இங்குள்ள மூலவர் கருவறையில் மகாகணபதி, சரஸ்வதி, பத்ரகாளி, சுப்ரமணியர் ஆகியோர் களிமண் விக்கிரகத் திருமேனியராகக் காட்சி தருவது சிறப்பு.அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுகள் மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களின் குறிப்புகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மையான ஆலயம் இது. இப்படியான ஆலயத்தையும், இங்கேயுள்ள அழகு மிகுந்த மூர்த்தங்களையும் உலகில் வேறெங்கும் கண்டதில்லை என, 1442-ஆம் வருடம் இந்தியாவுக்கு வருகை தந்த யாத்ரீகர் அப்துல் ரஸாக் ஹிஸ்ரா, குறிப்பு எழுதியுள்ளார்.
இந்த ஆலயத்தைக் கட்டிய மன்னன் சுராதா, பொன் மற்றும் வைரத்தாலான மணிமுடியை மூலவிக்கிரகத்தில் அணிவித்து, அழகுபார்த்தான் என்கிறது ஸ்தல வரலாறு. கெலாடியை ஆட்சி செய்த மன்னனின் பட்டமகிஷி, தன்னுடைய செலவில் அழகிய தேர் ஒன்றை வழங்கினாளாம். மன்னர் சுராதா பின்னாளில் அரச பதவியை இழந்து காட்டில் வாழ்ந்தார்.
அப்போது அங்கிருந்த துறவி ஒருவருக்குச் சேவைகள் செய்துவந்தார். பிறகு, வணிகர் ஒருவருடன் சேர்ந்து, ராஜராஜேஸ்வரியை மூலிகை மருந்துகளால் உருவாக்கி, ஆலயம் எழுப்பி, அம்பிகையை வழிபட்டார். அதன் பயனாக, எதிரிகளை வென்று, தன் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றார். |