திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம், இக்கோயிலில் உள்ளது. திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். இங்குள்ள மண்டபத்தில் பூமாதேவியுடன் வெங்கடேசர், சூரியன், மகாலிங்கம், மகாகாளி, நாகாத்தம்மன், சுவர்ண பைரவர் உள்ளனர். தூண்களில் ராமாயண கதாபாத்திர சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
மார்க்கண்டேயருக்கு அருள்புரிய, எமனை சிவன் காலால் உதைக்கும் சிற்பத்தை ஆயுள் அதிகரிக்க வேண்டுகின்றனர். வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. லிங்கத்தின் ஆவுடையாரில் கோயில் குறித்த செய்திக் குறிப்பை கல்வெட்டாக பொறித்துள்ளனர். பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். |