|
||||||||
மொழி ஆய்வை --- மொழி இலக்கணத்தை ஒரு தனிநபரே உருவாக்கமுடியாதா? |
||||||||
மொழி ஆய்வை --- மொழி இலக்கணத்தை ஒரு தனிநபரே உருவாக்கமுடியாதா?
--------------------------------------------------------------------------
திரு. முத்தையா சுப்பிரமணியம்
--------------------------------------------------------------------------
ஐயா. இதனை ஐயவினாவாக கருதவேண்டுகிறேன். இதுவரை எழுதப்பட்டுள்ள இலக்கணநூல்கள் ஓர் ஆசிரியரால் எழுதப்பட்டவை; ஆசிரியர்குழுவினால் எழுதப்பட்டவை அல்ல. அவற்றுக்கான் உரைகளும் அவ்வாறே.
நீங்கள் ஏன் அறிஞர்குழு புதியயிலக்கணம் எழுதவேண்டுமென்று அழைப்புவிடுக்கிறீர்கள்? தகுதியுள்ளவர் பதியயிலக்கணம் எழுதிவெளியிடட்டும். அதன் பொருத்தப்பாடுகள் விவாதங்களுக்குபின் ஏற்கப்படுமல்லவா?
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------
திரு. முத்தையா அவர்கள் நல்லதொரு ஐயத்தை எழுப்பியுள்ளார். ''பழந்தமிழ் இலக்கணங்கள் எல்லாம் தனிநபர்களால் எழுதப்பட்டவைதானே! அதுபோல இன்றும் தமிழுக்குத் தனிநபர்களே இலக்கணங்கள் எழுதலாமே! எழுதியபின்னர் அதை அறிஞர்களின் கலந்துரையாடலுக்கு முன்வைத்து, செழுமைப்படுத்திக் கொள்ளலாமே!''
சரியானதொரு ஐயமே இது என்பதில் ஐயம் இல்லை! உலகில் பொருள் உற்பத்தியோ, அறிவியல் கண்டுபிடிப்போ, ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குமுன் பொதுவாகத் தனிநபர் உற்பத்தியாகவோ அல்லது கண்டிபிடிப்பாகவோதான் அமைந்திருந்தன. அப்போது இருந்த சமூக வளர்ச்சியும் தேவையும் இந்தப் பண்பைத் தீர்மானித்தன. ''இந்தப் பானையை நான் உருவாக்கினேன்! இந்தக் கட்டிலை நான் செய்தேன்! இந்த உண்மையை நான் கண்டுபிடித்தேன்!'' என்று ஒரு தனிநபர் உரிமைகொண்டாடலாம்!
ஆனால் தொழில்புரட்சி ஏற்பட்டபிறகு, தேவையான பெருமளவுப் பொருள் உற்பத்திக்காக ... பெரிய பெரிய ஆலைகள் நிறுவப்பட்டு ... ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து ... ஒரு பொருளை உற்பத்திசெய்கிற வளர்ச்சி ஏற்பட்டது. ஒரு பொருளின் பல்வேறு பாகங்களை ... தனித்தனியே பிரித்து... ஒவ்வொரு பாகத்தையும் உழைப்பாளிகளின் ஒவ்வொரு குழுவும் உற்பத்திசெய்யத்தொடங்கினர்.
எனவே இறுதியில் ஒரு பொருளை ''நான் உற்பத்தி செய்தேன்'' என்று கூறுவதற்குப்பதிலாக ''நாங்கள் உற்பத்தி செய்தோம்'' என்று கூட்டு உழைப்பை ( production is socialised... labor is socialised) முன்னிலைப்படுத்துகிற ஒரு வளர்ச்சி நிலை தோன்றி நீடிக்கத் தொடங்கியது!
அதுபோல, ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் பல அறிவியலாளர்கள் இணைந்து செயல்படவேண்டிய தேவை ஏற்பட்டது. ஒரு அறிவியல் உண்மையின் ஒரு பகுதியை ஒரு குழு கண்டுபிடித்திருப்பார்கள்! மற்றொரு பகுதியை வேறு ஒரு குழுவினர் கண்டுபிடித்திருப்பார்கள்! ஒரு பொருளின் மிக நுட்பமான பண்புக்கூறுகளைக் கண்டறிய வேண்டுமானால், இதுபோன்ற கூட்டு உழைப்பே தேவைப்படுகிறது.
அன்று ஒரு வண்டியை ஒரு தச்சரே உருவாக்கினார். ஆனால் இன்று ஒரு ஊர்தியின் உற்பத்தியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுகின்றனர். உழைப்புப் பிரிவினை அனைத்துத்துறைகளிலும் நீடிக்கிறது. அதன் பயனாகவே... தற்போதைய அறிவியல் உலகத்தில் பிற கிரகங்களுக்கும் செல்லக்கூடிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒரு பொருளின் பகுதிகள் எவ்வளவு நுட்பமாகப் பிரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறதோ , அந்த அளவுக்கு அந்த விளைபொருளின் திறனும் மிகச் சிறந்ததாக இருக்கும்! அறிவியல் ஆய்வுகளும் அப்படியே! கோவிட் தொற்றுநோய் தடுப்பு மருந்தை ''நான் உருவாக்கினேன்'' என்று யாரும் கூறுவதில்லை! மாறாக, ''எங்கள் நிறுவனம் உருவாக்கியது'' என்றுதான் கூறப்படுகிறது! அதுவும் இன்றைய நானோதொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த உழைப்புப்பிரிவினை மிக மிக முக்கியமானது!
