பெயர்: ஹேமா ஜெய் பிறந்த ஊர்: ஈரோடு வசிக்கும் ஊர்: சால்ட்லேக் சிட்டி , அமெரிக்கா., பணி / தொழில்: கணினி மென்பொருள்
நவீன குடும்பங்களின் சிக்கல்களை, பெண்கள் மற்றும் முதியவர்களின் உளப் பிரச்சனைகளை மையக்கருவாகக் கொண்டு மென் வாசிப்பு ஆக்கங்களாக எழுதும் ஆர்வம் கொண்ட ஹேமா ஜெய் இதுவரை 10 நாவல்களையும் 25- க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
இவருடைய பல படைப்புகள் இணைய, அச்சு இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. ஹேமாவின் நூல்கள் பற்றிய சிறு அறிமுகம் இங்கே.
பூக்கள் விற்பனைக்கல்ல மருத்துவமும் பெருத்த வியாபாரமாகி விட்டதோ என எண்ணத் தோன்றும் இந்த நாட்களில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட கரு மருத்துவராக நாயகி, சமூகக் குற்றங்களை மக்கள் கண்முன் கொண்டு வரும் பொறுப்பான ஊடக இளைஞனாக நாயகன் என்றமைந்த இந்தக் கதை துறைசார்ந்த தவறுகளை, குற்றங்களைச் சுட்டுவதோடு நிற்காமல் அந்தத் துறையின் நியதிகளையும், அறங்களையும் விவாதிக்கும் நாவல் இது.
ஆனந்தி கொங்கு வட்டாரத்தில் விசைத்தறிப் பட்டறைகளில் பின்புலத்தில் அமைந்த கதை. அங்கே சிறு வயதிலேயே முதிரா காதல், அவசரத் திருமணம், அடுத்தடுத்த குழந்தைகள், கடன் சுமை என இருபது வயதுக்குள் தங்கள் மொத்த வாழ்க்கையையே வாழ்ந்து முடித்து விடுகிற ஆனந்தி போன்ற எளிய மனிதர்களின் வாழ்வை உணர்வுப்பூர்வமாகப் பேசும் நாவல்.
ஆயிரம் ஜன்னல் மனசு ஆணோ, பெண்ணோ பொதுவாக நட்பென்பது ஒரு பிரத்யேக உறவு. அந்த உறவு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமாக இருக்கும் போது சமூகத்தில் கூடுதல் கவனம் பெறுகிறது. எந்த உறவைப் போலவும் அதற்கும் எல்லைக்கோடுகள் கண்டிப்பாக உண்டு. அந்த நட்புக்கான வரம்பு மீறல்களை, வரம்புகளைச் சுவைபட விவாதிக்கிற நாவல் இது.
காதல் கஃபே தாய்மை என்பது பெண்களுக்குக் கிடைத்த அரிய வரம். அதை அதீதப் புனிதப்படுத்தி அந்நிலையை அடைய இயலாதவர்களை மனதளவில் சிதைத்துக் கொண்டிருக்கிறது இச்சமூகம். அந்தச் சமூக மாயைகளை உடைத்து குறைபாடுள்ள ஒரு பெண்ணை விரும்பி மணக்கும் இளைஞன் ஒருவன் அவளுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்கிற அனுபவம் பாண்டிச்சேரி பிரெஞ்சுப் பின்புலத்தில் கதையாகியிருக்கிறது.
பூவிதழ் தூரிகை வாழ்க்கை என்பது பலருக்கு ரோஜாக்களிலான படுக்கையாக இருப்பதில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு வாழ்க்கைத் துணையே குத்திக் கிழிக்கும் முட்களாக அமைந்து விட்டால் வாழும் நாட்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் சுவையைத் தந்து விட்டுப் போகும் வல்லமை வாய்ந்தவை. தன் திருமண வாழ்வை இயன்றளவு காத்துக் கொள்ள முயலும் பெண்ணொருத்தி அது இயலாது என்று உணரும் கட்டத்தில் என்ன செய்கிறாள் என்பதே இந்நாவல்.
மலரினும் மெல்லிய குழந்தைகள், பெண்கள் மீதான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இன்று நாம் நாள்தோறும் வாசிக்கிற செய்திகளாகி விட்டன. அப்படித் தனது குழந்தைப் பருவத்தில் அப்படியொரு துன்புறுத்தலுக்கு ஆளான ஓர் இளம்பெண் வழியாக ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பில் கவனம் கொள்ள வேண்டிய அம்சங்களை அக்கறையுடன் சொல்லும் நாவல்.
விழிகள் தீட்டும் வானவில் வாழ்க்கையில் தாம் இருக்கும் நிலையை விட ஓரடி முன்னே சென்று நிற்பது தான் அனைவருக்குமான விருப்பமாக இருப்பினும் வாழ்ந்து வீழும் குடும்பங்களில் இருந்து வரும் இளைஞர்களின் தேடல் மிகுந்த ஆழமும் தீவிரமும் கொண்டவை. அவர்களுடைய தவறவிட்ட தருணங்களை, மன அழுத்தங்களை, ஏமாற்றங்களினால் இறுக்கப்பட்டுப் போன அவர்களுடைய உணர்வுகளைப் பேசும் இந்நூல் வளர்ந்த பிறகான அவர்களின் பக்குவத்தையும் சொல்கிறது.
பனி இரவும் தனி நிலவும் தன் தலைமுறையில் முதல் மனிதியாக அயல் நாட்டில் வசிக்க வருகிற இளம்பெண், புது வாழ்க்கைச் சூழலில் அவளுடையஅனுபவங்களே கதையாகிறது. அவள் மூலமான பொருளாதார நன்மைகளை அனுபவிக்கும் பெற்றோர் அவளுடைய காதலுக்கும் திருமணத்திற்கும் தடைக்கல்லாக இருப்பதும் இன்றைய மாறிவிட்ட பெற்றோர்களின் மனநிலையையும் பதிவு செய்கிறது.
பட்டாம்பூச்சி பற பற சாதி மதம் பார்த்துப் பெண்ணின் காதலை மறுதலிக்கும் ஒரு தாய் தான் ஏற்பாடு செய்து திருமணம் செய்வித்த மூத்த மகளின் வாழ்விலிருந்து சில பாடங்களைக் கற்றுக் கொள்கிறாள். மாறி வரும் சமூகச் சூழலில் மனித உறவுகளிடையே ஏற்படும் சவால்களுக்கும், காலம் காலமாக அழுத்தமாக மனதில் ஊறிய பழமையான எண்ணங்களுக்கும் இடையேயான யுத்தத்தின் சில கோணங்களே கதையாக.
நீ நான் நாம் வாழவே பரஸ்பரத் துன்பம் அளிக்கும் திருமணத்தில் இருந்து விடுதலை அளிக்கிற விவாகரத்து எனும் வாய்ப்பு பல குடும்பங்களில் அற்ப விஷயத்துக்காக கையில் எடுக்கக் கூடிய மலிந்த ஆயுதமாக மாறி வருகிறது. அப்படி தான் எடுக்கும் ஆயுதத்தின் விபரீதங்கள் புரியாமல் பிரயோகித்து விட்டு பின் அதன் விளைவுகளைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் கதை இது.
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
|