பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசிக்கலாம். திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.
தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள்.
பிருகு மகரிஷி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய மகாலட்சுமி, பெருந்தேவி தாயார் என்று பெயர் பெற்றாள். சரஸ்வதி பூஜை, வைகாசி திருவிழாவில் ஒருநாள், பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்று முறை மட்டும் வரதராஜர் இவளுடன் சேர்த்திக்காட்சி தருகிறார். |