www.youtube.com/watch?v=9ZFvqSh-nJc
  6. 6.      https://www.youtube.com/watch?v=3ufEJfNDiXU
  7. 7.      https://www.youtube.com/watch?v=Kv83JGyH38s
  8. 8.      https://www.youtube.com/watch?v=e3WkShceHgk
  9. 9.      https://www.youtube.com/watch?v=iaO0Wf-OkBM
  10. 10. https://www.youtube.com/watch?v=e5qUUdgFio4

 

-நன்றி:  ந.வைரமணி

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி
    அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் , தூத்துக்குடி
    அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி
    அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் , தூத்துக்குடி
    அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை , தூத்துக்குடி
    அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி , தூத்துக்குடி

TEMPLES

    சூரியனார் கோயில்     பாபாஜி கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சிவாலயம்     காலபைரவர் கோயில்
    நவக்கிரக கோயில்     பிரம்மன் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சிவன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    அம்மன் கோயில்     சடையப்பர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    வள்ளலார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்