பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. பஞ்சபாண்டவர்கள் வன வாசத்தின் போது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்ததை கண்டு, அதை நகுலன் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதை நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இவ்வூரில் பூமியை தோண்டும் போது புதிய பெருமாள் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதை இக்கோயிலுக்கு கொண்டுவந்து புதிய சன்னதிகளும் மண்டபங்களும் கட்டப்பட்டன.
இக்கோயில் வட்டவடிவமான கருவறையுடன் அமைந்திருப்பதும் பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிப்பதும் மிகவும் சிறப்பு. இக்கோயிலின் மேற்கு புற வாசலில் நுழையும் போது வாசலின் மேல், காளிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் ஆடுவது போல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு வாய்ந்தது. அந்த கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டுபுறமும் தசாவதாரக்காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது. மூலவரின் விமானம் சகல வேத விமானம். பெருமாளை நாரதர், மார்க்கண்டேயர் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். |