மருத்துவத்துறையும் பொறியியல் துறையும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள்! கண் மருத்துவர், காது மருத்துவர், பல் மருத்துவர், இதய மருத்துவர், நுரையீரல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், கல்லீரல் மருத்துவர், குடல் மருத்துவர், எலும்பு மருத்துவர், தோல் மருத்துவர் என்று எவ்வளவு உறுப்புசார் மருத்துவர்கள் இருக்கிறார்கள்! ஒரு மருத்துவரே எல்லா உறுப்புக்களுக்கும் எல்லாவகையான மருத்துவத்தையும் அளிப்பது என்பது இன்று கிடையாது! அதுபோல்தான் பொறியியல்துறையும்!
மொழி ஆய்வும் இன்று அவ்வாறே வளர்ந்துள்ளது! ஒரு மொழியின் பண்புக்கூறுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஒலியியல், ஒலியனியல், சொல்லியல், தொடரியல், பொருண்மையியல், சூழல்சார் பொருண்மையியல், பனுவலாய்வு, கருத்தாடல் ஆய்வு என்று பல்வேறு பிரிவுகள் இன்று தோன்றி நிலவுகின்றன. இதுபோன்ற வளர்ச்சியின் காரணமாகத்தான் இன்று தானியங்கு மொழிபெயர்ப்புவரை தோன்றி நீடிக்கிறது!
தமிழ்மொழியின் பேச்சொலியியலில்கூட பிரிவுகள் உள்ளன. பேச்சொலி பிறப்பியல் ஆய்வு (Articulatory phonetics) , பேச்சொலியின் இயற்பியல் ஆய்வு ( Acoustic phonetics) , பேச்சொலியின் கேட்பொலியியல் ஆய்வு (Auditory phonetics) என்று பல்வேறு பிரிவுகள் நீடிக்கின்றன. சொல்லியலை எடுத்துக்கொண்டால்கூட .. சொல்திரிபு பிரிவு (Inflectional morphology), சொல்லாக்கப் பிரிவு (Derivational morphology) என்று வேறுபட்ட பல பிரிவுகள் நீடிக்கின்றன. ஒருவர் வேற்றுமைபற்றிய ஆய்வில் ( case grammar) மிக நுட்பமாக ஆய்வு மேற்கொள்வார். மற்றொருவர் தொகையில் ( Compounds) நுட்பமான ஆய்வு செய்வார். தொடரியலில் ஒருவர் பெயரெச்சத்தொடர்பற்றி (Relative Clause) ஆய்வுசெய்வார். மற்றொருவர் பெயரடைத்தொடர் ( Adjectival phrase) பற்றிய ஆய்வை மேற்கொள்வார். மேலும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவு (Sociolinguistics, Sociology of language, Anthropological linguistics) , மொழிக்கும் மனதுக்கும் இடையில் உள்ள உறவு (Psycholinguistics) ) , மொழிக்கும் மூளைக்கும் இடையில் உள்ள உறவு (Neurolinguistics) என்று பல்வேறு பிரிவுகள் இன்று மொழி ஆராய்ச்சியில் தோன்றி நீடிக்கின்றன. ஒருவர் மொழியின் வரலாற்று வளர்ச்சியை (Historical linguistics) ஆய்வு செய்வார். மற்றொருவர் மொழி ஒப்பீட்டில் (Comparative linguistics) ஆய்வு செய்வார்.
இவ்வாறு பல முனைகளில் மொழி ஆய்வு மேற்கொள்ளப்படும்போதுதான், ஒரு மொழிபற்றிய மிக ஆழமான பண்புக்கூறுகளைக் கண்டறியமுடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட ஆய்விலேகூட வேறுபட்ட ஆய்வுமுறைகள் (different schools of thoughts) நிலவுகிறது.
எனவே தமிழ்மொழி ஆய்வும் இவ்வாறு பலமுனைகளில் ... பல தளங்களில் ... பல கோட்பாடுகளின் அடிப்படையில் ... பல ஆய்வுமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்போதுதான்... இன்றைய தேவைகளுக்கு அந்த மொழி ஆய்வு பயன்படும்!
ஒரு தனிப்பட்ட மொழி ஆய்வாளர் இன்று .. தான் மொழியின் அனைத்துக்கூறுகளையும் தானே ஆய்வுசெய்துவிட்டேன் கூறமுடியாத அளவுக்கு மொழி ஆய்வு ... மொழியியல் வளர்ந்துள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட மொழிக்கு இலக்கணம் உருவாக்குவதில் இன்று கூட்டு உழைப்பு ... கூட்டு ஆய்வு தேவைப்படுகிறது! அப்போதுதான் அந்த மொழி ஆய்வு சிறப்பாக அமையும். நமது பல்வேறு தேவைகளை நிறைவேற்றும்!
எனவே இன்றைய அறிவியல் யுகத்தில்... மொழி ஆய்வு என்பது பலரின் கூட்டு உழைப்பாகவே அமையும்; அமைகிறது! தமிழுக்கு இந்த நோக்கில் ஆய்வு செய்யும்போதுதான், தமிழின் சிறப்பும் பெருமையும் உலகிற்கு நன்கு தெரியவரும்! தமிழின் பயன்பாடு விரிவடையும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|