பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. சிவனுக்கு இத்தல பெருமாள் தரிசனம் தந்துள்ளார். மூலவரின் விமானம் ஜெகஜோதி விமானம் எனப்படும். பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் என்பவன் துரோணரின் மகன்.
இவன் இறந்துவிட்டான் என சொன்னால், துரோணர் நிலை குலைந்து விடுவார் என்பது திட்டம். தர்மன் உண்மையை மட்டுமே சொல்வான் என்பதால், அவனை விட்டு அஸ்வத்தாமன் என்ற சொல்லை பலமாக சொல்லி யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் கூற செய்தனர். இதனால் போரில் துரோணாச்சாரியர் கொல்லப்பட்டார். தான் சொன்ன பொய்யினால் தான் துரோணர் கொல்லப்பட்டார்.
அவரது இறப்புக்கு தானே காரணம் என நினைத்து, நினைத்து தர்மன் மனம் வருந்தினான். பின் போர் முடிந்த பிறகு மன அமைதிக்காக இத்தலத்திற்கு வந்து தவம் இருந்ததகாகவும், கோயிலை புதுப்பித்தாகவும் கூறப்படுகிறது. தர்மர் இத்தலம் வந்து வழிபாடு செய்வதற்கு முன்பே இமையவர்கள் இங்கு வந்து திருமாலைக்குறித்து தவம் இருந்தனர். இவர்களது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், தந்தைக்கு நிகராக தரிசனம் கொடுத்தார். இதனால் தான் இத்தல பெருமாள் "இமையவரப்பன்' என அழைக்கப்படுகிறார்.இக்கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர் செங்குன்றூர். |