|
|||||
2016 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள் |
|||||
இறைவன் படைப்பிலே எத்தனையோ ஜீவராசிகள் இப்பூவுலகில் தோன்றி மறைந்தாலும் மனிதப்பிறவியே அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் ஐந்தறிவைப் படைத்த இறைவன் மனிதனுக்கு மட்டுமே ஆறறிவைப் படைத்துள்ளான். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு? மற்றவர்களுக்குக் கிடையாது.
இப்படிப்பட்ட மனிதப் பிறவியில் தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் எவ்வளவோ ஆசைகள் அபிலாஷைகள் இருந்தாலும் அவை எல்லாம் நிறைவேறுகிறதா என்றால் இல்லை என்றே எண்ணத் தோன்றும். காரணம் நாம் நினைக்கும் அல்லது நாம் விரும்பும் செயல் அனைத்தும் நம் கையில் இல்லை என்பதே உண்மையாகும். காரணம் மனித வாழ்க்கை பஞ்ச பூதங்களோடும் கிரகங்களோடும் வாணியலோடும் சம்பந்தப்பட்டு சுற்றிச் சுழன்று வருவதே காரணமாகும்.
ஒருவர் முயற்சி செய்யாமலே வெற்றியடைவதும் சிலர் எவ்வளவு முயற்சி செய்தும் எண்ணிய செயல் நிறைவேறாமல் போவதற்கும் அடிப்படைக் காரணம் அவரவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இச்சென்மத்தில் பலன்களை அனுபவிப்பதே ஆகும். இவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுவதே ஜோதிடமாகும்.
ஜோதிடம் வேதங்களோடும், மதங்களோடும், கிரகங்களோடும் நட்சத்திரங்களோடும், பஞ்சபூதங்களோடும் வானியல் கணிதங்களோடும் கணித சூத்திரங்களோடும் முற்பிறவி மறுபிறவி முன்ஜென்ம பாவ புண்ணியங்களோடும் தொடர்புடையது.
கிரகங்கள் எதுவும் நிற்பதில்லை, அவை தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சேர்த்தே சுற்றி வருகின்றன. இந்த கிரகங்கள் சுற்றி வரும் நிகழ்வே பெயர்ச்சி என்கிறோம். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு கிரகங்கள் செல்வதே கிரகப் பெயர்ச்சி என்று குறிப்பிடுகிறோம்.
நவக்கிரகங்கள்: மொத்தம் 9 ஆகும். இதில் ராகு, கேது நீங்கலாக மற்றவையெல்லாம் வானில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கிரகங்கள் ஆகும். நவக்கிரகம் 7 ஆகும். இதில் ராகு கேது ஆகிய இரண்டும் சேர்ந்து 9 ஆகக் குறிப்பிடுகிறோம்., இந்த ராகு கேது இரண்டும் “நிழல் கிரகங்கள்” ஆகும். இவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் மனித வாழ்க்கையில் இந்த இரண்டு கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிய அளவில் செயல்படுகிறது. நவக்கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெரிவது சூரியன், சந்திரன் ஆகும். இந்த சூரியன், சந்திரனை ராகு கேது பிடிக்கும் நிகழ்வே கிரகணம் ஆகும். ஆக ஒளிவிடும் கிரகங்களான சூரியன், சந்திரனையே பிடிக்கும். ஆற்றல் இந்த ராகு கேதுக்கு இருக்கையில் மனிதன் எல்லாம் எம்மாத்திரம் என்பதே கேள்வியாகும். இவர்கள் சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் நிகழ்வே “சூரிய கிரகணம்” மற்றும் சந்திரன் கிரகணம் ஆகும்.
இப்படிப்பட்ட விஷேச தன்மையைப் பெற்றுள்ள ராகு கேது பெயர்ச்சி ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன மாதிரியான நிகழ்வுகளை நடத்தப் போகிறார் என்பதுடன் அவர் ஏற்படுத்தும் நற்பலன்களையும் தீய பலன்களோடு வரும் “2016ம்” வருட ஆங்கிலப் புத்தாண்டில் ஏற்படும் ஒவ்வொரு லக்னதாரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை பொதுப்படையாக இங்கு விவரித்துள்ளோம்.
பஞ்சாங்கத்தில் இரண்டு வகையான பஞ்சாகங்கள் உண்டு. ஒன்று “வாக்யப் பஞ்சாங்கம்” என்பது மற்றொன்று “திருக்கணிதப் பஞ்சாங்கம்” என்பது ஆகும். வாக்யம் பஞ்சாங்கப்படி கோயில்களில் கிரகப் பெயர்ச்சி விழாக்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. இது வழிவழியாக கடைபிடிக்கப்படுவது. திருக்கணிதம் என்பது அன்றாடும் ஆகாயத்தில் நிலவும் கிரகங்களின் சுழற்சியின் அடிப்படையில் கணிக்கப்படும் கணித நிகழ்வாகும். நம் இந்திய அரசாங்கம் வெளியிடும் ராஷ்டிரியப் பஞ்சாங்கம் “திருக்கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கமாகும்.
