|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 1 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன? |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 1 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன? அறிமுகம்: வள்ளுவரின் ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற வாய்மொழிக்கு ஏற்ப திகழ்பவர் டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் ஆவார். இவர் உலகிலேயே மிக அதிகமான அளவில் பன்மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர். இவருடைய தாய்மொழி மலையாளம் எனினும் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். இந்திய வன உயிரின அறக்கட்டளையில் மூத்த இயக்குநராக புது தில்லியில் பணிபுரிகின்றார். திருக்குறளின் மீது நீங்காத பற்று உடையவராக திகழ்கின்றார். இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் பயின்று 1985 ம்ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். மேலும் வன உயிரின அறிவியலில் முது அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். அஷ்ராஃப் பரந்துபட்ட நூல்களை வாசிக்கும் திறன் உடையவராக விளங்குகின்றார். இவர் டெல்லியிலிருந்த பொழுது இணையதளத்தில் மிகப்பெரும் தத்துவ ஞானியான கன்பூஷியஸ் அவர்களின் நூலின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை ஒருங்கே கண்டார். அப்போது திருக்குறளில் இதுபோன்ற பணியைச் செய்யலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. இத்தூண்டுதலே பின்னாளில் 23 மொழியின் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் திரட்டும் ஆற்றலைத் தந்தது. 14 வெளிநாட்டு மொழிபெயர்ப்புகளையும் 9 இந்திய மொழிபெயர்ப்புகளையும் அஷ்ராஃப் தன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். பல அரிய மொழிபெயர்ப்புகளை இவர் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொழிபெயர்ப்புகளைத் திரட்டுதல்: திருக்குறளினையும் பன்மொழிகளில் தனித்தனியாக மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் இவற்றை மொத்தமாகத் திரட்டி ஒரு வலைத்தளத்தில் பதிவிட்டால் பயனுள்ளதாக அமையும் என்று எண்ணி அஷ்ராஃப் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் திரட்ட தொடங்கினார். இவரின் பணியிடங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடமும் பிற வெளிநாடுகளுக்குச் செல்லும் நண்பர்களிடமும் உதவி நாடி அதன் வாயிலாக சில மொழிபெயர்ப்புகளைப் பெற்றுள்ளார். மேலும் நூலகங்களுக்குச் சென்று தேடிப் பெற்றார். சில சமயங்களில் இணையதள வர்த்தகங்களில் சில மொழிபெயர்ப்புகளைக் கிடைக்கப்பெற்றுள்ளார். இவ்வாறு அஷ்ராஃப் தன்னார்வலர்களின் மூலம் திருக்குறளின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பும் போலிஷ் மொழிபெயர்ப்பும் பெற்றார். இவ்வாறாகத் திருக்குறளின் 25 மொழிபெயர்ப்புகளைப் பதிவிட்டுள்ளார். அவற்றில் 23 மொழிபெயர்ப்புகள் முழுமையானவை ஆகும். உலகில் யாரும் இத்தனை திருக்குறள் மொழிபெயர்ப்புகளைப் பதிவிட்டது இல்லை என்ற சிறப்பினை அஷ்ராஃப் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்புகளின் பிரிவு: பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இருந்தமையால் அவற்றை அஷ்ராஃப் வகைமைப்படுத்தியுள்ளார். அவை, 1. இந்திய மொழிபெயர்ப்புகள் 2. ஆசிய மொழிபெயர்ப்புகள் 3. ஐரோப்பிய மொழிபெயர்ப்புகள் ஆகியனவாகும். எதிர்கொண்ட சவால்கள்: பல சோதனைகளுக்குப் பின்பே சாதனை மனிதனைச் சென்றடையும் என்ற சொல்லுக்கு இணங்க அஷ்ராஃப்பின் அரிய பணிக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. அவ்வாறு வந்த சவால்கள் ஏராளமானவை ஆகும். இவர் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை வலைத்தளத்தில் பதிவிடத் தொடங்கிய காலத்தில் தட்டச்சுப் பணியே பெரிய இடர்பாடாக அமைந்தது. அஷ்ராஃப் முதன்முதலில் திருக்குறளின் மலையாள மொழிபெயர்ப்பைப் பதிவேற்றம் செய்தார். அச்சூழலில் பொது எழுத்துரு எனப்படும் யூனிக்கோடு என்பது இல்லை. இதன்காரணமாக பதிவேற்றம், பெரும் சிக்கலாக அமைந்தது. இத்தகையச் சூழலில் அஷ்ராஃப்க்கு அவரின் குடும்பத்தினர் பெரிதும் உதவியுள்ளனர் என்றால் அது மிகையாது. சில இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்பினைப் பதிவேற்றுவதற்கு ஸ்கேன் வசதி அவருக்கு அப்போது அமைந்திருக்கவில்லை. எனவே பதிவேற்றுதல், பெரும் சவாலாக அமைந்தது. இதைத்தவிர வெளிநாட்டு மொழிபெயர்ப்புகளைப் பெறுவதில் பல தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அரேபிய மொழிபெயர்ப்பினைப் பெறப் பலரின் உதவிகளை நாடியுள்ளார். பல இடங்களில் ஒரே ஒரு பிரதி மட்டும் இருந்த சூழலில் அதனைப் பெறுவதில் சிக்கல்களை அஷ்ராஃப் சந்தித்துள்ளார். சீன மொழி மற்றும் ஜப்பானிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைப் பெற்று அம்மொழிகள் அறிந்த நபர்களிடம் தட்டச்சு செய்து பெறுவது போன்ற இடர்பாடுகள் இருந்தாலும் தம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்ய அஷ்ராஃப் தயங்கி நிற்கவில்லை. பல்வேறு மாநாடுகளின் மூலமும் உதவிகளைப் பெற்றுள்ளார். இத்தகு மேம்பட்ட பணியைச் செய்பவர்க்கு சில எதிர்பாரா உதவிகள் கிடைப்பது வியப்பன்று. அஷ்ராஃப்பிற்கு மின்னஞ்சல் மூலமும் தபால் மூலமும் சில மொழிபெயர்ப்புகள் கிடைத்துள்ளன. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பதற்கு ஏற்ப தானறிந்த திருக்குறளின் பெருமையை உலகறிந்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவராக அஷ்ராஃப் இருந்ததால் சாதனையாளர் ஆக உள்ளார் என்பதில் ஐயமில்லை. |
|||||
by Lakshmi G on 26 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|