பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டு பலன் பெறலாம். ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,""நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்லி அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.
காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான். அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார்.
அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது. |