இங்கு நாம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் பொழுது அதாவது சுமார் 1 ½ வருடத்திற்கு அவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஏற்படுத்தும் நற்பலன்களையும் தீய பலன்களையும் பொதுவாக இங்கு கணக்கிட்டுள்ளோம்.
இக்காலங்களில் 2016ம் ஆண்டும் சேர்ந்து வருவதால் 2016ம் வருடத்திற்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களையும் அத்துடன் ராகு கேது பெயர்ச்சி பலன்களையும் கணக்கிட்டு எழுதியுள்ளோம்.
பொதுவான “பலன்கள்’ என்றாலே ராசி மட்டுமே நம் நினைவுக்கு வரும். அதனால் தான் பெரும்பாலும் இதற்கு “ராசி பலன்கள்” என்று பெயர் வந்தது. பொதுவாக ராசி பலன்கள் என்றாலே அவரவர் ராசியின் அடிப்படையில் மட்டுமே பலன்கள் கூற முற்படுகையில் நாம் இங்கு ஒவ்வொருவரும் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் ராகு, கேது பெயர்ச்சி மற்றும் 2016ம் வருட ஆங்கில வருடத்திற்கான பலன்களை குறிப்பிட்டுள்ளோம்.
“லக்னம்” என்பது உயிர் ஆகும். “ராசி” என்பது உடல் ஆகும். இந்த உயிர் இல்லாமல் உடல் இயங்காது, எனவே உயிரின் அடிப்படையில் இங்கு பலன்கள் கூறப்பட்டுள்ளது. உங்கள் ஜாதகத்தில் எல்லோருக்கும் ராசி எது என்று தெரியும். அதே சமயம் “லக்னம்” எது என்றால் அநேகம் பேருக்குத் தெரியாது. இந்த “லக்னம்” என்பதை வைத்தே சகலவிதமான பலன்களும் நடைபெறும் என்பதே உண்மையாகும். எனவே தான் இங்கு “லக்னப்பலன்கள்” என்ற அடிப்படையில் பலன் உரைக்க உள்ளோம்.
உங்களுக்கு “லக்னம்” எது என்று அறிய உங்கள் ஜாதகக் கட்டத்தில் “ல” என்று எந்த ராசியில் குறிப்பிட்டுள்ளதோ அதுவே “லக்னம்” ஆகும். அது ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியின் பெயர் என்னவோ அதுவே உங்கள் லக்னம் ஆகும். அதன் அடிப்படையிலேயே பலன் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் ராசி எது என்பதை எப்படி அறிந்து கொண்டுள்ளீர்களோ அதே அளவு உங்கள் “லக்னம்” எது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வதே உத்தமம் ஆகும். எனவே பலன்கள் அறிவதற்கு லக்னம் ராசி இவை இரண்டையும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்வது நலம்.
இங்கு பொதுவான நற்பலன் மற்றும் தீயபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது பொதுப்பலனேயன்றி சிறப்புப் பலன் அல்ல. அவரவர் தனிப்பட்ட ஜாதகப்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் வேறுபடும். எனவே ஒருவரது தனிப்பட்ட ஜாதகமே நன்மை, தீமைகளை எடுத்துரைக்க வல்லதாகும். அத்துடன் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தசாபுத்திகள் நடந்து கொண்டிருக்கும். அவற்றின் பலன்கள் அவரவது தனிப்பட்ட ஜாதகப்படி நற்பலன்களை அளிக்கவல்லதாகவோ கெடுபலன்களை கொடுப்பாதகவோ அமையும். எனவே அவற்றையும் கணக்கில் கொள்ளல் வேண்டும்.
எனவே வாசகர்கள் தங்கள் சொந்த ஜாதகத்துடன் இந்தப் பலன்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2016 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் இராகு கேது பெயர்ச்சியில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று சகல நன்மைகளும் பாக்யங்களும் பெற்று வாழ அன்னை அபிராமியை வேண்டுகிறோம்.
- ஜோதிட இமயம் அபிராமி சேகர்
maduraiabiramisekar@gmail.com
|
|||||
by Swathi on 21 Dec 2015 0 Comments | |||||
Tags: Ragu Kethu Peyarchi 2016 Ragu Kethu Peyarchi Ragu Kethu Peyarchi Palangal Meenam Rasi ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|