திருப்புல்லாணியில் சயனகோலம், பூரியில் நின்ற கோலத்தில் காட்சிதந்த பெருமாள், இங்கு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் "மத்திய ஜெகந்நாதம்', "பூர்ணஜெகந்நாதம்' என்ற சிறப்பு பெயரைப்பெற்றுள்ளது. திருமழிசை ஆழ்வார் அவதரித்ததால் இவ்வூர் அவரது பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது. ஒருமுறை பரமசிவனும், பார்வதியும் ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, யோகத்தில் இருந்த திருமழிசை ஆழ்வாரைக்கண்ட பார்வதி, சிவனிடம் கூறி ஆழ்வாருடன் வார்த்தை விளையாடக் கூறினார். அதன்படி சிவன் ஆழ்வாரிடம் பேச, முடிவில் அவர்களுக்கிடையேயான பேச்சு வாதத்தில் முடிந்தது. ஆழ்வாரின் சொல்வன்மையை கண்டு வியந்த சிவன் அவருக்கு, "பக்திசாரர்' என சிறப்பு பெயர் சூட்டினார். சைவம் மற்றும் வைணவம் என இரு மதத்திலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றிய இவர் நான்காம் ஆழ்வார் ஆவார்.
கால் கட்டைவிரல் நகத்தில் ஞானக்கண்ணைப்பெற்ற இவர் அவதரித்த இத்தலத்தில் இவருக்கு தனிச்சன்னதி உள்ளது. கருவறை சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர், தனது வயிற்றில் ராகுவும், கேதுவும் பின்னியுள்ளபடி காட்சி தருகிறார். இவரை வணங்கிட ராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. |