|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 6- குறலோடு உறவாடு - கவிஞர் மதுரை சு.பெ. பாபாராஜ் - தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 6- குறலோடு உறவாடு - கவிஞர் மதுரை சு.பெ. பாபாராஜ் - தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும் அறிமுகம்: மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. சு.பெ. பாபா ராஜ் அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார். திருக்குறளுக்காக மிகப்பெரும் பணியைச் சத்தமில்லாமல் ஆற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமை வாய்ந்தவர். அடிப்படையிலேயே கவிதை எழுதுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இவருக்குத் தமிழ் மொழி மீதான ஆர்வம் இன்னும் அதிகமாக ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். திருக்குறள் பணிகள்: திருக்குறள் இரண்டடி வெண்பாவால் ஆனது. அவற்றை நான்கடி வெண்பாக்களால் எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் படி மாற்று வடிவம் கொடுத்துள்ளார். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களையும் தனித்தனியே நான்கடி வெண்பாக்களாக எழுதி புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். குழந்தைகள் விரும்பும் வண்ணம் 133 அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரமாகச் சுருக்கி குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் தாள லயத்துடன் பாடல்களாக எழுதியுள்ளார். மேலும் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இன்பத்துப்பால் பாடல்களைக் குழந்தைப் பாடல்களாக எழுதியுள்ளார். ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியில் ‘வள்ளுவன் வாக்கு’ என்ற நிகழ்ச்சியையும் செய்துள்ளார். கம்பராமாயணத்தைக் குறள் வடிவில் கண்டுள்ளார். கவிச்சாரல், கவியமுதம், மகரவிளக்கு போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பிடித்த குறளும், அதிகாரமும்: திருக்குறளில் தொடர்ந்து தோய்ந்து வரும் இவர் வீஒவி குடும்பத்தில் இணைந்துள்ளார். இவருக்குப் பிடித்த குறளாக, ‘இன்னா செய்தாரை ஒறுத்தர் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்ற குறளைக் குறிப்பிடுகிறார். பிறர் தமக்குத் தீமை செய்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கம் தன்னிடம் இயல்பாகவே அமைந்துள்ளதால் இக்குறள் தனக்கு மிகவும் பிடித்த குறள் என்று குறிப்பிடுகிறார். ‘வான் சிறப்பு’ அதிகாரம் தனக்கு மிகவும் பிடித்த அதிகாரம் என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் வான் மழை இல்லையேல் எதுவும் இல்லை. உலகம் வாழ உதவும் மழையைப் பற்றிக் கூறும் ‘வான் சிறப்பு’ அதிகாரம் தனக்கு மிகவும் பிடித்தமான அதிகாரம் என்றும் குறிப்பிடுகிறார். சிறப்புகள்: திருக்குறளைப் பல கோணங்களில் கண்ட இவருக்கு அப்துல் கலாம் அவர்கள், வைரமுத்து அவர்கள், சாலமன் பாப்பையா அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் பாரதி, பாரதிதாசன் ஆகியோருக்காக நடத்தப்பட்ட விழாக்களிலும் சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இயற்றியவற்றுள் சில… ஒப்புரவறிதல் ‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் திருவள்ளுவர் எழுதிய இக்குறளை மதுரை பாபா ராஜ் அவர்கள், “பிறருக் குதவுகின்ற பண்பாளர் செல்வம் படர்ந்திருக்கும் பாகங்கள் எல்லாம் - நிறைவாய் மருந்தாய்ப் பயன்படும் நல்ல மரம்போல் பயன்படும் நாள்தோறும் பார்” இவ்வாறாக மாற்று வடிவம் கொடுத்துள்ளார். இன்பத்துப்பால் பாடல்களைக் குழந்தைப் பாடல்களாக மதுரை பாபா ராஜ் அவர்கள் இயற்றியுள்ளார். ஊடலுவகை ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்’. திருவள்ளுவர் இயற்றிய இக்குறளை, ‘என் உயிர்த்தோழி கலையரசி ஆறாவது படிக்கின்றாள். எழிலரசி நானோ ஏழாவது படிக்கின்றேன். இருவரும் இணைபிரியாத தோழிகள். நட்பு என்ற முகத்தின் இருவிழிகளே நாங்கள் தான். எங்களுக்குள் பொய்க்கோபம், செல்லச் சிணுங்கல், பழுப்பு காண்பித்தல் போன்ற குறும்புகளும் உண்டு. பொய்க்கோபத்தில் ஆத்திரம் கொண்டு விலகிச்செல்வோம். தணிந்தவுடன் மீண்டும் சரிசரி மன்னிச்சுக்கோடி என்று சேர்ந்து சிரிப்போம். நட்பிற்கு இன்பமே செல்லச் சண்டைதான். பிரிந்து சேரும்பொழுது அந்தச் சண்டைமீட்டுவதே ஓர் இன்பராகந்தான்… என்று குழந்தைப்பாடல்களாக புதிய நோக்கில் திருக்குறளை அணுகியுள்ளார்.
|
|||||
by Lakshmi G on 21 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|