கருடாழ்வார் தவம் செய்த நிலையில் பெருமாள் எதிரில் அமர்ந்த நிலையில் உள்ளார்.பெரும்பாலான பெருமாள் கோயில்களில் கருடாழ்வார் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் கருடாழ்வார் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார்.
மாங்காடு காமாட்சியம்மன் ஊசி முனையில் தவம் செய்த போது, உலகம் பஸ்பமாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டது. அவளது உக்ரத்தைத் தணிக்கும் வகையில், ஆதிவைகுண்டவாசப்பெருமாள் சங்கு சக்கரத்தை பிரயோகம் செய்யும் வகையில் அருள்பாலிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி,பூதேவி, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
பெருமாளின் சக்கர வீச்சு தன்னையும் பதம்பார்த்து விடும் என்று அஞ்சியோ, அதற்கு குந்தகம் விளைவிக்காத வகையிலோ கருடாழ்வார் அமர்ந்து விட்டார் போலும்! இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். இந்தச் சிலை மிகப்பழமையானது. |