|
||||||||
பேராசிரியர் கி. கருணாகரன் |
||||||||
பேராசிரியர் 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 -ஆம் நாள் பிறந்தார். இளங்கலை அறிவியல் படித்த அவர் மொழியியல்மீது ஆர்வம்கொண்டு, மொழியியல் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அவர்களின் வழிகாட்டுதலில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றார். பின்னர் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் முதுகலைப்பட்டம், சமூகவியல் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். தெலுங்கு, கன்னடத்திலும் பட்டயங்கள் பெற்றுள்ளார். அமெரிக்காவில் மொழிவளர்ச்சித் திட்டம் என்ற பிரிவில் உயர் பட்டயமும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் (துணைவேந்தராக) , காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தத்தில் 34 ஆண்டுகள் தனது கல்விப் பணியை ஆற்றியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் 20 ஆண்டுகள் தமிழ், மொழியியல் துறைகளில் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்தில் யார்க் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டும், அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 11 ஆண்டுகளும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களும் ஹவாய்ப் பல்கலைக்கழகத்தில் 6 மாதங்களும் கனடா டொராண்டோ பல்கலைக் கழகத்தில் 3 மாதங்களும் மலேசியாப் பல்கலைக் கழகத்தில் 8 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். மொரீசியஸ் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அவருடைய வழிகாட்டுதலில் 35 மாணவர்கள் முனைவர் பட்டமும் 50 மாணவர்கள் எம் ஃபில் பட்டமும் பெற்றுள்ளனர். 10-க்குமேற்பட்ட மிகப்பெரிய ஆய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். 30-க்குமேற்பட்ட ஆய்வு நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் அயல்நாடுகளிலிலும் தனது ஆய்வுகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் பேராசிரியர்கள் தெ.பொ.மீ., ச. அகத்தியலிங்கம், வ .அய். சுப்பிரமணியன், டி பி பட்நாயக், இ. அண்ணாமலை, எம் எஸ் திருமலை போன்றவர்களுடனும் மேலைநாடுகளில் பேராசிரியர்கள் ஆஷர், லோபெஷ், பீட்டர் ஹூக் போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நான் அவரிடம் சிறப்பாகப் பார்ப்பது... 80 வயதிலும் எவ்விதத் தளர்ச்சியும் இல்லாமல், தனது ஆய்வுப்பணிகளை - குறிப்பாக மொழியியல்துறை ஆய்வுகளை- மேற்கொண்டு வருவதே ஆகும். நாடெங்கும் அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று பேராசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தமிழகத்தில் தமிழ் மொழியியல் கழகம் ஒன்றைச் சில ஆண்டுகளுக்குமுன் தோற்றுவித்து, அதன் வாயிலாக இன்றுவரை வெற்றிகரமாக தனது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுவருகிறார். தற்போது திராவிட மொழியியல் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.
மொழியியல்துறையின் மீதான அவரது பற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் அவர் காட்டும் ஆர்வமும் உண்மையிலேயே வியக்கத்தக்கன. அவருடைய இணையரான முனைவர் புஷ்பவல்லி அவர்களும் மொழியியல் ஆய்வாளர் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் அவர்கள் தனது இளம் வயதிலிருந்தே திராவிட இயக்கத்தில் ஊறித் திளைத்தவர் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாகவேண்டும். சமூக உணர்வுடைய பேராசிரியர். அதனாலேயே சமூகமொழியியல், மொழி வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளில் மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டும் வருகிறார்.
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|