நேத்ராவதி நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், பிரசாத குங்குமமும் ஈரமாக இருக்கிறது. பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.உக்கிரமாக இருந்த அம்மனை தேவர்களும், முனிவர்களும் அபிஷேகம் செய்து குளிர்வித்தனர்.
இதன் அடிப்படையில் அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் நடக்கிறது. வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்னை தீர பக்தர்கள் இளநீர் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் காலை கோயில் இவற்றை அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். வாரம் மூவாயிரம் இளநீர் அபிஷேகம் செய்யப்படும்.
தமிழகத்தில் மதுரை மல்லிகைக்கு பெயர் பெற்றுள்ளது போல, கர்நாடகாவில் உடுப்பி சங்கரபுரம் மல்லிகை புகழ்பெற்றதாக உள்ளது. அம்பாளுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இது முக்கிய இடம் பிடிக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, இந்த மலரை வாழைநாரில் தொடுத்து அணிவிக்கின்றனர். |